வியாழன், 18 நவம்பர், 2010

3ஜி தரும் பயன்கள்

பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் நவம்பர் முதல் நமக்கு 3ஜி சேவை பல நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து வழங்க உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெகு காலமாகவே, தகவல் தொழில் நுட்பத்தில் இந்த 3ஜி வகை சேவையினை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.  நாம் தாமதமாக இதனைப் பெற்றாலும், அதிக மக்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இங்கு உள்ளது. தகவல் பரிமாற்றத்தில், டேட்டா வேகமாக அனுப்பப்பட்டு பெறப்படுவதே அதன் அடிப்படையான ஒரு செயல்பாடாகும். 3ஜி இதனைத் தருவதுடன், மிகத் தெளிவான ஒலி பரிமாற்றத்தையும் தருகிறது. மேலும் ஒரே நேரத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் பரிமாற்றத்தை 3ஜி மூலம் மேற்கொள்ள முடியும். இந்தியாவில் அண்மைக் காலத்தில் பேஸ்புக்  மற்றும் ட்விட்டர் போன்ற சமுதாய இணைய தள சேவைத் தளங்களால், டேட்டா பரிமாறப்படுவது அதிகரித்துள்ளது. அதே போல ப்ளிக்கர் மற்றும் யு–ட்யூப் போன்ற தளங்களால், வீடியோ, இமேஜ் தகவல்களும் பரிமாறப் பட்டு வருகின்றன. இவற்றுக்கு இன்னொரு காரணம், டாட்டா டொகோமோவில் தொடங்கி  பல தொலைதொடர்பு நிறுவனங்கள், மிகக் குறைவான கட்டணத்தில் டேட்டா பரிமாறிக் கொள்வதற்கு அளித்து வரும் திட்டங்களாகும்.  
பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடங்கி வைத்த 3ஜி சேவையினை, இனி பல தனியார் நிறுவனங்கள் தர இருக்கின்றன. 3ஜி சேவையில் பலப் பல  புதிய தொழில் நுட்ப மாற்றங்களையும் பயன்பாடுகளையும் காண இருக்கிறோம். ஏற்கனவே முதன்மையான பயன்பாடுகளை இந்த மலரில் குறிப்பிட்டு எழுதி உள்ளோம். இன்னும் சிலவற்றை இங்கு காணலாம்.
1. லைவ் டிவி – கூடவே வரும் செய்திகள்: 3ஜி மூலம் மொபைல் போனில், ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடப்படுவதை லைவ்வாக, எங்கு சென்றாலும் பார்த்துக் கொண்டே செல்லலாம்.  அதே போல, டிவி ஒன்றை நாடித்தான், செய்திகளைப் பெற வேண்டும் என்பதில்லை. எந்த நேரத்திலும் செய்திகள் ஒளிபரப்பப் படுவதனை, மொபைல் மூலம் பெறலாம்.
2. இமெயில் மற்றும் பைல் பெறுதல்: 3ஜி மூலம் நமக்கு வந்துள்ள இமெயில் செய்திகளை மொபைல் போன் வழியாக, எந்த நேரத்திலும் பெற முடியும். அதே போல அனுப்பவும் முடியும். நமக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் பைல்களையும் இதே போலப் பெற முடியும். நாம் தயாரித்து வைத்துள்ள ஆவணங்களில், எந்த நேரத்திலும்  எடிட் செய்து மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
3. மொபைல் ஒரு முனையமாக: மொபைல் போனை இனி ஒரு ஆன்லைன்  டெர்மினல் போலப் பயன்படுத்த 3ஜி வழி தருகிறது. திடீரென நமக்குக் கிடைத்து வரும் இன்டர்நெட் இணைப்பு செயல்படாமல் போகும்போது, மொபைல் போனை நம் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டருடன் இணைத்து, இணைய மோடம் போலப் பயன்படுத்தலாம். இதனால் எந்த நேரத்திலும் சூழ்நிலையிலும் நமக்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும்.
4. வீடியோ ஸ்ட்ரீமிங்: நாம் நண்பர்களுடனும், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் வீடியோ பைல்களை, எளிதாக மற்றவர்களுக்கு அனுப்ப, காண முடியும். வேகமான பரிமாற்றத்தை 3ஜி மூலம் பெற முடியும்.  இவற்றைப் பதிந்து கொள்வதற்கும் 3ஜி உதவிடும்.
5. இணைய வழி அழைப்புகள் – வி.ஓ.ஐ.பி. (Voice Over Internet Protocol (VOIP): மிகப் பெரிய அளவில் பேண்ட்வித் எனப்படும் தகவல் பரிமாற்றத்திற்கான அலைவரிசையை, 3ஜி தருகிறது.  ஏற்கனவே நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வரும் ஸ்கைப் போன்ற புரோகிராம்கள் மூலம், குறைந்த கட்டணத்தில் நம்மால் நம் நண்பர்களுடன், அவர்கள் எங்கிருந்தாலும் பேச முடியும். வீடியோ வழி உரையாடலையும் மேற்கொள்ள முடியும்.
6. அதிக வேகத்தில் கூடுதல் தகவல்: பல வேளைகளில் நாம் பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்து, பின்னர் படிக்கிறோம். அதிகமாக ட்விட்டர் போன்ற தளங்களைப் பயன்படுத்துபவர்கள், அதில் உள்ள லிங்க்ஸ் தரும் இணைப்புகளை இதே போல்தான் பயன்படுத்தி வருகின்றனர்.  ஜி.பி.ஆர்.எஸ். வழங்கும் வேகம் மிக மிகக் குறைவாக உள்ளதால்  இவ்வாறு செயல்படுகிறோம்.  3ஜி மூலம் இந்தக் குறை நிவர்த்தி ஆகும். வேகமாக டேட்டா கிடைப்பதால், லிங்க் இணைக்கும் அந்த வேளையிலேயே பைல்களைக் காண முடியும்.
7. துல்லிய ஒலி அனுபவம்: சிக்னல் கிடைக்கல, வாய்ஸ் விட்டு விட்டு வருது, பேசறது ஜாம் ஆகுது – போன்ற உரையாடல்களை நாம் 3ஜியில் சந்திக்க மாட்டோம். மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் ஒருவர் பேசுவதை  இதன் மூலம் நாம் பெற முடியும்.     உங்கள் குழந்தையின் மழலையை, நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், பக்கத்தில் இருந்து பேசுவது போலக் கேட்டு ரசிக்கலாம். மொத்தத்தில், இதுவரை தொழில் நுட்ப நீண்டநாள் கனவாக இருந்த 3ஜி சேவை, இப்போது கையில் வந்துவிட்டது.  சிறிய வணிகர்கள் இதன் சேவையினை முழுமையாகப் பயன்படுத்தித் தங்கள் வர்த்தகத்தினை மேம்படுத்தலாம். இன்னும் இன்டர்நெட் நுழையாத கிராமங்களில் உள்ள மக்கள், 3ஜி மூலம் அதனைப் பெறலாம். வலைமனைகளை இணையத்தில் உருவாக்கி செயல்பட்டு வருபவர்கள், இடைஇடையே இணைப்பு அறுந்து போகும் இன்டர்நெட்டை விட்டு, 3ஜி சேவை மூலம் தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
பல துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவிற்கு, 3ஜி ஒரு வரப்பிரசாதமாகக் கிடைத்துள்ளது. அனைவரும் இதனைப் பயன்படுத்தி நம்மையும் நாட்டையும் வளப்படுத்துவோம்.

மாணவர்களுக்கான சயின்டிபிக் கால்குலேட்டர்

இளம் மாணவர்களுக்கு அவர்களின் கல்விப் பயணத்தில், கால்குலேட்டர், குறிப்பாக சயின்டிபிக் கால்குலேட்டர் ஒரு முக்கியத் தேவையாக அமைந்துள்ளது. ஆனாலும் அவற்றிலும் சில எல்லைகள் உள்ளன. நாம் விரும்பும் அனைத்து சமன்பாடுகளையும் அதில் மேற்கொள்ள முடியாது. அல்லது பல மாணவர்கள் இது குறித்துத் தெரியாமல் உள்ளனர். இந்தக் குறையைத் தீர்க்க, இணையத்தில் ஸ்பீட் க்ரஞ்ச் (Speedcrunch)   என்ற பெயரில் ஒரு சயின்டிபிக் கால்குலேட்டர் புரோகிராம் கிடைக்கிறது. இதனை http://speedcrunch.googlecode.com/ files/SpeedCrunch-0.10.1.exe  என்ற முகவரியில் இருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். இந்த புரோகிராமின் பைல் அளவு 2.5 எம்.பி.  இறக்கி, கம்ப்யூட்டரில் பதிந்திடலாம்.  இதன் சிறப்பம்சம், இதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என, மிகத் தெளிவாக ஹெல்ப் மெனுவில் தந்திருப்பதாகும்.   இதனால் ஒரு சயின் டிபிக் கால்குலேட்டரில் நாம் எதிர்கொள்ளும் தடுமாற்றங்கள் இதனைப் பயன்படுத்துகையில் இருக்காது. பயன்பாடும் அதனைக் காட்டிலும் கூடுதலாகவே கிடைக்கிறது. எனவே அறிவியல் பயிலும் அனைத்து மாணவர்களும் இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

கூகுளின் லோகோ மியூசியம்

கூகுள் தேடுதல் தளங்களை, ஒரு நாளில் ஒரு முறையேனும் பார்க்காதவர்கள் இருக்க மாட்டார்கள்.   நாம் செல்ல விரும்பும் தளங்களின் பெயர்களை டைப் செய்து, அதில் தவறுகளைத் திருத்துவதனைக் காட்டிலும், அது சார்ந்த பொருள் குறித்து, தகவல் தேடி, கிடைக்கும் முடிவுகளில் நாம் செல்ல இருக்கும் தளத்திற்கான லிங்க்குகளில் கிளிக் செய்பவர்களே அதிகம். எடுத்துக்காட்டாக, என் நண்பர் ஒருவர் தான் பயணம் செய்திட, ட்ரெயின் டிக்கட் பதிவு செய்திட, கூகுள் தளம் சென்று, அதன் முகவரியில் நான்கு எழுத்துக்களை மட்டும் டைப் செய்து, அந்த தளத்திற்கான லிங்க் பெற்று, கிளிக் செய்து செல்வார். ஏன், இதனைப் புக்மார்க்காக அமைத்துக் கிளிக் செய்திடலாமே என்று கேட்டால், இதுதான் எளிது; செய்து பாருங்கள், சார் என்பார்.
சரி, இன்றைய விஷயத்திற்கு வருவோம். கூகுள் பொதுவாக, தன் தேடுதல் தளத்திற்கான பெயர் அமைத்திடும் இலச்சினையை, அன்றைய நாளுக்கேற்றபடி வித்தியாசமாக அமைத்திடும். தீபாவளி, சுதந்திர தினம் போன்ற குறிப்பிட்ட நாட்டின் விசேஷமான தினமாக இருந்தாலும் சரி, அன்னையர் தினம் போன்ற பன்னாடு தழுவிய தினமாக இருந்தாலும், ஒலிம்பிக்ஸ் போன்ற உலகளாவிய விளையாட்டு விழாவாக இருந்தாலும், அதற்கேற்ப அந்த இலச்சினை அமையும். இவை வேடிக்கையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் இருக்கும். இதில் வருத்தம் தரும் செய்தி, அந்த பண்டிகை அல்லது கொண்டாட்டம் முடிந்தவுடன் இவையும் காணாமல் போகும். வழக்கமான இலச்சினை மட்டுமே காட்டப்படும்.   சரி, இந்த இலச்சினைகளை எல்லாம் மொத்தமாக நாம் பார்க்க முடியாதா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா! அதற்கான விடை தான் கூகுள் லோகோ மியூசியம்.  உங்கள் பிரவுசரில் Google.com  செல்லுங்கள்.  அங்கு தேடுதல் கட்டத்தில் “Google Logos” என டைப் செய்திடவும்.  கிடைக்கும் லிங்க்ஸ் பட்டியலில், முதலில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்து செல்லவும்.  உடனே, 2000 ஆண்டு முதல், கூகுள் காட்டிய அனைத்து லோகோக்களும் வைத்திருக்கும் தளத்திற்குச் செல்வீர்கள். பார்த்து ரசியுங்கள்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 ஒரு கோடி டவுண்லோட்

வெளியிடப்பட்டு ஆறு வாரங்களில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 சோதனைத் தொகுப்பு, ஒரு கோடி பேரால் டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப் படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், பிரவுசர்களில் உள்ள 12 அம்சங்களை மட்டுமே பயன்படுத்துவதாக ஆய்வுகள்  தெரிவிக்கின்றன. இதனால், மைக்ரோசாப்ட் தன் பிரவுசரின் புதிய பதிப்பில், அதிகக் குழப்பமில்லாத பயனாளர் முகப்பினைத் தந்துள்ளது. அத்துடன் விண்டோஸ் 7 சிஸ்டத்தின் அடிப்படையில், இணைய தளங்களில், அவற்றின் பக்கங்களில் உள்ள தகவல்கள் முதன்மையாகத் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளன.
இதே போல, டாஸ்க்பாரில் தளங்களை பின் செய்திடும் வசதி, டேப்  ஒன்றினைத் தனியே பிரிக்கும் வசதி, இரண்டு தளங்களை, ஒரேநேரத்தில் அடுத்தடுத்து வைத்துக் காணும் வசதியும் தரப்பட்டுள்ளன. இந்த சோதனைத் தொகுப்பிற்கு பல்லாயிரக்கணக்கில் பின்னூட்டுகளும், சோதனைத் தளங்களில் இருந்து முடிவுகளும் கிடைத்துள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், புதிய பிரவுசரைப் பலராலும் விரும்பப்படும் பிரவுசராகத் தரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ல் வெளியான பின் இரண்டு நாட்களில் 20 லட்சம் பேரால் டவுண்லோட் செய்யப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இதனை டவுண்லோட் செய்திட விரும்புபவர்கள் கீழ்க்காணும் முகவரிக்குச் செல்லவும்.
http://www.beautyoftheweb.co.uk/

சாம்சங் கேலக்ஸி டேப்ளட் பிசி

பெர்சனல் கம்ப்யூட்டர்கள் நமக்குக் கிடைத்த நாளிலிருந்து, தொழில் நுட்ப வளர்ச்சி முடங்கிவிடாமல், தொடர்ந்து வளர்ந்து கொண்டுள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களைத் தொடர்ந்து, மக்கள் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கைகளில் வைத்து இயக்க கம்ப்யூட்டர்களை எதிர்பார்த்தனர். அதற்கென லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கிடைத்தன.  பின் இந்த லேப்டாப் கம்ப்யூட்டர்களில், டச் ஸ்கிரீனை எதிர்பார்த்த மக்களுக்கு   டேப்ளட் பிசிக்கள் கிடைத்தன. ஆனால் மக்களின் பயன் பாட்டில்,  தொடக்கத்தில் இவை இடம் பெறவில்லை. லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் எடை குறைவாக, எளிதாகக் கையாள ஒரு கம்ப்யூட்டரைத் தேடினார்கள். அதற்கான விடையாக, நெட்புக் அல்லது நெட் டாப் கம்ப்யூட்டர்கள் கிடைத்தன. இவற்றைக் காட்டிலும் சிறியதாக, 5 முதல் 10 அங்குல அகலத்தில் தொடுதிரையுடன் கூடிய கம்ப்யூட்டரை நாடிய போது, முன்னர் அறிமுக நிலையில் இருந்த டேப்ளட் பிசிக்கள், புதிய விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அறிமுகமாகி வருகின்றன.
பெர்சனல் கம்ப்யூட்டரை முதலில் கொண்டு வந்த ஆப்பிள் நிறுவனமே, டேப்ளட் பிசியையும் அறிமுகப்படுத்தியது. ஆப்பிள் தன் ஐ–பேட் சாதனத்தை இந்த வகையில் கொண்டு வந்தது. ஆனால் இதன் பயன்பாடு மக்களின் தாகத்திற்குச் சரியான தீனி இடாததால், 2010 ஆம் ஆண்டில் பல நிறுவனங் கள் டேப்ளட் பிசிக்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளன.
டேப்ளட் பிசிக்களைப் பல நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கிவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்களிடம் இடம் பிடிக்க இருக்கும் இந்த சாதன விற்பனைச் சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் இடம் பிடிக்க இப்போதிருந்தே தயாராகி வருகின்றன. அந்த வகையில், அண்மையில் சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி டேப்ளட் பிசி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. அதன் சிறப்புகளை இங்கு காண்போம்.
 ஐ–பேட்  டேப்ளட் பிசிக்கு போட்டியாக இது சந்தையில் உலா வரும் என்று அனைவரும் கணித்துள்ளனர்.  ஏறத்தாழ ஐ–பேட்   சாதனத்தைப் போல வடிவில் இருந்தாலும் (பரிமாணம் 190.09 து 120.45 x  11.98மிமீ ), கேலக்ஸியின் டி.எப்.டி. திரை 7 அங்குல அகலம் கொண்டு தொடுதிரை யாக   உள்ளது. (ஐ–பேட் திரை 9.7 அங்குலம்). இது ஒரு சிறிய நூல் வடிவில் உள்ளது. இரண்டின் பரிமாணமும் ஒரே வகையில் இருந்தாலும், ஐ–பேட் சாதனத்தின் எடையைக் காட்டிலும் குறைவாக 380 கிராம்  எடை உள்ளது.  எனவே ஒரே கையில் பிடித்து, நடந்து கொண்டிருக்கும் போதே இதனை எளிதாக இயக்கலாம்.  இதன் திரை  1024 x  768 ரெசல்யூ சனில் பார்ப்பதற்கு பளிச் என உள்ளது.
இதன் கீ போர்டு அழுத்துவதற்கு மற்ற கீகளின் இடையூறு இன்றி எளிதாக உள்ளது. இந்த வகையில் இது ஒரு மிகப் பெரிய பிளாக் பெரி ஸ்மார்ட் போன் போலத் தோற்ற மளிக்கிறது.  இதில் ஆண்ட்ராய்ட் 2.2. ப்ரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஒரு கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசருடன் இயங்குகிறது. டெஸ்க்டாப், ஸ்லைடிங் அப்ளிகேஷன் ட்ரே, விட்ஜெட்கள், மேலாக உள்ள ஸ்டேட்டஸ் பார் ஆகியவை மாற்றப்படாமல் அப்படியே உள்ளன. அலெர்ட் கிடைத்தால், விரல் தொட்டு இழுத்து அமைத்துக் கொள்ளலாம்.
எலக்ட்ரானிக் டெக்ஸ்ட்களைப் படிக்க, சாம்சங் இதில் மூன்று அப்ளிகேஷன்களைத் தந்துள்ளது. நியூஸ் படிக்க ப்ரெஸ் டிஸ்பிளே (Press Display) , இபுக் படிக்க கோபோ (Kobo) இதழ்கள் வாசிக்க ஸினியோ (Zinio) . இதழ்களைப் படிக்கும் போதுதான், இன்னும் கொஞ்சம் கூடுதல் அகலத்தில் திரை இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆண்ட்ராய்ட் மார்க்கட் அப்ளிகேஷன் ஸ்டோரை, மிக எளிதாக இதன் திரை மேலுள்ள ஐகான் அழுத்திப் பெறலாம். விரைவாக அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்திட முடிகிறது.
பிளாஷ் பிளேயர் 10.1 இதில் இயங்குவதால், இணையப் பக்கங்களை வேகமாக இயக்கிப் பார்க்க முடிகிறது.
கொடுக்கப்பட்ட மெமரி கார்ட் ஸ்லாட் மூலம், இதன் நினைவகத்தினை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.  GSM/GPRS/EDGE நெட்வொர்க்கில் இயங்கும் இந்த டேப்ளட் பிசியில் 3ஜி நெட்வொர்க் இணைப்பும்  தரப்பட்டுள்ளது. அதிவேக இணைய பிரவுசிங் மேற்கொள்ள வை–பி  உள்ளது. மற்ற சாதனங்களுடன் வயர்லெஸ் இணைப்பிற்கு புளுடூத் 3.0 கிடைக்கிறது.
டேப்ளட் பிசியின் முன்பக்கத்தில், வீடியோ அழைப்புகளுக்கு 1.3 மெகா பிக்ஸெல் கேமராவும், பின்புறம் வழக்கமான 3 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமராவும்  தரப்பட்டுள்ளது. வழக்கமான ஜியோ மேக்னடிக் சென்சார் இணைப்புடன், கைரோ ஸ்கோப் சென்சார் மற்றும் ஆக்ஸிலரோமீட்டர் ஆகியன இணைந்துள்ளன.
இதனைப் பயன்படுத்துபவர்கள், ஹை டெபனிஷன் வகை திரைப்படங்களை இதன் 7 அங்குல திரையில் பார்த்து ரசிக்க முடியும்.  இதில் Swype  எனப்படும் திரையில் இயங்கும் கீ போர்டும் கிடைக்கிறது. ஆபீஸ் டாகுமெண்ட்களைக் காண Think Free Suite   என்ற அப்ளிகேஷன் தரப்படுகிறது.  இதில் தரப்பட்டுள்ள திறன் கொண்ட பேட்டரி யினால், ஏழு மணி நேரம் தொடர்ந்து இந்த டேப்ளட்  பிசியை இயக்கலாம். அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டேப்ளட் பிசி, ஆசிய நாடுகளிலும் படிப்படியாக விற்பனைக்கு வந்துள்ளது.  இந்தியாவில் வரும் டிசம்பர் இறுதிக்குள், இது விற்பனைக்கு வரலாம். மேற்கு நாடுகளில் இதன் விலையைப் பார்க்கையில், இந்தியாவில் இது அதிக பட்சமாக ரூ.40,000 என்ற அளவில் இருக்கலாம் என்று எதிர்பபார்க்கப்படுகிறது

விண்டோஸ் வேகமாக இயங்க டிப்ஸ்

நம்மில் 90% பேர் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறோம் என்பது, பன்னாட்டளவில் அறியப்பட்ட உண்மை. அதன் இயக்கம், அதனுடன் நமக்கேற்பட்ட பழக்கம் அவ்வாறான ஓர் இடத்தை அதற்கு அளித்திருக்கிறது. விண்டோஸ் இயக்கத்தை இன்னும் வேகமாக இயக்கி, திறன்களை எளிதாகப் பெற இங்கு டிப்ஸ்கள் தரப்படுகின்றன.
1.மினிமைஸ்: பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்குகையில், பல விண்டோஸ்கள் திறக்கப்படும். இவை அனைத்தையும், திரையில் திறந்து வைத்தவாறே இயக்க வேண்டாம். எந்த விண்டோவில் பணியாற்று கிறீர்களோ, அதனை மட்டும் திறந்து வைக்கவும். மற்றவற்றை மினிமைஸ் செய்து வைக்கவும்.
2. இமெயில் போல்டர்: இமெயில் கிளையண்ட் எதுவானாலும், மொத்தமாக அவற்றை ஒரே இன்பாக்ஸில் போட்டு வைக்க வேண்டும். இதிலும் போல்டர்களை ஏற்படுத்தி, மெயில்களைப் பிரித்து வைக்கவும். அவ்வப்போது படித்து, முக்கியத்துவம் இழந்த மெயில்களை நீக்கவும்.
3. சரியான பயன்பாடு: போல்டர்களுக்குச் சரியான பெயர் கொடுத்து, மெயில்களைப் பொருள் வாரியாகப் பிரிக்கவும். ஒரே போல்டரில், அதிக மெயில்களைத் தேக்குவது போல்டர்கள் அமைத்த நோக்கத்தை செயல்படுத்தாது.
4. அப்புறம் பார்க்கலாம்: பின் நாளில் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் பல மெயில்கள் வரும். இவற்றிற்கென ஒரு போல்டரை உருவாக்கி அதில் போட்டு வைத்து, நேரம் கிடைக்கும்போது கண்டறிந்து, நீக்கவும்.
5. பிரவுசரின் தேடல் சாதனம்: உங்களுக்கென விருப்பமான தேடல் சாதனத்தினை, மாறா நிலைக்கு (டிபால்ட்) தேர்ந்தெடுத்து அமைக்கவும். இல்லையெனில், லிங்க்கில் கிளிக் செய்திடுகையில், சிஸ்டம் அமைத்த சர்ச் இஞ்சினும் , நீங்கள் பயன்படுத்த இன்னொன்றுமாய் கிடைக்கும்.
6.பைல் பெயர் மாற்றம்: பைல்களின் பெயர்களை மாற்ற விரும்புகிறீர்களா? நிறைய பைல்கள் மாற்றப்பட வேண்டுமா? முதல் பைலைத் தேர்ந்தெடுக்கவும். எப்2 அழுத்தவும். புதிய பெயரை டைப் செய்திடவும். இனி, என்டர் அழுத்தாமல், டேப் கீ அழுத்தவும். எக்ஸ்புளோரர் உங்களை அடுத்த பைலுக்கு எடுத்துச் செல்லும். அந்த பைலின் பெயர் தானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாற்றத்திற்குத் தயாராய் இருக்கும். பேக் ஸ்பேஸ் கீயெல்லாம் அழுத்த வேண்டாம்.
7. இமெயில் செக்கிங்: அடிக்கடி உங்கள் இமெயில்களை செக் செய்து பெறும்படி அமைக்க வேண்டாம். இதனால், உங்கள் வழக்கமான கம்ப்யூட்டர் பணியில் தேவையற்ற குறுக்கீடு இருக்கும். எனவே எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை செக் செய்திட வேண்டும் என்பதனை, இதன் அடிப்படையில் அமைக்கவும்.
8. பல பைல் தேர்ந்தெடுக்கும் எளிய வழி: ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் தேர்ந்தெடுக்கிறீர்களா? கண்ட்ரோல் அல்லது ஷிப்ட் கீயை அழுத்தித் தான் பலரும் இந்த செயலை மேற்கொள்கிறோம். இதனால் சில வேளைகளில் தவறுகள் ஏற்படுகின்றன. இதற்கு மாற்றான வழி ஒன்றும் உள்ளது.  முதலில் Organize>Folder and search options>View என்று செல்லுங்கள். பின்னர் கீழாகச் சென்று Use check boxes to select items என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.  இதன் மூலம் டிக் செய்து பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
9. ஸ்பேம் நீக்கவும்: உங்களுடைய கம்ப்யூட்டரில் ஸ்பேம் மெயில்களை வடிகட்டுவதற்கென புரோகிராம் இல்லை எனில், உடனடியாக ஒன்றை இன்ஸ்டால் செய்திடவும்.
10. விண்டோஸ் 7 கால்குலேட்டர்: விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளில் கால்குலேட்டர்கள் இணைந்தே தரப்பட்டன. ஆனால் சில சிறப்பான கால்குலேட்டர் செயல்பாடுகளுக்கு, இணைய தளங்கள் தரும் இலவச கால்குலேட்டர் புரோகிராம்களை பதிந்து பயன்படுத்தினோம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் நீங்கள் இயங்கிக் கொண்டிருந்தால், வேறு ஒரு புரோகிராமிற்குச் செல்ல வேண்டியதில்லை. இதில் கிடைக்கும் கால்குலேட்டர் மிகச் சிறப்பானதாகப் பல செயல்பாடுகளைத் தாங்கி உள்ளதாக அமைந்துள்ளது.
11. பிரச்னை பதிவு: விண்டோஸ் இயக்கத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு, உங்கள் டெக்னீஷியனை அடிக்கடி அழைத்து, பிரச்னைகள் குறித்து நிறைய விளக்கம் தர வேண்டியுள்ளதா? நீங்கள் சொல்வது அவருக்கும், அவர் கேட்பது உங்களுக்கும் புரியாமல், பல தொலைபேசி அழைப்புகளை   வீணாக்குகிறீர்களா? இது தேவையே இல்லை.  Windows’ Problem Steps Recorder  என்பதை இயக்கினால் போதும். வரிசையாக, ஒவ்வொரு ஸ்டெப் ஆக, என்ன நடை பெற்றது என்று உங்களுக்கு இது காட்டும். இதனைப் பெற PSR  என ஸ்டார்ட் மெனு சர்ச் பாக்ஸில் டைப் செய்திடவும். மிக விலாவாரியாக, ஸ்கிரீன் ஷாட்களுடன் உங்கள் பிரச்னைகளை இதில் காணலாம்.
12. திரை இடம் பெரிதாக: டாஸ்க்பார் ஐகான் பெரிதாக அமைந்து, மானிட்டர் திரையில், நீங்கள் இயங்கும் இடம் சுருங்குகிறதா? டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து Properties > Use small icons  என அமைக்கவும்.  இதன் மூலம் அனைத்து ஐகான்களும் பாதியாக அதன் அளவில் குறையும். நீங்கள் இயங்க அதிக இடம் கிடைக்கும்.
13. சிறிய, பெரிய எழுத்துக்கள்: எழுத்துக்களை அமைத்துவிட்டு, அதனை முழுமையாகப் பெரிய எழுத்துக்கள் அல்லது முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக அமைக்க வேண்டுமா? ஒவ்வொரு எழுத்தாகத் தேடிச் சென்று மாற்ற வேண்டாம். மாற்ற வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து, பின்னர், ஷிப்ட் + எப்3 கீயை அழுத்தினால், இந்த ஆப்ஷன்கள் வரிசையாகக் காட்டப்படும். தேவையானதை எடுத்துக் கொள்ளலாம்.
14. பின் அப்: விண்டோஸ் 7 தொகுப்பில் எதனையும் டாஸ்க்பாரில் பின் செய்தி டலாம். அடிக்கடி பயன்படுத்தப் படும் போல்டர்கள், கண்ட்ரோல் பேனல், ஏன் ஒரு செயல்பாட்டிற்கென அமைக்கப் பட்ட பட்டனைக் கூட இதில் அமைத்திடலாம்.
15. ஆட் ஆன் நேரம்: உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு இயக்கத்திற்குக் கிடைக்க அதிக நேரம் ஆகிறதா? இதனுடன் இணைந்த ஆட் ஆன் தொகுப்பே இதற்குக் காரணம். Tools>Manage Addons  சென்று ‘Load time’  என்பதில் ஒவ்வொரு ஆட் ஆன் தொகுப்பிற்கான நேரம் பார்க்கலாம். பின்னர், அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் புரோகிராமினை, தேவை இல்லை என்றால் நீக்கிவிடலாம்.

லினக்ஸ் எதிர்ப்பார்ப்புகள்

சென்ற வாரம் லினக்ஸ் சிஸ்டம் குறித்து எழுதிய பின்னர், பல வாசகர்கள், தாங்கள் எந்தவிதத் தயக்கமும் இன்றி லினக்ஸ் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள் ளனர். வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு லினக்ஸ் சிஸ்டம் மிகவும் உதவியாக உள்ளது எனவும் பலர் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் லினக்ஸ் உபுண்டு பதிப்பு 10.10, பயன்படுத்துபவருக்கு இயக்க எளிமையாகவும், பயன்கள் பல தருவதாகவும்  கூறியுள்ளனர்.  அதே சமயத்தில் பாதுகாப்பு மற்றும் பயன்களில் சிறிதும் குறைவின்றி இருப்பதாகவும் கூறி உள்ளனர்.
ஆனால் புதியதாக லினக்ஸ் பயன்படுத்தும் பலர் தாங்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்கள் இதில் இல்லயே எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இது லினக்ஸின் குற்றம் இல்லை. லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் இப்போது ஒரு புதிய சுதந்திரமான உலகை அனுபவிப்பார்கள். அடிக்கடி தொகுப்புகளை மற்றும் அதற்கேற்ற கம்ப்யூட்டர்களை, அதிக கட்டணத்தில் மாற்றும் வேலை இல்லை. எது எப்போது கம்ப்யூட்டருக்குள் வந்து, நம் தகவல்களை, பைல்களைத் திருடுமோ என்ற அச்சம் இல்லை. எப்போது சிஸ்டம் முடங்கிப் போய் நம் வேலைகளை நிறுத்துமோ என்ற கவலை இல்லை.  ஆனால், விண்டோஸ் தொகுப்பில் இருந்து மாறியதால், பயனாளர்களுக்குச் சிறிது எதிர்பார்ப்புகள் நிறைவேறாதது போலத் தோற்றமளிக்கலாம்.  அவை இதுவரை விண்டோஸ் சிஸ்டத்திலேயே ஊறிப்போனதன் விளைவுதான். அவற்றை இங்கு காணலாம்.
1. விண்டோஸ் எதிர்பார்ப்பு: மனிதர்கள் என்றைக்கும் பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர்கள். இதனாலேயே உபுண்டு மற்றும் பிற லினக்ஸ் பதிப்பு வழங்குபவர்கள், விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் தரும் பயன்களை, லினக்ஸ் பதிப்புகளிலும் புகுத்தியுள்ளனர். குறிப்பாக, உபுண்டு பதிப்பு, விண்டோஸ் தரும் பல வசதிகளை உள்ளடக்கியுள்ளது. ஆனால், இவற்றில் சற்று சிறிய அளவில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்திடும். பழகிய மனமோ, விண்டோஸ் போலவே இல்லை என்று எதிர்பார்ப்பில் சற்று வருத்தப்படுகிறது. இது போகப்போக சரியாகிவிடும்.
2. "ரூட்' வழி தேவையில்லை: விண்டோஸ் இயக்கத்தின் அட்மினிஸ்ட்ரேட்டர் போல, லினக்ஸ் "ரூட்' வழி கொண்டிருந்தாலும், பயனாளராகப் பலர் இதனை, எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி முழு சுதந்திரத்துடன் பயன்படுத்த முடியும். இந்த வகையில்,  முழுமையான பாதுகாப்பினை லினக்ஸ் தருகிறது. "ரூட்'  வழியாகத்தான் செல்ல வேண்டுமோ என்ற தயக்கம் பலரிடத்தில் உள்ளது. இந்த பயம் தேவையில்லை. தேவையிருப்பின் "ரூட்' வழி செல்ல பாஸ்வேர்ட் பெற்று செல்லலாம். இந்த தேவை எப்போதாவதுதான் ஏற்படும்.
3. சாப்ட்வேர் இலவசம்: விண்டோஸ் இயக்கத்தில் பழகிய பின்னர், பல சாப்ட்வேர் தொகுப்புகள் பயன்பாட்டிற்கு இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் ஒரு எல்லைக்குப் பின் இவற்றைக் கட்டணம் செலுத்தியே முழுமையாகப் பயன்படுத்த முடிகிறது. அந்தக் கவலை லினக்ஸில் இல்லை. பெரும்பாலும் அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளும் இலவசமாகவே கிடைக்கின்றன. ஒவ்வொரு லினக்ஸ் பதிப்பும் ஒரு மையத்தைக் கொண்டு இயங்குகின்றன. அங்கு அனைத்து பயன்பாட்டு தொகுப்புகளும் பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, உபுண்டு பதிப்பிற்கு, உபுண்டு சாப்ட்வேர் சென்டர் இயங்குகிறது.
4. கட்டளை வரி தயக்கம்: கமாண்ட் லைன் எனப்படும் கட்டளை வரி, லினக்ஸில் அடிப்படையாக இயங்குகிறது. இது விண்டோஸ் இயக்க பயனாளர்களுக்கு முற்றிலும் புதியதாக உள்ளது. ஆனால் பழகப் பழக, மிகவும் எளிதாக தயக்கம் விலகி பயன்பாடு பயனுள்ளதாக மாறுகிறது.
5. ஒட்டிக் கொள்வீர்: மாற்றம் எப்போதும் மனிதனுக்குச் சற்று பயத்தையும் தயக்கத்தினையும் தருகிறது. தொழில் நுட்பம் மிக எளியதாக இருந்தாலும், மாற்றம் எப்போதும் சற்று கடினமாகவே தெரிகிறது. ஆனால் எண்ணிப் பாருங்கள்! விண்டோஸ் அல்லது மேக் சிஸ்டம் இயக்கத்தினைத் தொடக்கத்திலிருந்து கற்று தெரிந்தா வந்தீர்கள்? அதே போலத் தான்  லினக்ஸ் சிஸ்டம் பழக்கமும். இதனால் உங்களுக்குப் பயன்கள் அதிகம் என்றால்,  போகப் போக இதனைப் பயன்படுத்துவது பிடித்துப் போக, தொடர்ந்து பயன் படுத்தத் தொடங்கி விடுவீர்கள். அல்லது இரண்டையும் பயன்படுத்து வீர்கள்.

புதிய வைரஸ் எச்சரிக்கை

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள சிறிய குறை காரணமாக, புதிய வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஒருவர் தொலைவில் இருந்தே, இன்னொருவரின் கம்ப்யூட்டரைத் தன் வயப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இது ஒரு ஸீரோ டே அட்டாக் (Zero Day Attack)  ஆக இருக்கும்.  ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு களைத் தயாரித்து வழங்கும் சைமாண்டெக் நிறுவன வல்லுநர் விக்ரம் தாக்கூர்   இது பற்றிக் கூறுகையில், இமெயில் மூலம் கவனத்தைத் திருப்பி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனத்தைப் பயன்படுத்தி, வைரஸ் அல்லது வேறு மால்வேர் உள்ளே புகலாம் என்று கூறியுள்ளார்.  தாக்குதலுக்குக் குறி வைத்துள்ள நிறுவனம் அல்லது குழு உறுப்பினர் ஒருவருக்கு, இமெயில் ஒன்றை அனுப்பலாம். அதில் அந்நிறுவனம் அல்லது குழுவின் இணையதளம் போலவே தோற்றம் அளிக்கும், தளம் ஒன்றிற்கான லிங்க் தரப்பட்டிருக்கும். இந்த லிங்க்கில் கிளிக் செய்திடுகையில், அந்த தளம் காட்டப்படும். பின்னணியில், மால்வேர் அல்லது வைரஸ், மேலே தரப்பட்டுள்ள பிழையான இடத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைய முடியும். பின்னர், அந்த இணைய தளத்தில் எந்த பைலையும் அப்லோட் செய்திட முடியும். இந்த சிக்கல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6, 7 மட்டுமின்றி பதிப்பு 8லும் உள்ளது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.  ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சோதனைப் பதிப்பு 9 ஐப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இமெயில்களை எச்.டி.எம்.எல். பார்மட்டில் படிக்காமல், வெறும் டெக்ஸ்ட் வடிவில் படித்தால், இதனைத் தவிர்க்கலாம்.

ஸீரோ டே / ஸீரோ அவர் அட்டாக் என்பது, ஒரு அப்ளிகேஷனை உருவாக்கியவர் களுக்கே, அந்த அட்டாக் எங்கு ஏற்படுகிறது என்ற விபரம் தெரியாமல் இருக்கும் நிலையாகும். பாதிப்பு ஏற்பட்ட பின்னரே, அவரால் எங்கு பிழை உள்ளது என அறிந்து, அதனைத் தீர்க்க இயலும்.  எனவே தாக்குதல் நடைபெறும் காலத்தில், அதனைத் தடுக்க இயலாநிலை இருக்கு2ம். இதனையே ஸீரோ டே அல்லது ஸீரோ அவர் அட்டாக் என்று கூறுகின்றனர்.

வெள்ளி, 12 நவம்பர், 2010

எங்கும் கேட்கலாம் பாட்டு ;ஒரு அருமையான இணைய சேவை

இசைப்பிரியர்களுக்கான இணைய சேவை.பாடல்களை கேட்பதற்காக அறிமுகமாகியுள்ள மவுக் இணையதளத்தை இப்படி வர்ணிக்கலாம்.
பாடல்களை கேட்கவும் தரவிறக்கம் செய்யவும் பல இணையதள‌ங்கள் இருக்கவே செய்கின்றன என்றாலும் மவுக் மிகவும் விஷேசமானது.எந்த தளத்தில் பாடல்களை தரவிறக்கம் செய்தாலும் சரி அவற்றை எங்கேயும் கேட்டு மகிழ உதவுவதே இதன் தனிச்சிறப்பு.
அதாவது ஒரே இடத்தில் பாடல்களை கேடக‌ மவுக் உதவுகிறது.
இணையத்தில் பாடல்களை பல தளங்களில் இருந்து தரவிரக்கம் செய்பவர்களுக்கு இதன் அர்த்தம் மற்றும் அற்புதம் சொல்லாமலேயே விளங்கும்.
ஆசை ஆசையாக ஒரு கம்ப்யூட்டரில் பாடல்களை தரவிறக்கம் செய்து சேமித்து வைத்திருப்போம்.அந்த கம்ப்யூட்டர் வீட்டில் பயன்படுத்துவதாக இருக்கும்.எனவே அலுவலகத்தில் இருக்கும் போது பாடல்களை கேட்க நினைத்தால் அதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.அதே போல ஒரு சில இணையதளங்களில் நமக்கான பாடல் பட்டியலை உருவாக்கி வைத்திருப்போம்.அதனை இன்னொரு தளத்தில் இருந்து அணுக முடியாது.
சிலர் செல்போனிலும் பாடல்களை சேமித்து வைத்திருப்பார்கள் .அவற்றை கம்ப்யூட்டருக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்படலாம்.
இவற்றுக்கெல்லாம் தீர்வாக தான் மவுக் உருவக்கப்பட்டுள்ளது.மவுக் தள‌த்தில் உருப்பினரான பின் பிடித்தமான பாடல்களை இங்கேயே சேமித்து கொள்ளலாம்.அதன் பிறகு எந்த இடத்தில் இருந்தாலும் சரி மவுக் மூலம் பாடல்களை கேட்கலாம்.
தற்போது இணைய உலகில் பிரபலமாக இருக்கும் கருத்தாக்கமான கிளவுட் கம்ப்யூட்டியிங் அடிப்படையில் மவுக் செய‌ல்ப‌டுவதால் இணையவாசிகளின் பாடல் குறிப்பிட்ட இடத்தில் அல்லாமல் இணையத்தில் சென்று கலந்து விடுகிறது.ஆகவே மவுக்கில் உள்ள பாடல்களை எநத் கம்ப்யூட்டரில் இருந்தும் அணுக முடியும்.
கம்ப்யூட்டர் என்றில்லை செல்போன் உட்பட இணைய இணைப்பு உள்ள எந்த சாதனம் மூலமும் பாடல்களை கேட்க‌லாம்.இதற்காக எந்த சாப்ட்வேரையும் தரவிறக்கம் செய்ய வேண்டாம்.எந்த சாப்ட்வேரையும் பொருத்தவும் தேவையில்லை.
உண்மையில் சாப்ட்வேரே ஒரு காலாவதியான சங்கதி என்று இந்த தளம் சொல்கிறது.கிளவுட் கம்ப்யூட்டிங் என்பதே அது தானே.தனியே சாப்ட்வேர் என்று தேவையில்லாமல் எல்லாவற்ரையும் இணையத்திற்கே கொண்டு செல்ல கிளவுட் கம்ப்யூட்டிங் உதவுகிறது.
அந்த வகையில் பாடல்களையும் இணைய மேகமாக்கி கொள்ளும் சேவையை தான் மவுக் வழி செய்துள்ள‌து.
மவுக் நிச்சயம் இசை பிரியர்களை கவரும் .ஆனால் ஒன்று .மவுக் இலவச‌மாக ஒரு ஜி பி மட்டுமே இடம் வழங்குகிற‌து.மேற்கொன்டு இடம் தேவை என்றால் கட்ட‌ணம் செலுத்த வேண்டும்.

எவ்வளவு பாடல் தேவையோ அந்தாளவுக்கு கட்டணம் என்று வைத்து கொள்ளுங்க‌ளேன்.
எந்த இடத்தில் இருந்தும் பாடல்களை கேட்க வேண்டும் என்றால் அந்த வசதிக்கான விலையை கொடுக்க தானே வேண்டும்.
கிளவுட் கம்ப்யூட்டிங் சாப்ட்வேர் மற்றும் கம்ப்யூட்டர் பிடியில் இருந்து விடுதலை தருகிற‌து.ஆனால் அதே நேரத்தில் எதுவும் இலவசமில்லை எலாவற்றுக்கும் ஒரு விலையுண்டு என்னும் கருத்தை மீண்டும் வலியுறுத்தவும் செய்கிறது.
இண்டெர்நெட்டில் இனி வரும் சேவைகளை கட்டண சேவையாகவே இருக்கும் என்பதற்கான அறிகுறியாகவும் மவுக் சேவையை கருதலாம்.
இணையவாசிகளுக்கு இது தித்திக்கும் செய்தி அல்ல என்றாலும் எதிர் கால நிஜம் இது தான்.
———-
http://www.mougg.com/

வியாழன், 11 நவம்பர், 2010

பெய்யாத மழையும் அடிமை ஆமையும்

ஒரு நாள் மழைக்கும் யானைக்கும் சண்டை வந்தது. யானை மழையிடம், "நான்தான் இந்த உலகிலேயே பெரிய சக்தி. என்னோடு ஒப்பிடும்போது நீ ஒன்றுமே இல்லை" என்றது

மழையோ, "நானில்லாவிட்டால் நீ தாகத்தில் செத்து மடிந்து போவாய்" என்றது

"போ போ... அப்படியெல்லாம் எதுவும் நடக்கவே நடக்காது" என்று சவால் விட்டது யானை

மழை கோபித்துக் கொண்டு போயே விட்டது. வெகு நாட்களாகியும் மழை இல்லாததால் நீர் நிலைகள் எல்லாம் வறண்டன. யானை கழுகிடம் சென்று, "மழையை சூதாட்டத்துக்கு அழை. அது தோற்று கீழே விழட்டும்" என்று கேட்டது. ஆனால் கழுகு மழையைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல் யானையின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது

பின் யானை காகத்திடம் சென்று மழையை சூதாட்டத்துக்கு அழைக்கச் சொன்னது. ஒப்புக் கொண்ட காகம் மழையிடம் சூதாடி வென்றது. எனவே மழை பூமியில் விழுந்தது.

ஆனால் நீர் நிலைகளில் மழை நீர் தேங்காமல் விரைவில் ஆவியாகிவிட்டது. ஒரே ஒரு குட்டையில் மட்டுமே சிறிதளவு நீர் தங்கி இருந்தது. யானை அதனைப் பாதுகாக்கும் பொருட்டு தனது அடிமையான ஆமையை அந்தக் குட்டையில் விட்டு நீரை வேறு யாரும் குடித்துவிடாமல் பாதுகாக்கச் சொல்லிவிட்டு உணவருந்தச் சென்றது.

அந்தக் குட்டைக்கு வந்த வரிக்குதிரையைக் கண்ட ஆமை, "இந்த நீர் யானை எசமானருக்குச் சொந்தம். எனவே இதனை நீர் குடிக்கக் கூடாது" என்று தடுத்தது.

அடுத்து வந்த நரி, பன்றி, கரடி, ஒநாய் போன்ற அனைத்து மிருகங்களிடமும் அவ்வாறே சொல்லி விரட்டி அடித்தது. அடுத்ததாக அங்கு வந்த சிங்கத்திடமும், "இந்த நீர் யானை எசமானருக்குச் சொந்தம்" என்று ஆமை கூற ஆரம்பித்ததுமே தன் பலம் பொருந்திய காலால் ஓங்கி அறைந்து வெளியே தள்ளிவிட்டு, குட்டை நீரைக் குடித்துச் சென்றது.

உணவருந்திவிட்டுத் திரும்பி வந்த யானை குட்டையில் நீரில்லாததைக் கண்டு ஆமையிடம், "என்ன நடந்தது?" என்று கோபத்துடன் கேட்டது.

ஆமை அழுது கொண்டே நடந்ததைக் கூற, அதனை நம்பாத யானை, "நீரை எல்லாம் நீயே குடித்துவிட்டு நாடகமாடுகிறாய்" என குற்றம் சாட்டியது.

"என்னை ஏமாற்றிய உனக்கு மரணம் நிச்சயம். உன்னைக் காலால் மிதித்துக் கொல்லட்டுமா? விழுங்கிவிடட்டுமா?" என்று ஆமையிடம் கேட்டது யானை.

"என்னை விழுங்கிவிடுங்கள், எசமானரே" என்று கேட்டுக் கொண்டது ஆமை.

யானை ஆமையை விழுங்கியதும், ஆமை யானையின், இதயம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்து உள்ளுறுப்புகளையும் கிழித்துப் போட்டது. வலி தாங்காமல் கதறித்துடித்த யானை சற்று நேரத்தில் இறந்துவிட்டது. ஆமை யானையின் இறந்த உடலிலிருந்து வெளிப்பட்டு சுதந்திரமாய் வாழ்ந்து வந்தது.

யானை இறந்ததைக் கேட்டதும், மழையும் மகிழ்ச்சியாகப் பெய்து நீர்நிலைகளை நிரப்பியது.

கடவுள் எங்கே இருக்கிறார்?

மின்னஞ்சலில் வந்த ஓர் அருமையான விவாதத்தின் தமிழாக்கம்)

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

"நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?"

"நிச்சயமாக ஐயா.."

"கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா."

"கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?"

"ஆம்."

"எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?"

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

"உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா.."

"சாத்தா‎ன் நல்லவரா?"

"‏இல்லை."

"எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?"

"கடவுளிடமிருந்துதா‎ன்."

"சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?"

"ஆம்."

"அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?"

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

"இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?"

......

"அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?"

.......

"ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?"

"ஆம் ஐயா.."

"நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது 'கடவுள் ‏ இல்லை' என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?"

"ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது."

"ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே.." ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

"ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?"

"நிச்சயமாக உள்ளது."

"அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?"

"நிச்சயமாக."

"இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை."

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

"ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). "வெப்பம் ‏இல்லை" என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது."

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

"சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?"

"ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது."

"நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?"

"சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?"

"ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது."

"பிழை?? விளக்கிக் கூற முடியுமா?"

"ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் "வாழ்வு இனி இல்லை" என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

"சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?"

"”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்." பேராசிரியர் பதிலுரைத்தார்.

"உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?"

(பேராசிரியர் த‎ன் தலையை 'இல்லை' என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

"அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே 'ஒருவகையா‎ன' அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?"

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

"இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?"

(வகுப்பறை 'கொல்'லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

"யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?"

"அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று."

"மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?"

(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

"நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!"

"அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

இது ஒரு உண்மைச் சம்பவம். ‏

இறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?

வேறு யாருமல்ல.

நமது மு‎ன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

"காந்திஜியின் கடைசி 200 நாட்கள்"

30.1.2008 அன்று சர்வோதய தினம் (காந்திஜி மறைந்து 60 ஆண்டுகள் ஆகின்றன.) அன்று மாலை சென்னை தக்கர் பாபா வித்யாலய அரங்கில் பாரதி பதிப்பகம் நூல் அறிமுக விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. "காந்திஜியின் கடைசி 200 நாட்கள்" என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழி பெயர்ப்புதான் இந்த நூல். இந்து நாளிதழில் தினசரித் தொடராக வந்த இந்தக் கட்டுரைகளைக் கத்தரித்துத் தொகுத்து வைத்திருந்தவர்கள் பலர். இந்து நிர்வாகம் இதைப் புத்தகமாக வெளியிட்டபோது பெருத்த வரவேற்பைப் பெற்றது.

புகழ் பெற்ற கிரிக்கெட் வருணனையாளர், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.ராமமூர்த்திதான் நூலாசிரியர். மிகச் சரளமான தமிழில் மிக அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார் இலக்குவன். தரமான ஆங்கில நூல்களுக்கு இணையான கட்டமைப்போடு வெளி வந்திருக்கிறது இந்த நூல். அச்சிட்ட 3000 பிரதிகளும் அனேகமாக விற்றுத் தீர்ந்து அடுத்த பதிப்பு வெளியிடப் போகிறார்கள் என்பது காந்தி அன்பர்களுக்குச் சந்தோஷம் தரும் விஷயம். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அ.மார்க்ஸ் மற்றும் சுவாமிநாதன் நூலுக்கு மதிப்புரை வழங்கினார்கள். வி.ராமமூர்த்தியும் உரையாற்றினார். பாரதப் பிரிவினையின் போது, கராச்சியில் சிறுவனாக இருந்து, மதுரைக்குப் புலம் பெயர்ந்த குடும்பத்துப் பிள்ளை அவர். மதக் கலவரங்களை நேருக்கு நேர் சந்தித்திருக்கிறார். காந்திஜியிடம் ஈடுபாடு ஏற்பட்டது குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இலக்கிய ரீதியாக கிரிக்கெட் வர்ணனைகளை (உதாரணமாக, "எடுத்தது கண்டார், இற்றது கேட்டார்", "அளவு குறைவான பந்து") அவரது கம்பீரக் குரலில் அந்த நாளில் ஆவலுடன் கேட்டவர்களுக்கு, வயோதிகம் காரணமாக தற்போது குரல் நடுக்கம் கண்டிருப்பது ஆதங்கமாக இருக்கிறது.

காந்திஜி சொன்னதாக ஒரு மேற்கோள் சுவையாக இருந்தது. "You are not dressed for the day until you wear a smile". அப்படிப் பார்த்தால் அந்த அரை நிர்வாணப் பக்கிரிதான், எப்போதுமே முழு உடை உடுத்திக் கொண்டிருந்தவர்.

நிகழ்ச்சியில் கிடைத்த மற்றொரு தகவல்: காந்திஜி டெல்லியில் தோட்டிகளின் காலனியில் ஒரு குடிசையில்தான் தங்கியிருந்தார். குடிசைக்குக் கதவுகள் கிடையாது. யார் வேண்டுமானாலும் அவரை வந்து சந்திக்கலாம். ஆனால், யாராக இருந்தாலும் பத்து நிமிட அவகாசம்தான். ஆனால் அந்தப் பத்து நிமிட முழு நேரமும் அவர்களுக்காகவே ஒதுக்கி விடுவார்.

அன்று அப்படி அவரை வந்து சந்தித்தவர் ஒரு ஏழைக் கிழவி. தமது குடும்பப் பிரச்சினைகளை அவரிடம் சொல்லிப் புலம்பினார். அவருக்கு ஆலோசனைகள் வழங்கிச் சந்திப்பை முடித்துக் கொண்டார் காந்திஜி. அடுத்து வந்தவர் - மூச்சை நிறுத்திக் கொள்ளுங்கள்! சர்.பெதிக் லாரன்ஸ். பிரிட்டிஷ் அரசுப் பிரதிநிதி. இந்தியாவுக்கு ஆட்சி மாற்றம் குறித்துப் பேசுவதற்கு வருகிறார். நம்ப முடிகிறதா? அதுதான் காந்திஜி.

காந்திஜி பற்றிய சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. காந்திஜி இறப்பதற்கு முன் ராமநாமத்தைச் சொன்னாரா இல்லையா என்பது ஒரு சர்ச்சை. காந்திஜி இறந்தவுடனே வந்த பத்திரிகைக் குறிப்புகளில் அவர் ராமநாமத்தைச் சொல்லி இறந்ததாக இல்லை என்று சாதிக்கிறார்கள் சிலர். பின்னர் வரலாற்று ஆசிரியர்கள் சேர்த்துக் கொண்ட விஷயம் இது என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், காந்திஜி இறந்த உடனேயே, போலீசாரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (நந்தலால் மேத்தா என்பவர் கொடுத்த விபரம்) காந்திஜி 'ராம ராம' என்று சொன்னபடிப் பின்புறமாகச் சாய்ந்தார் என்று கண்டிருக்கிறது. ஆதாரம்: கிரண் பேடியின் www.saferindia.com என்ற இணைய தளம்.

வேண்டும்!

'வேண்டும்' என்ற வார்த்தை மனிதனின் வாணாள் தோழன்! உலகிருக்கும் வரை இந்த வார்த்தையும் வாழ்ந்திருக்கும். முற்றும் துறந்த முனிவருக்கும் அவர் இந்த உலகில் இருக்கும் வரை எதுவும் வேண்டாத நிலை ஏற்பட வாய்ப்பில்லை! சாதாரண மனிதனுக்குச் சொல்லவும் வேண்டுமோ?

எது வேண்டும், எப்பொழுது வேண்டும், எவ்வளவு வேண்டும், எப்படி வேண்டும், ஏன் வேண்டும், யாருக்கு வேண்டும் - அப்பப்பா! இவ்வளவு கேள்விகளா 'வேண்டும்' என்ற வார்த்தைதனைத் தொடர்பு படுத்தி? இந்தச் சொல்லின் நிலை காலத்துக்குக் காலம், கவிஞருக்குக் கவிஞர் எப்படியெல்லாம் வேறுபட்டுள்ளது என்பதை நோக்கும் பொழுது வியப்படைகிறோம்!

திருவள்ளுவர் நாள் தொட்டு இன்றுவரை சிந்தனையாளர்களும், கவிஞர்களும் என்ன என்ன வேண்டும் என்று யார் யாரிடம், எப்படி எப்படிக் கோரியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஒவ்வொருவருக்கும் தனது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு, எது வேண்டும் எது வேண்டாம் என்பதும் மாறுகிறது என்பதை நாம் அறிவோம். எனவேதான் வேண்டுவது எல்லாம் கிடைக்கவில்லையெனில் வேதனைப் படுகிறோம்; வெகுண்டு எழுகிறோம்; வெறுப்படைகிறோம். கிடைத்து விட்டால் எகிறிக் குதிக்கிறோம். இதை உணர்ந்தே, வள்ளுவப்பெருந்தகை, விருப்பையும் வெறுப்பையும் கடந்த இறைவன் அடி பற்றுபவர்க்கு எவ்வித இடர்ப்பாடுகளும் இல்லையென்றார்.

திருவள்ளுவர் போன்ற சிந்தனையாளர்கள் எது வேண்டும்.. எது வேண்டாம் என்று வரையறுத்துக் கூறுவர்.

"வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம்" (குறள் 177 வெஃகாமை)

- பிறர் பொருளைக் கவர்வதால் வரும் செல்வத்தினை விரும்பாதிருக்க வேண்டும்.

"வேண்டற்க வென்றிடுனும் சூதினை" (குறள்931-சூது)

- வெற்றியே கிடைத்தாலும் ஒரு பொழுதும் சூதாட்டத்தினை விரும்பக்கூடாது.

"வேண்டாமை அன்ன விழுச்செல்வம்"(குறள்-363 அவா அறுத்தல்)

- ஆசை இல்லாமல் இருப்பதைவிடச் சிறந்த செல்வம் இந்த உலகில் வேறெதுவும் இல்லை.

"வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப்படும்" (குறள் 265 - தவம் )

- தவத்தினால் விரும்பிய பயன்களை விரும்பியபடியே அடையலாம்.

"வேண்டின் உண்டாகத் துறக்க" (குறள்-342 துறவு)

- துன்பம் இல்லாத நிலை வேண்டுமானால், பொருள்களின் மீதான ஆசையை, அவை மிகுதியாகக் கிடைக்கும் போதே நீக்கிவிட வேண்டும்.

"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை" (குறள்-362- அவா அறுத்தல்)

ஒருவன் ஒன்றினை விரும்புவதானால், மறுபடியும்
பிறவாமல் இருப்பதைத்தான் விரும்பவேண்டும்.

- 'எது வேண்டும்' என்பது நிரந்தரமானது அல்ல. இந்த நிலை மாறிக்கொண்டே இருப்பது. அரசியல்வாதிக்கு ஒரு தேவை; ஆன்மீகவாதிக்கு ஒரு விதத் தேவை!


பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த கருவூர் தேவர் வேண்டுவதைப் பார்ப்போம்:

அறிந்த குறி யடையாளங் காண வேண்டும்
அக்குறியிற் சொக்கி மனந் தேற வேண்டும்
அறிந்தவன் போலடங்கி மன மிறக்க வேண்டும்
அலகையது வழிபாதை அறிய வேண்டும்
மறைந்தவரை நிறைந்தவரை நீ தான் காண
மயக்கத்தைக் கண்டுனையும் மதிக்க வேண்டும்
நிறைந்தமதி குறைந்தவகை அறியவேண்டும்
நிச்சயத்தை அறிவார்க்கு முத்திதானே
...................................................................
..............................................................

தொண்டரடிப் பொடியாழ்வார் வேண்டாம் என்பதைப் பார்ப்போம்:

பச்சை மா மலைபோல் மேனி, பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே - ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் - இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் - அரங்கமா நகருளானே!

வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் வேண்டுவதைச் சற்றே பார்ப்போம்.
ஆளுமை வளர்ச்சிக்கு என்ன என்ன தேவையோ அதை எல்லாம் எவ்வளவு அழகாகக் கேட்கிறார் பாருங்கள்:

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மருவு பெண்ணாசை மறக்க வேண்டும்
நினை மறவாதிருக்க வேண்டும், மதி வேண்டும்
நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வினில் நான் வாழ வேண்டும்
.......................................................
...........................................................

பாட்டுக்கொரு புலவன் - பார் புகழ் பாரதி- தேசியக்கவி பாரதி - மஹாகவி பாரதி நிறையக் கேட்கிறார்; எல்லோருக்காகவும் கேட்கிறார் - அழகாகக் கேட்கிறார் - அவையெல்லாம் கிடைத்து விட்டால் இம்மானிலம் சுவர்க்கமாக மாறிவிடும்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தெரிந்திடல் வேண்டும் -இந்த
ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும்?

தமிழரும், தமிழ் நாடும் முன்னேற வேண்டுமெனில்,

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ்செய்தல் வேண்டும்!

தமிழ் மொழியின் பெருமை பொங்க,

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்"

பாரதி விநாயகர் நான்மணிமாலையில் வேண்டுவார்:

எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற்சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலை வந்திட நீ செயல் வேண்டும்
கனக்கும் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாயே!

வேண்டுவதையும், வேண்டாததையும் இப்படிக் கேட்பார்:

நோவு வேண்டேன்; நூறாண்டு வேண்டினேன்
அச்சம் வேண்டேன்; அமைதி வேண்டினேன்
உடைமை வேண்டேன்; உன் துணை வேண்டினேன்
வேண்டாதனைத்தும் நீக்கி
வேண்டியதனைத்தும் அருள்வதுன் கடனே!

இயற்கையை முழுமையாக அனுபவிக்க

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும் அங்கு
தூணில் அழகியதாய் - நல்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் -அந்தக்
காணி நிலத்திடையே -ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் -அங்குக்
கேணியருகினிலே -தென்னைமரம்
கீற்று மிள நீரும்

பத்துப் பன்னிரண்டு - தென்னையும்
பக்கத்திலே வேணும் -நல்ல
முத்துச் சுடர்போல - நிலாவொளி
முன்பு வரவேணும்; அங்கு
கத்துங் குயிலோசை -சற்றே வந்து
காதிற் படவேணும்; - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்

பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண் வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் -அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா நின்றன்
காவலுறவு வேணும்; - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.


இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கு வல்லமையும், உள்ளம் வேன்டிய படிசெலும் உடலும், நசையறு மனமும், நித்தம் நவமெனச் சுடர் தரும் உயிரும், தசையினைத் தீ சுடினும் சிவசக்தியைப் பாடும் நல் அகமும், அசைவறு மதியும் வேண்டுமாம்.

வாழ்வில் வெற்றி பெற என்ன வேண்டும்?
வாழ்வில் வெற்றி பெற வேண்டியவற்றை பாரதி இவ்வாறு கோருகிறார்:

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்!
பண்ணிய பாவமெல்லாம்
பரிதி முன் பனியே போலே
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அம்மா!

அன்னை பராசக்திமேல் பாரதி வைத்த அளப்பற்கரிய நம்பிக்கையினால் எது வேண்டும் எனக் கட்டளையிடுகிறார்:

செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்
சிறுமைகள் என்னிடமிருந்தால் விடுக்க வேண்டும்
கல்வியிலே மதியினை நீ கொடுக்கவேண்டும்
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்
தொல்லை தரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்
துணையென்று நின்னருளைத் தொடரச்செய்தே
நல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்!

பாரதிப் பெருந்தகை யோகசக்தியிடம் கேட்கும் வரங்களை சற்று பார்ப்போமா?

எண்ணுங் காரியங்க ளெல்லாம் - வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும்-பல
பண்ணப் பெரு நிதியம் வேண்டும் -அதிற்
பல்லோர் துணை புரிதல் வேண்டும் -சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் -மிக
நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் -பல
பண்ணிற் கோடிவகை இன்பம் - நான்
பாடத்திறனடைதல் வேண்டும்!

மதி மூடும் பொய்மையிருளெல்லாம் -எனை
முற்றும் விட்டகல வேண்டும்.

ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் -புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் -பல
பையச் சொல்லுவதிங்கென்னே -முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா - எனை
உய்யக் கொண்டருள வேண்டும்.

நல்லதொரு ஆளுமைத் திறன், வாழ்வில் வெற்றி பெறுவதற்கு மிகவும் இன்றியமையாதது அல்லவா? அதற்கு என்ன என்ன தேவைகளோ அவற்றையெல்லாம் எப்படிக் கேட்கிறார் பாரதி என்பதை இக் கவிதை வழிக் காண்போமே! அனைவருக்கும் மிகவும் பழக்கமான கவிதையே. இருப்பினும் ஒரு பார்வையில் அதை நோக்கும் பொழுது அதற்கு ஒரு புதிய பொருள் புலப்படும்.

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்;
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்;
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்படவேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.

சமூக நீதி, சமத்துவம், எல்லோருக்கும் கல்வி, சம வாய்ப்புக்கள் - இவற்றைப் பற்றி, வாதங்களும், விவாதங்களும் வளர்ந்து, நீதி மன்றங்களில் வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் மஹா கவியினுடைய கருத்துக் களை கவிதை உருவில், அவர் வேண்டுவதைக் காண்போம்:

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்!

வயிற்றுக்குச் சோற்றிட வேண்டும் -இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்!

சாதிக் கொடுமைகள் வேண்டாம் -அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.

தெய்வம் துணை செய்ய வேண்டும்.

பாருக்குள்ளே தெய்வம் ஒன்று -இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.

எத்தனை பொருள் பொதிந்த அறிவுரை. இத் தமிழ் சமுதாயம் அந்த மகானுடைய அறிவுரை தனை ஏற்று நடந்தால், வையகம் சொர்க்கமாக மாறிவிடாதா?

காலத்திற்குக் காலம் மனித இனத்தின் தேவைகள் மாறி வருவதைக் காண்கிறோம். காலத்தின் தேவைகளையே அதற்கொப்ப ஒரு கவிஞன் பாடல்களும் அமைகின்றன. பாரதிக்குத் தாசனாய்த் தன்னைக் கருதிய பாரதி தாசனின் சீர்திருத்தச் சிந்தனைகளும், அவற்றை நினைவாக்க அவர் வேண்டுவதையும் சற்று பார்ப்போமே!

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

என்று களிநடனம் புரிந்தவனல்லவா புரட்சிக்கவிஞன். அவர் தமிழ் வளர்ச்சி எவ்வாறு அமைய வேண்டும் என்று கற்பனை செய்தவற்றை கவிதையிலே இவ்வாறு வடிக்கிறான்:

எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ளஎவற்றினுக்கும் பெயர்களெல்லாங்கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச்செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.

உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சல சலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!
தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்
இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.

புத்தகங்கள்தான் ஒரு மனிதனை சரிவர வழி நடத்தும் சீறிய நண்பன் என்பதை முழுமையாக உணர்ந்த பாரதிதாசன், புத்தக சாலைகளின் இன்றியமையாமையை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதைப் பார்ப்போம்:

புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில்
புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.

தமிழர்க்குத் தமிழ் மொழியிற் சுவடிச் சாலை
சர்வ கலாசாலையைப் போல் எங்கும் வேண்டும்.
தமிழிலிலாப் பிற மொழிநூல் அனைத்தும் நல்ல
தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்.
அமுதம் போல் செந்தமிழிற் கவிதை நூற்கள்,
சுமை சுமையாய்ச் சேகரித்துப் பல் கலை சேர்
துறை துறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.

நாலைந்து வீதிகளுக் கொன்றுவீதம்
நல்லது வாய் வசதியதாய் இல்லம் வேண்டும்;
நூலெல்லாம் முறையாக ஆங்கமைத்து
நொடிக்கு நொடி ஆசிரியர் உதவுகின்ற
கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே
குவிந்திருக்க வகை செய்து தருதல் வேண்டும்
மூலையிலோர் சிறு நூலும் புது நூலாயின்
முடி தனிலே சுமந்து வந்து தருதல் வேண்டும்.

அப்பெருந்தகை விரும்பும் தமிழகம் எப்படி அமைய வேண்டுமாம்?

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்
விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சி தனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர் நிறுத்தித் தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல் போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விட வேண்டும் ...............

தமிழும் தமிழகமும் உய்ய

பிறந்துளார் தமிழறிஞர் ஆதல் வேண்டும்
வருந்தமிழர் வையத்தை ஆள வேண்டும்.

தமிழர்களின் எழுதுகோல் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

கருத்தூற்று மலையூற்றாய்ப் பெருக் கெடுக்க வேண்டும்!

பிறகு,

உரத்தினிலே குண்டு புகும் வேளையிலும் மக்கள்
உயிர் காக்கும் மனப்பான்மை உண்டாக்க வேண்டும்!

காதல் கிள்ளை அவருக்கு வேண்டுமாம். அப்பொழுது அவருக்கு வேறென்ன வேண்டும்?
பாரதிதாசன் தொடர்கிறார்...

வானுக்கு நிலவு வேண்டும்
வாழ்வுக்கு புகழ் வேண்டும்
தேனுக்குப் பலாச்சுளை வேண்டும் - என்
செங்கரும்பே நீ எனக்கு வேண்டும்.

மீனுக்குப் பொய்கை வேண்டும்
வெற்றிக்கு வீரம் வேண்டும்
கானுக்கு வேங்கைப் புலி வேண்டும் - என்
கண்ணாட்டியே நீ எனக்கு வேண்டும்!

வாளுக்குக் கூர்மை வேண்டும்
வண்டுக்குத் தேன் வேண்டும்
தோலுக்குப் பூமாலை வேண்டும் - அடி தோகையே நீ எனக்கு வேண்டும்!

நாளுக்குப் புதுமை வேண்டும்
நாட்டுக்கே உரிமை வேண்டும்
கேளுக்கே ஆதரவு வேண்டும் -அடி
கிள்ளையே நீ எனக்கு வேண்டும்.

அவருக்குத் தமிழ் மகளே வேண்டுமாம்!

காதலனொருவன் கேட்கிறான்:

சாதிகள் வீழ்ந்திட வேண்டும் - பெண்ணே
தமிழினமோ வாழ்ந்திட வேண்டும்
மாதொருத்தி வேண்டும் எனக்கும் -தமிழ்
மகளாயிருந்தால் தான் இனிக்கும்.

தமிழ், உடல் உயிர் இவையாண்டும் -ஒரு
தமிழ் மகளாய்ப் பிறந்திட வேண்டும்
.....................

தமிழனுக்குச் சிறப்பு எப்படி வரவேண்டுமாம்?

சிறப்பதென்றால் தமிழாற் சிறக்க வேண்டும்
தீர்வதென்றால் தமிழ் மறந்து தீர்தல் வேண்டும்

என்பார்!

"உலகின் அமைதியைக் கெடுக்காதே!" என்ற கவிதையில் கூறுவார் சீனக்காரனுக்கு:

நன்றாக நீ திருந்த வேண்டும்
ஞாலம் உன்னை மதிக்க வேண்டும்
ஒன்றாய்ச்சேர்ந்து வாழ வேண்டும்
ஒழுக்கம் கெட்டால் என்ன வேண்டும்?

இந்த அறிவுரை அனைவருக்கும் பொதுவன்றோ!


இன்னும் சற்று பின்னர் வந்து இக்காலக் கவிஞர்கள் என்ன வேண்டுகின்றனர் என்று நோக்குவோமே!

புலவர் நீல. பகவன் குழந்தைகளுக்கு கருணை நெஞ்சில் வேண்டும் என வலியுறுத்தி

"எல்ல உயிரும் உறவாக
எண்ண வேண்டும் எல்லொரும்
பொல்லா எண்ணங் கொண்டேதான்
புவியில் வாழ வேண்டாவே
கல்வி கற்ற நாமெல்லாம்
கருணை நெஞ்சில் கொள்வதுதான்
நல்லோர் கூறிய நெறியெனவே
நாளும் போற்றி வாழ்வோமே!"

எனக் கூறுகிறார்.


கவிஞர் முத்து. இராமமூர்த்தி அவர்கள் அவருக்கே உரிய பாணியில் ஒரு குடைக்கீழ் உலகம் வரவேண்டும் என்று விரும்புகிறார். அதற்கு ஒரு படியாய் அவர் வேண்டுவது

"உள்ளங்கள் ஒன்ற வேண்டின்
உறவெனும் பாலம் வேண்டும்"

என்பார்.

வேலையில்லாப் பிணி நாட்டை வாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு வேதனையுற்று வேண்டுவார்:

கருவில் பெற்ற திறனோடு
கல்வி ஆற்றல் அனுபவங்கள்
மருவில் நாட்டம் இவையறிந்து
பணிகள் செய்யும் நிலை வேண்டும்!

இந்தியா சொர்க்கமாக வேண்டுமென்றால்,

'திசைகளின் எல்லைக் கோட்டைத்
தேடிநாம் அழித்தல் வேண்டும்'

என்று கூறுவார்.


'கிராமப் புற வறுமை' விலகும் என்ற தலைப்பில் கவிதை படைத்தார். அதில்

"பெற்றிட்ட விடுதலையின்
பெருமையினை நாம் உணர்ந்து
உற்றிங்கே கவனித்து
உயர் வாழ்வு தர வேண்டும்"

எனக் கூறுவார்.


கவிஞர்களை வேண்டுவர் இளந்தலைமுறைக் கவிஞர் மீ. உமாமகேச்வரி அவர்கள்

சிந்தனையில் பிறந்த
நம் சீரிய கவிதைகள்
ஒருவரையாவது
சீர்திருத்த வேண்டாமா?

என்று கேட்பார்.

தமிழே! உன்னை வாழ்த்தவும் வேண்டுமோ எனக்கேட்டு அவர் ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்துவார்:

காலம் காலமாய்
கவிஞர்கள்
சொல்லி வருகின்ற
பொய்யுரைகளை
நானும் உனக்கு
சொல்ல வேண்டுமோ?

என்று!

மற்றொரு இன்றைய கவிஞர் நந்தா சொல்லுவார்:

"சொல்ல வேண்டும்
கவிதை - சொன்னதும்
மனசு அங்கே
துள்ளவேண்டும்"

என்று!


கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வேண்டுவதைப் பார்த்த பின்னர், இகட்டுரையை முடிப்பது சாலப் பொருந்தும்!

'வேறென்ன வேண்டும்' என்ற தலைப்பில் அவர் வேண்டுவன:

எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும்
எழுத்தெல்லாம் சுடராகி எரிய வேண்டும்
பெண்ணென்றால் தாயென்று பார்க்க வேண்டும்
பெரியோரை அறிகின்ற பெற்றி வேண்டும்
வண்ணங்கள் தெரியாத பார்வை வேன்டும்
வயதுக்குச் சரியானவாழ்க்கை வேண்டும்
கண்ணீரில் சுகங்காணும் ஞானம் வேண்டும்
காமத்தைக் கடந்தேறும்யோகம் வேண்டும்!

சொன்னபடி கேட்கின்ற உள்ளம் வேண்டும்
சொன்னால்தான் சாகின்ற தேகம் வேண்டும்
கண்ணோடு வாய்மைத் தீ கனல வேண்டும்
கருதுவதை உரைக்கின்ற வன்மை வேண்டும்
பண்கொண்ட இசைப்பாடல் பயில வேண்டும்
பறவைகளுக் கிருக்கின்ற சிறகு வேண்டும்
நன்மைகளைச் சுரண்டாத நட்பு வேண்டும்
நாளைக்குக் கலங்காத செல்வம் வேண்டும்!

ஆகாயம் இடிந்தாலும் ரசிக்க வேண்டும்
அழுதாலும் புல்லின் வேர் நனையவேண்டும்
ஏகாந்தம் நம்மோடு வசிக்கவேண்டும்
எப்போதும் சிரிக்கின்ற உதடு வேண்டும்
வேகாத உணவுண்ணப் பழக வேண்டும்
வெறுந்தரையில் படுத்தாலும் உறக்கம் வேண்டும்
போகாத ஊர் கூடப் போக வேண்டும்
பொறி ஐந்தும் அறிவாலே நிரம்ப வேண்டும்!

மலரோடு(ம்) ஆராய்ச்சி நடத்த வேண்டும்
மழை பாடும் சங்கீதம் ருசிக்க வேண்டும்
சிலரோடு கவிதைகளைத் துய்க்கவேண்டும்
சிந்தனையைக் காற்றாகப் பரப்ப வேண்டும்
நிலவோடு நதி நீரில் குளிக்க வேண்டும்
நித்திரையைக் கலைக்காத கனவு வேண்டும்
பலரோடும் ஒன்றாகப் பழக வேண்டும்
பனித்துளிக்குள் உலகத்தைப் பார்க்க வேண்டும்!

தெய்வத்தைத் தேடாத ஞானம் வேண்டும்
தெய்வங்கள் நாமென்று தெளிய வேண்டும்
பொய் சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும்
போராடி வெல்கின்ற புலமை வேண்டும்
கையிரண்டும் உழைக்கத்தான் கவனம் வேண்டும்
காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும்
மெய்யிந்த வாழ்வென்று நம்ப வேண்டும்
மேகம் போல் பொழிந்து விட்டுக் கலைய வேண்டும்!

எவ்வளவு சிறப்பாக நமக்கு வேண்டியவைகளை கவிப் பேரரசு தனது கவிதையில் எடுத்துரைக்கின்றார்! அவரது கவித்திறத்திற்கு ஒப்பாரும் மிக்காரும் உள்ளனரோ இன்று!

நல்ல கவிதைகள் எழுதி வாழ வேண்டுமாம்; அப்படி வாழ்ந்து விட்டுச் சாக வேண்டுமாம்!

"முத்துரதம் போலதினம் மோகவெறி தூண்டும்
தத்தையர்கள் என்னருகில் தாவி வர வேண்டும்
பத்து விரல் தொட்டு மனம் பாட்டெழுத மீண்டும்
அத்தைமகள் போல பல கொத்துமலர் வேண்டும்!"

வள்ளுவர் காலந்தொட்டு இன்றுவரை தமிழ் கவிஞர்கள் எப்படியெல்லாம், என்ன என்னெல்லாம் வேண்டியுள்ளனர் என்று மனங்குளிரப் பார்த்தோம்!

இவை அத்தனையும் பெறுவதற்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, வள்ளுவன் வழியில் வாழக் கற்றுக்கொண்டு வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தால் தவறாது நாம் ஒவ்வொருவருமே வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

திருக்குறள் உலகப்பொதுமறையா? - சில சொல்லாடல்கள் (4)

எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் அறங்கள்

'அன்பில்லாதவர் உடம்பானது எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்டது', 'கண்ணோட்டம் இல்லாத கண்கள் வெறும் புண்கள்', 'கண்ணோட்டமில்லாதவர் மரத்திற்கு ஒப்பாவர்' எனக் கண்டனங்களை வீசும் வள்ளுவர், 'மானம் இழந்தவர் மயிரனையர்' எனக் குறிப்பிடுவது தற்செயலானது அல்ல. மானம் என்பதற்குப் பொதுவான வரையறை இல்லாத நிலையில், ஓர் அரசியல் கட்சியிலிருந்து சில மூத்த தலைவர்கள் பிரிந்தபோது, அக்கட்சியின் செயலாளர் அவர்களை 'உதிர்ந்த மயிர்கள்' என வருணித்தது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. திருக்குறள் முன்னிறுத்தும் சமூக அறங்களில் தேவையானவற்றை நவீன வாழ்க்கையில் பயன்படுத்தலாம்.

மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், இன்னும் ஏற முயன்றால், அச்செயல் உயிரைப் பறித்துவிடும் என்ற எளிய உவமை மூலம் ஒரு கருத்தைப் பதிவாக்கிட முயலும் வள்ளுவரின் முயற்சியானது, மக்களிடையே கவனம் பெற்றதில் வியப்பில்லை. தொடர்ந்து திருக்குறள் நூலை வாசிக்கின்றவர்களுக்கு திடீரெனப் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, அதிலிருந்து விடுபடும் மனத்தெளிவைத் திருக்குறள் ஏற்படுத்தக்கூடியது. 'நீரின்றி அமையாது உலகு', 'உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு', 'அடக்கம் அமரருள் உய்க்கும்', 'கற்க கசடறக் கற்பவை' போன்ற வரிகள் மனத்தில் சிந்தனையை ஏற்படுத்தக் கூடியன. இத்தகைய வரிகளினாலே திருக்குறள் தமிழர் மனங்களில் தொடர்ந்து ஆளுமை செய்கின்றது.

குறளின் கவித்துவ அம்சம்

ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து அறக்கருத்துகளைச் சொல்ல முயன்றிருப்பதுதான் திருக்குறள் நூலின் பலவீனமான அம்சம். ஒரு குறிப்பிட்ட தலைப்பினில் கட்டாயம் பத்து அறக்கருத்துகளைக் குறிப்பிட வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாகச் சாதாரணமான கருத்தமைந்த குறள்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பிற அதிகாரங்களைவிட, அது முக்கியமானது என்ற தொனி, குறள்கள் உருவாக்கத்தில் வெளிப்பட்டுள்ளது. இதனால் பல குறள்கள் கவிதையாக வெளிப்படாமல், கருத்தைத் தாங்கியிருக்கும் வறண்ட நடையில் செய்யுள்களாக உள்ளன. பொதுவாக, வளமான கவித்துவச் செறிவும் இலக்கிய ஆளுமையும் மிக்க சங்கக் கவிதைகளுடன் ஒப்பிடும்போது, திருக்குறளில் கவித்துவ அம்சங்கள் மிகக் குறைவு.

மதம் சார்ந்த நூலா திருக்குறள்?
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரின் குரலில், வைதிக இந்து சமயம் கட்டமைத்த சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக்கு எதிரான மறுப்பு அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. இதுபோன்ற குறள்களை வைத்துக்கொண்டு வள்ளுவர் சநாதன பார்வைக்கு எதிரானவர் என்று பலரும் முடிவெடுக்கின்றனர். ஒட்டுமொத்தமாக குறள்களை ஆழ்ந்து வாசிக்கும்போது, முரண்பட்ட போக்குகளை வள்ளுவரிடம் காண முடிகின்றது.

எந்தவொரு மதத்தையும் சாராத அறநூல் திருக்குறள் என்ற கூற்றிலும் முரண் உள்ளது. கடவுள் நம்பிக்கை, உருவ வழிபாடு, ஆரியருடைய வேள்வி, பிறவி நம்பிக்கை, ஊழ்வினை, சொர்க்கம், நரகம், மோட்சமடைதல், நல்வினை, தீவினை போன்றவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றுக்குச் சார்பான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் குறள்கள், திருக்குறளில் நிரம்ப உண்டு. உயர்ந்த குடி, தாழ்ந்த குடி என்ற முரணில் நல்ல செயல்கள் மூலம் தாழ்ந்த குடியில் பிறந்தவன் உயர்ந்த குடியாகலாம் என்கிறார் திருவள்ளுவர். இக்குறளை ஆராய்ந்தால், குடி அல்லது சாதிகளுக்கிடையில் பிறப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் ஏற்றத்தாழ்வினை முற்றிலும் மறுக்கவோ அல்லது கண்டனம் செய்யாத நிலையைக் கண்டறியலாம்.

திருக்குறளின் மதிப்பீடு - காலத்தின் கட்டாயம்

அரசியலதிகாரத்தின் மேலாதிக்கத்தை உறுதி செய்திடவும், மதங்களின் ஆளுமையைத் தக்க வைப்பதற்கும் எழுதப்பட்ட அறநூலான திருக்குறளின் கருத்துகளை எந்த அளவு நடைமுறைப்படுத்த முடியும் என்பதுதான் முக்கியமான கேள்வி. இன்றைய காலகட்டத்தில் திருக்குறளின் தேவையை மதிப்பிட வேண்டியுள்ளது. திருக்குறளின் அறக்கருத்துகளைப் பரந்துபட்ட நிலையில், மக்களிடம் அறிமுகம் செய்வது நோக்கமெனில், அதற்கான திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது. மாறிவரும் சமூகச் சூழலுக்கேற்ப திருக்குறளின் கருத்துகள் பொருந்துதல் அல்லது முரண்படுவதை விமர்சனம் செய்வதன் மூலமாகவே, திருக்குறள் சமகால மதிப்புப் பெறும். அதுவே அந்நூல் தொடர்ந்து மக்களிடம் வழக்கிலிருப்பதற்கான வழியாகும். எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற புனித நூலாகத் திருக்குறளைப் போற்றுவது என்பது அந்நூலை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடும்!

இன்று தமிழர் என்ற அடையாளத்துடன் பல்வேறு சாதியினர், மதத்தினர், நாத்திகர் உள்ளனர். உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். வேறுபட்ட பழக்க, வழக்கங்கள், நம்பிக்கைகள் கொண்ட, உலகத் தமிழர்களின் பண்பாடு என்பது ஒற்றைத் தன்மையுடையது அல்ல. பன்முகப் போக்குகள் நிலவுவதை அங்கீகரிப்பதன் மூலமாகவே தமிழர் என்ற அடையாளம் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் இறைச்சி உண்ணுதல், பெண் பற்றிய மதிப்பீடுகள் போன்றவற்றில் முரண்பட்ட கருத்துகளைக் கொண்ட திருக்குறள் நூலினைத் 'தமிழர் வேதம்' என்று வலியுறுத்துவது தமிழர்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்துவிடும். எட்டுக்கோடி தமிழர்களுக்குப் பொதுவான அறங்கள் என்பதே நடைமுறை சாத்தியமற்றது.

பல்வேறு மொழியினரும், பழங்குடியினரும் வெவ்வேறு பண்பாட்டு அடையாளங்களுடன் இந்தியாவெங்கும் வாழ்ந்து வருகின்ற சூழலில், பண்டைய அறங்களைப் போதிக்கும் திருக்குறள், இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டுமென்ற கருத்து நம்முடைய விருப்பம் சார்ந்தது; நடைமுறைக்கு ஏற்புடையதன்று.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான மொழிகளைப் பேசிக்கொண்டிருக்கும் உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற கருத்துகள் திருக்குறளில் உள்ளன. எனவே 'திருக்குறள் உலகப் பொதுமறை' என்ற கருத்திலும் முரண்பாடுகள் உள்ளன. பொதுவாக உலகப் பொதுமறை என்ற கருத்தே கானல் நீர் போன்றது; பண்டிதர்களின் உச்சகட்டப் புனைவு! அப்படியொரு நூல் இருக்கச் சாத்தியமே இல்லை என்பதுதான் உண்மை!

1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒழுங்கற்று வாழ்ந்த தமிழர் வாழ்க்கையில், இவைதான் மனிதன் வாழவேண்டிய நெறிமுறைகள் என்று ஆழமாகச் சிந்தித்து, அவற்றைப் பதிவாக்கியுள்ள செயல், திருவள்ளுவரை என்றும் சாதனையாளராக முன்னிறுத்துகிறது. திருக்குறளின் அறக்கருத்துகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழரை நெறிப்படுத்த முயன்றுள்ளன; தமிழர் வாழ்க்கைக்குத் தத்துவப் பின்புலத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழர்களுக்கும் திருக்குறளுக்குமான ஆழமான உறவு என்றும் பிரிக்கவியலாத தன்மையுடையது என்பதே திருக்குறளுக்குப் பெருமை சேர்ப்பதாகும். விமர்சனமற்ற வெற்றுப் புகழுரைகள் திருக்குறளுக்குத் தேவையில்லை. எனவே பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் சிறந்த சமூகச் சிந்தனையாளரான திருவள்ளுவரின் இயல்புக்குப் பொருந்தாத வேடங்களை, அவருக்கு அணிவிப்பது பெருமைக்குரியதல்ல. திருக்குறள் என்ற அறநூல் தனது அசலான பலத்தினால் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்கும் என்பதுதான் உண்மை.

திருக்குறள் உலகப்பொதுமறையா? - சில சொல்லாடல்கள் (3)

பெண்ணிற்கு எதிரானவரா திருவள்ளுவர்?

திருக்குறள் என்பது பால் பேதமற்ற பிரதி; அது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான கற்பினை வலியுறுத்துகின்றது; ஒடுக்கப்பட்ட பெண்களுக்குச் சார்பான அறக்கருத்துகளை முன்னிறுத்துகிறது என்று அழுத்தமான நம்பிக்கை தமிழரிடையே உள்ளது. ’தமிழ்ப் பெண் என்பவள் குறளின் வழிநடந்தால், வாழ்வில் சிறக்கலாம்' என்று தமிழறிஞர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பெண்ணியவாதிகள் திருவள்ளுவரின் பெண் பற்றிய மதிப்பீடுகளைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ’பெண் வழிச் சேரல்' அதிகாரம் முன்னிறுத்தும் கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. பெண்ணின் பேச்சைக் கேட்டு நடத்தல், பெண்ணின் வேண்டுதலை நிறைவேற்றுதல், பெண்ணுக்குப் பணிந்து நடத்தல் ஆகிய செயல்களைச் செய்யும் ஆண்களை திருவள்ளுவர் கடுமையாகக் கண்டனம் செய்கிறார்: பெண்ணுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிற ஆணினால் அறச்செயல்களைச் செய்யவியலாது; அவனுடைய பிறவிக்கு மோட்சம் கிடைக்காது; அவனால் பிறருக்கு நன்மை செய்ய முடியாது; அவனுக்குச் செயல்திறன் இல்லாமல் போகும். பெண்ணின் அறிவுத் திறனையும், ஆற்றலையும் மறுக்கும் போக்கைத் திருக்குறளில் காணமுடிகிறது. திருவள்ளுவரின் குரலில் ஆண்மைய வாதம் அழுத்தமாகப் பொதிந்துள்ளது. ’பெண் சொல் கேளேல்' என்பதை அறமாக முன்வைக்கும் திருவள்ளுவரின் கருத்தியல், சமூகத்தில் பெண்ணின் இருப்பை மறுப்பதுடன் அவளுடைய மனத்தையும் புறக்கணிக்கிறது.

இன்று பிரதமர், முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர், உச்சநீதிமன்ற நீதியரசர், காவல்துறை உயர் அதிகாரி, பெரும் தொழிலதிபர் என உயர் மட்டங்களில் பெண்கள் வெற்றிகரமாகச் செயற்படுகின்றனர். இந்நிலையில், இத்தகைய பெண்களின் கீழ்ப் பணியாற்றும் ஆண்கள் வள்ளுவரின் அறமான 'பெண் சொல் கேளேலைப்' பின்பற்றினால், அச்செயல் சட்ட விரோதமானது; இந்திய அரசியல் நிர்ணய சபை வகுத்துள்ள விதிகளுக்கு முரணானது. எனவே, திருவள்ளுவர் வலியுறுத்தும் பெண் பற்றிய அறங்களில் சில இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமாக இல்லை. தமிழ்ப் பெண்களுக்கே பொருந்தாத திருக்குறளின் அறக்கருத்தை உலகத்துப் பெண்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா என்பது முக்கியமான கேள்வி.

வள்ளுவரின் காலத்தில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் பன்முகப் பாலியல் ஈடுபாடு இருந்தது. திருமணம் என்ற அமைப்பிற்குள் கட்டுப்படாத மகளிர் இருந்தனர். பொருளை விரும்பும் பெண்கள் இருந்தனரே அன்றி, பொருளுக்காக ஆடவரை விரும்பும் பெண்கள் பற்றிய குறிப்புகள் குறளில் இல்லை. குடும்ப அமைப்பில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டினை அறமாக திருவள்ளுவர் வலியுறுத்துவது அன்றைய காலகட்டத்தில் முற்போக்கான அம்சமாகும். மகளிர் நிறை காக்கும் கற்பினை முதன்மைப்படுத்தும் வள்ளுவர், ஆடவர் நிறை பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஒப்பீட்டளவில் பெண்களுக்குத் தாராளமாக அறிவுரைகளை அள்ளி வழங்கியுள்ளார்!

ஆண் சார்பு நிலைக் காமத்துப் பால்

ஆண்களுக்கான அறமாகத்தான் பிறன்மனை நயத்தல் கூடாது என்ற வள்ளுவரின் அறிவுரையைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கணவன்-மனைவி என்ற சிறிய குடும்பத்தினை முன்னிறுத்தும் நிலையில், பாலியல் அறமானது முழுக்கப் பெண்ணை நோக்கியே வள்ளுவரால் முன்மொழியப்பட்டுள்ளது. தனி மனித ஒழுக்கம் என்ற லட்சிய நோக்கிலான அறமும் பெண் குறித்த ஆண் மேலாதிக்கத் தன்மையுடன் அமைந்துள்ளது. வள்ளுவர் சித்திரிக்கும் ஆணின் ஒவ்வொரு அசைவும், செயலும் பெண்ணின் மீதான அவனது அதிகாரத்தைச் சுற்றியே இயங்குகின்றது. பெண்ணுடலைப் பிற ஆண்களிடமிருந்து காத்து புனித உடலாக மாற்றி, கணவனுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்குமாறு பெண் மனத்தை மாற்றிடும் நுட்பமான பணியைக் ’கற்பு' என்ற சொல்லாடலின் மூலம் அறநூல்கள் முயன்றுள்ளன. இந்நிலைக்கு திருக்குறளும் விலக்கு அல்ல.

வள்ளுவரின் ஆண் - பெண் பாலுறவு குறித்த பார்வை காமத்துப்பாலில் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. காமத்துப்பால் முழுக்க ஆணின் மொழியிலமைந்த பிரதியாகும்; பெண் மொழிக்குச் சிறிதும் இடமில்லை. ’கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள' என்ற குறள் ஆண் மைய வாதத்தைச் சார்ந்தது. இக்குறளில் ஆணின் பாலியல் வேட்கை மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் தனக்காக பாலியல் விழைவை அடைதல் அல்லது துறத்தல் பற்றி வள்ளுவருக்கு அக்கறை எதுவுமில்லை. பெண் எனப்படுபவள் ஆணினால் அறிந்துகொண்டு அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்ற அணுகுமுறையில் பால் வேட்கையானது ஆணின் தொழில்நுட்பமாக மாற்றப்படுகின்றது. இத்தகைய ஆண் மையப் பார்வைதான் எல்லாவகையான பாலியல் அத்துமீறல்களுக்கும் வன்முறைகளுக்கும் அடித்தளமாகும்.

ஒரு நிலையில் பெண்ணுடலைப் போகப் பொருளாக மாற்றித் துய்ப்பிற்கான தளமாக்கும் வள்ளுவர், இன்னொரு நிலையில் பெண்ணுடலை உரிமை கொள்ளும் அதிகாரத்தையும் அறத்தின் பெயரால் ஆணுக்கு வழங்குகிறார். பெண்ணை முன்னிறுத்திக் காதலி அல்லது மனைவி என்ற அடையாளத்துடன் பாலியல் கொண்டாட்டத்தினை முன்மொழியும் காமத்துப்பால், ஒரு வகையில் ஆண்டான் அடிமை உறவின் வெளிப்பாடுதான். பெண் தனது உடலை முழுமையாக ஆணிடம் ஒப்படைத்துவிட்டுப் பேச்சற்று இருக்கும்வரை ‘காமம்' பற்றிய புனைவுகள் பொங்கிப் பெருகும்.

"தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை''

என்ற குறள் பெண்ணைப் பெருமைப்படுத்தினாலும், மனைவி மீது தேவையற்ற சுமையைக் கற்பு என்ற பெயரில் ஏற்றுகின்றது. தூய உடலும், கணவனை வணங்கும் மனமுமிக்க பெண்ணைப் பற்றிய புனைவைக் கட்டமைத்திடும் குறள் கேள்விக்குரியதாகின்றது. மனைவியைத் தொழுதெழும் கணவன் பற்றியும் அவன் பெய்யெனப் பெய்யும் மழை பற்றியும் வள்ளுவர் அக்கறை கொள்ளாதது குறித்துப் பெண்ணியவாதிகள் கண்டனம் எழுப்புகின்றனர். பல நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் உருவாக்கிய பெண் பற்றிய பிம்பம், நவீனத் தமிழ்ப் பெண்களால் மறுதலிக்கப்படுகின்றது.

கல்வியின் சிறப்பைச் சொல்லும் குறள்

சமூகமாக வாழும் மக்கள், தங்களுக்குள் ஒருங்கிணைந்து வாழ்வதற்காக வள்ளுவர் குறிப்பிடும் அறங்கள் குறிப்பிடத்தக்கன. அவ்வகையில் வள்ளுவரின் இன்னொரு முகம் எளிமையானது; சராசரி மனிதனாகக் காட்சியளிக்கின்றார். கல்வியின் சிறப்பைக் குறிப்பிடும்போது, அதன் தேவையை எதிர்மறையாக்குகின்றார். கல்லாதவனின் முகத்திலிருப்பவை கண்கள் அல்ல, புண்கள் எனத் திட்டுகிறவர், மேலும் அவனை ’விலங்கு' எனப் பழிக்கின்றார். கற்றோர் முன்னால் கல்லாதவன் பேச முயலுவது, ’முலை வளராத இளம் சிறுமி காம வயப்பட்டது போல' எனக் கண்டிக்கிறார். ’பிறரிடம் அரிய விஷயங்களைக் கேட்டு ஆராய்ந்திடும் மனநிலை இல்லாதவன் செத்தாலும், வாழ்ந்தாலும் என்ன' என்று கோபத்துடன் கேள்வி கேட்கிறார். பல்லாண்டுகளாகக் கல்வி கற்பது உயர் சாதியினருக்கு மட்டும் உரித்தானது என்ற சநாதன தர்மம் நிலவிய தமிழகத்தில் வள்ளுவர், தனது அறக்கருத்துகள் மூலம் கெட்டி தட்டிப்போன சராசரி மனிதனின் பிரக்ஞையில் பாதிப்பை ஏற்படுத்திட முயன்றுள்ளார்.

(அடுத்த பகுதியில் முடியும் )

திருக்குறள் உலகப் பொதுமறையா? - சில சொல்லாடல்கள் (2)

திருக்குறளும் இன்றைய வாழ்வியலும்
சுமார் 1700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் சூழல், தமிழரின் வாழ்நிலையொட்டி திருவள்ளுவர் வகுத்து அளித்த அறநெறிகள் திருக்குறள் என்ற நூல் வடிவம் பெற்றன. அவற்றை எவ்விதமான மறுபரிசீலனையுமின்றி அப்படியே ஏற்றுப் போற்றுவது பண்டிதர்களிடையே பெருவழக்காக உள்ளது. ஒரு காலத்தில் இயல்பாகக் கருதப்பட்டவை பிற்காலத்தில் ஒழுக்க மீறலாகவும், அதேபோன்று ஒழுக்க மீறலாகக் கருதப்பட்டவை பிற்காலத்தில் இயல்பானதாகவும் மாற்றம் பெறுகின்றன. சமூகப் பொருளியல் நிலை மாற்றமடையும்போது, மதிப்பீடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

பொதுவாக, மனித மனத்தில் 'குற்றம்' பற்றிய சிந்தனையை உருவாக்கி, ஏற்கெனவே நம்பியது சரியல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்போது, காலந்தோறும் புதிது புதியதான அறக்கருத்துகள் உருவாக்கப்படுவதற்கான அடித்தளம் வடிவமைக்கப்படுகிறது. இந்நிலையில் தனிமனித அறம், சமூக அறம் ஆகியவை புனிதமாகக் கருதப்படுகின்றன. இத்தகைய புனித அறங்களைக் கட்டுடைத்தால், அவற்றினுள் அதிகாரத்தின் குரல் நுட்பமாகப் பொதிந்திருப்பதனை அவதானிக்க முடியும். எனவே எந்தவொரு அறநூலும் புனிதமானது இல்லை; சார்பின்றி எழுதப்படுவதும் இல்லை. இந்நிலையில் திருக்குறள் அறிவுறுத்தும் அறக்கருத்துகள் இன்றைய தமிழர் வாழ்க்கையுடன் எங்ஙனம் ஒத்துப்போகின்றன என்பது முக்கியமான கேள்வி.

திருக்குறள் குறிப்பிடும் பல அறக்கருத்துகள் இன்றைய மனிதனைச் செம்மைப்படுத்த உதவுகின்றன; அதேவேளையில் சில அறக் கருத்துகள் பொருத்தமற்று உள்ளன. திருக்குறளில் இடம்பெற்றுள்ள அறக்கருத்துகள் எல்லாக் காலகட்டங்களுக்கும் பொருத்தமானவையாக இல்லை என்பது அந்நூலுக்கு இழுக்கு அன்று; அதுதான் யதார்த்தம்! கடவுளால் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் மதங்களே தங்களுடைய நிலைப்பாட்டினைக் காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும்போது, அறநூல்களின் கருத்துகளில் முரண்பாடுகளும் மாற்றங்களும் ஏற்படுவது தவிர்க்கவியலாதது. எடுத்துக்காட்டாக, 'உலகம் தட்டையானது; கோள்கள் எல்லாம் பூமியைச் சுற்றி வருகின்றன' என்ற விவிலியக் கருத்து இன்று கிறிஸ்துவர்களால் ஒப்புக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில் சிலர், 'திருக்குறளின் அறக் கருத்துகள் மாற்றப்பட முடியாதவை; தேவ வாக்கியம்' என்று கண்மூடித்தனமாக நம்புகின்றனர். இப்போக்கு ஏற்புடையதல்ல.

ஜைன சமயச் சார்புடைய திருவள்ளுவர், மனிதர்கள் தங்களுக்குள் பின்பற்றவேண்டிய ஒழுங்குகளை அறங்களாக 1330 குறள்களில் பதிவாக்கியுள்ளார். அவருடைய சொந்த வாழ்க்கை பற்றிய செவிவழிக் கதைகள், அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்துகின்றன. ஒப்பற்ற ஞானியாகவும், மாபெரும் தீர்க்கதரிசியாகவும், தெய்வப் புலவராகவும், அய்யனாகவும் திருவள்ளுவரைப் போற்றித் துதிபாடுதலும் வணங்குதலும் நடந்து வருகின்றன. இறைவனுக்கு நிகராகத் திருவள்ளுவருக்குத் தரப்படும் போற்றுதல்கள், ஒரு வகையில் திருக்குறளுக்குப் பிரச்சினையைத் தரக்கூடியன. திருக்குறளை 'வேத நூல்' என்று வழிபாட்டுப் பூசைப் பொருளாக்குவது, மக்கள் அந்நூலை வாசிப்பதைத் தடுத்துவிடும். 'நடைமுறை இல்லாத தத்துவம் மலட்டுத்தனம்' என்ற நோக்கில் அணுகிடும்போது, திருக்குறள் முன்னிறுத்தும் அறக்கருத்துகளைச் சராசரி மனிதரால் பின்பற்ற முடியுமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

திருக்குறள் வாழ்வில் விழுமியங்களையும் மேன்மைகளை முன்னிறுத்தி முக்கியமான அறக்கருத்துக்களைக் கடந்த 1700 ஆண்டுகளாகத் தமிழர்களுக்குப் போதித்து வருகிறது; ஓரளவு படித்த தமிழரின் கருத்தியல் போக்கிலும் ஊடுருவியுள்ளது. ஆனால் இன்று பெரும்பான்மைத் தமிழர்கள் பண்பாட்டு ரீதியில் மோசமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அடிமையாகியுள்ளனர். மேனாமினுக்கி திரைப்பட நடிகர்களையும், போலியான அரசியல்வாதிகளையும், ஊழல் பேர்வழிகளையும் தொடர்ந்து தங்கள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். இன்றளவும் கிராமப்புறங்களில் ஆதிக்க சாதியினரின் வன்முறை காரணமாகத் தீண்டாமை நிலவுகிறது. பால் சமத்துவமற்ற நிலை காரணமாகப் பெண்ணைப் போகப் பொருளாகப் பாவித்தலும், வன்முறை செலுத்துதலும் தொடர்கின்றன. இத்தகு சூழலில் திருக்குறள் போதிக்கும் அறக்கருத்துகள் தமிழர்களின் மனத்தையும் வாழ்க்கையையும் ஏன் நெறிப்படுத்தவில்லை என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

நடைமுறைக்கு ஒவ்வாத ‘புலால் மறுத்தல்’

திருவள்ளுவர் 'புலால் மறுத்தல்' அதிகாரத்தில் குறிப்பிடும் அறக்கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. உணவு உண்ணுதல் என்பது சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது. ஆண்டு முழுவதும் பனி உறைந்திருக்கும் துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவின் உணவில் மீன், இறைச்சி முதன்மையானது. இயற்கைச் சூழலுடன் மனிதர்கள் தங்கள் முன்னோரிடமிருந்தும் உணவு பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். தமிழகக் கடற்கரையோரம் வாழ்கின்ற மீனவர்களின் தினசரி உணவில் மீன் அல்லது கருவாடு நிச்சயம் இடம்பெறும். கிறிஸ்துவ விவிலியம், உலகத்திலுள்ள பிற உயிரினங்களை மனிதனுக்காக இறைவன் படைத்தான் என்கிறது. இஸ்லாமியரின் குர்ஆன், ஹலால் ஓதிச் சொல்லப்பட்ட விலங்கின் உடலைச் சமைத்துச் சாப்பிடலாம் என்று குறிப்பிடுகின்றது. இந்நிலையில் உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்ற ஜைன, பௌத்த சமயக் கருத்துகளைப் பிற மதத்தினர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை.

சங்க காலத்திலிருந்து இன்றுவரை இறைச்சியை உணவாகக் கொள்ளும் பெரும்பான்மைத் தமிழர்களும் திருவள்ளுவரின் புலால் மறுத்தல் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மாடன், இசக்கி, பாண்டி, முனி, காளி போன்ற பல்வேறு துடியான கிராமத்துத் தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலி கொடுத்துத்தான் வழிபாடு நடைபெறுகிறது. நாட்டார் தெய்வங்களும் குலதெய்வங்களும் நிரம்பிய தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் உயிர்ப்பலி கூடாது என்ற கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் திருவள்ளுவர் உணவுக்காகப் பிற உயிரினங்களைக் கொல்லுகிறவர்களைப் 'புலையர்' என்றும், அவ்வாறு கொல்லும்போது ஏற்படும் வெட்டினைப் 'புண்' என்றும் இழிவுபடுத்துகின்றார். அறக்கருத்து என்ற பெயரில் ஜைன சமயக் கருத்தைத் தமிழர்கள் மீது திணிக்கும்போது, புலால் உண்பதற்காகப் 'புலையர்' என்று திட்டுவது பொருத்தமன்று.

'புலால் மறுத்தல்' அதிகாரம் வலியுறுத்தும் அறக்கருத்துகளைப் பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், எல்லாத் தமிழர்களுக்கும் ஏற்புடைய கருத்துகள் திருக்குறளில் உள்ளன என்பது முரண்பாடானது. இந்நிலையில், இறைச்சியையே தினசரி முதன்மை உணவாகக் கொண்டுள்ள ஐரோப்பிய, அமெரிக்க மக்களிடையே ‘இறைச்சி உண்ணக்கூடாது' என்று அறம் போதிப்பது நடைமுறை சாத்தியமற்றது.

மது குடிக்கக்கூடாது என்பதனை அறமாக வலியுறுத்தும் வள்ளுவரின் குரலும் விமர்சனத்திற்குரியது. மது குடித்தலுக்குப் பல்லாண்டுகளாக மக்கள் பழகியுள்ளனர். மேலும் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் மேலை நாடுகளில் ’மது கூடாது' என்ற பேச்சுக்கே இடமில்லை. மது குடித்தலைக் குற்றமெனக் கற்பிக்கும் குறளின் அறக்கருத்து நவீன வாழ்க்கையுடன் முரண்படுகிறது.

புலால் உண்ணுதலையும், கள் குடித்தலையும் கடுமையாகக் கண்டிக்கும் திருக்குறளின் அறங்களை உலக மக்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா என்பது முக்கியமான கேள்வி. இந்நிலையில், நவீன வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற குறள்களை நீக்கிவிட்டு உலகத்து மக்களுக்கு திருக்குறளை அறிமுகம் செய்ய வேண்டியிருக்கும். அவ்வாறு திருக்குறளின் சில குறள்களை நீக்குதல் என்பது திருவள்ளுவருக்குச் செய்யும் பெருந்துரோகமாகும்.

(தொடரும்)

திருக்குறள் உலகப்பொதுமறையா? - சில சொல்லாடல்கள் (1)

தமிழ்க் கவிஞர்கள் யாருக்கும் இல்லாத பெருமை திருவள்ளுவருக்கு மட்டும் உண்டு. குமரிமுனையில் 133 அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிலையாக வள்ளுவர் நிற்பதற்குக் காரணம், அவர் திருக்குறள் என்ற அறநூலைப் படைத்ததுதான். சங்க காலத்திற்குப் பிந்தைய நூலாக திருக்குறள் ஏதோ ஒரு வகையில் தமிழில் தொடர்ந்து செல்வாக்குப் பெற்றிருக்கிறது. பக்தி இயக்கக் காலகட்டத்தில் முக்கியத்துவம் இல்லாமலிருந்த திருக்குறள், இருபதாம் நூற்றாண்டில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

வள்ளுவத்தின் எழுச்சி
தேவாரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், புராணங்கள் போன்றவற்றை இலக்கியமாகக் கருதிய சூழலில், அதற்கு மாற்றாகத் திராவிட இயக்கத்தினர் திருக்குறளை முன்னிறுத்திப் புதிய சொல்லாடலை உருவாக்கினர். கடவுளை மையமாக்கிப் புனையப்பட்ட பக்தி இலக்கியம் பரப்பிய நம்பிக்கைகளுக்கு எதிராக திருக்குறளின் அறிவுபூர்வமான கருத்துகள், தமிழகத்தில் முதன்மையிடம் பெற்றன. நாளடைவில் திருக்குறள் தமிழர் மறை அல்லது வேதம் எனப் போற்றப்பட்டது. மத அடையாளம் வெளிப்படையாக அற்ற திருக்குறளின் பொதுத்தன்மையானது சமூக சீர்திருத்த நோக்கமுடையவர்களைக் கவர்ந்தது.

அன்றைய காலகட்டத்தில் சமஸ்கிருதத்தினை தேவபாஷையாக உயர்த்திப் பிடித்த வைதிக இந்து சமய நெறிக்கு மாறாகத் தமிழின் மேன்மையை வெளிப்படுத்தத் திருக்குறள் பெரிதும் பயன்பட்டது. 1950-களில் தொடங்கி திருமண விழாக்களில் அன்பளிப்பாக வழங்கப்படும் பொருளாகத் திருக்குறள் இடம் பெற்றது. திருமண அழைப்பிதழ்களில், 'அன்பும், அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை...' எனத் தொடங்கும் திருக்குறள் அச்சடிக்கப்பட்டது.

தொடக்கப் பள்ளிக்கூடம் தொடங்கி உயர்கல்வி வரை திருக்குறள் தமிழ்ப் பாடத் திட்டத்தில் இடம் பெறுதல் கட்டாயமானது. எழுபதுகளில் பேருந்துகளில் இடம்பெற்ற திருக்குறள், ஓரளவு வாசிக்கத் தெரிந்தவர்களின் மனதில் பதிவாகியது. தமிழில் இருந்து உலக மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் திருக்குறள் ஆகும். இன்று தமிழின் அடையாளமாக அறியப்பட்டுள்ள திருக்குறளின் செல்வாக்கு, தமிழரின் வாழ்வில் ஆழமாக ஊடுருவியுள்ளது.

திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று ஒலித்த குரல்கள், தமிழைச் செம்மொழியாக அறிவித்தவுடன் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இன்னொரு புறம் திருக்குறளை உலகப் பொதுமறையாக உயர்த்திப் பிடிக்கும் போக்கு வலுவடைந்துள்ளது. அறக்கருத்து அல்லது நீதியைத் தமிழர்களிடையே போதிக்கும் அறநூலான திருக்குறள், ஒப்பீட்டளவில் வேறு எந்த நூலையும் விடத் தமிழறிஞர்களால் போற்றப்படுகின்றது. ஒவ்வொரு அறக்கருத்தும் மனிதர்களை மேன்மைப்படுத்தும் தன்மையுடையது என்ற கருத்தானது பொதுப்புத்தியாகத் தமிழரிடையே நிலவுகிறது. இத்தகைய போக்குகள் நுண்ணரசியலைப் பின்புலமாகக் கொண்டுள்ளன.

திருக்குறள் உலகப் பொதுமறையா?
உலகமயமாக்கல், தகவல் தொடர்புப் பரவல் காரணமாகத் தமிழ் அடையாளமானது பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. தமிழரின் வாழ்நிலையும் தமிழின் இருப்பும் முன்னைவிடச் சிக்கலுக்குள்ளாகியுள்ளன. அறிவியல், தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான வளர்ச்சிக்கேற்ப தமிழ்மொழியும் மாற வேண்டிய நெருக்கடியான சூழலில் உள்ளது. உலகமெங்கும் தமிழர்கள் பரவியுள்ள நிலையில், தமிழை உலகமொழிகளில் ஒன்றாக மாற்ற வேண்டியது இன்றைய உடனடித் தேவை. ஆனால், திருக்குறளை உலகப் பொதுமறை என்ற புனைவைக் கட்டமைத்துப் பிரச்சாரம் செய்யும் முயற்சி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகு சூழலில் மனிதர்கள் வாழவேண்டிய நெறிமுறைகள் யாவை என்பதைக் கண்டறிந்து, அவற்றைச் செய்யுள் வடிவில் தந்துள்ள வள்ளுவரின் கருத்தியலையும், அவை நவீனத் தமிழ்ச் சமூகத்தில் பெறுமிடத்தையும் மதிப்பிட வேண்டியுள்ளது.

நவீன மனிதனுக்கும் திருக்குறள் பிரதிக்குமான உறவு குறித்துக் கண்டறியும்போது புதிய சொல்லாடல்கள் பிறக்க வழியேற்படும். சங்க காலத் தமிழகத்தில் பல்வேறுபட்ட இனக்குழுவினர் ஒருங்கிணைந்தும் முரண்பட்டும், தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தினர். குடும்பம், அரசு போன்ற கருத்தியல்கள் வலுப்பெற்றுக் கொண்டிருந்தன. ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் குடும்பம் இருந்தது. அதே வேளையில் தாய் வழிச் சமுதாயத்தின் எச்சமாக விளங்கிய பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் கட்டுப்படாமல், ஆணைப் போலவே தன்னிச்சையாக வாழ்ந்தனர். போரில் எதிராளியைக் கொல்லுதல், இறைச்சி உண்ணுதல், கள் குடித்தல், ஆறலைக் களவு, ஆநிரை கவர்தல், ஒருவரையொருவர் விரும்பிய ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்ளுதல் போன்றன இயல்பாக நடைமுறையிலிருந்தன. கொண்டாட்டங்கள் நிரம்பிய அன்றாட வாழ்வில், தத்துவ போதனைகளைக் கேட்கவோ, போதிக்கவோ யாருக்கும் அக்கறை இல்லை. எனவே ஒழுக்க விதிகள் அல்லது அறக் கருத்துகளின் தொகுப்பு நூல் எதுவும் சங்க காலத்தில் எழுதப்படவில்லை.

பௌத்த, ஜைனத் துறவியரின் தமிழக வருகைக்குப் பின்னர், தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. வைதிக இந்து சமயம் கற்பித்த சாதிய ஏற்றத் தாழ்வு சமூகத்தில் வலுப்பெற்றது. உழவுத் தொழிலையும், வணிகத்தையும் அங்கீகரித்த ஜைன சமயம், மக்களிடையே நிலவிய பொருளியல் சமமற்ற சூழலை வினைக் கோட்பாடு மூலம் நியாயப்படுத்தியது. ஜைன சமயம் போதித்த அறங்கள் 'உயிர்க்கொலை கூடாது' என்பதை முதன்மையாகப் போதித்தன. பௌத்த சமயத்தின் பஞ்சசீலமானது கொல்லாமை, களவு செய்யாமை, காமம் கொள்ளாமை, பொய் பேசாமை, கள் குடிக்காதிருத்தல் ஆகியவற்றை அறங்களாக வலியுறுத்தியது.

மதத்தைப் பரப்புதலில் மதங்களுக்கிடையில் நடைபெற்ற பூசல்களும், மோதல்களும், கொலைகளும் அளவற்றவை. இத்தகு சூழலில் ஒழுக்கம் என்ற பொருளில் 'அறம்' என்ற சொல் உருவானது. எனவேதான் பெரும்பாலான அறங்கள் மதச்சார்புடையனவாக விளங்குகின்றன. சங்க காலத்தியக் கொண்டாட்டங்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகிய மதங்கள், வேறு வகைப்பட்ட நெறிகளை மக்களுக்குப் போதிக்கத் தொடங்கின. புத்தரின் போதனைகளைப் பரப்பிட முயன்ற புத்த பிக்குகளும், மகாவீரரின் கருத்துகளைப் பரப்பிய ஜைன துறவியரும் போதித்த கருத்துகள் நாளடைவில் அறங்கள் தோன்றுவதற்கான பின்புலத்தை உருவாக்கின. அன்றைய காலகட்டத்தில் தமிழில் பல அறநூல்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று நமக்குத் திருக்குறள் மட்டுமே கிடைக்கிறது.

(தொடரும்)

சென்னை-சில குறிப்புகள் 2: இப்படியும் ஒரு அரசு ஊழியர்

நம் தேசத்தில் அதிகமாகப் பொறாமைக்கு உள்ளான நபர்கள் சாஃப்ட்வேர் இளைஞர்கள் என்றால், நம் சமூகத்தினரால் அதிகமாக வெறுக்கப்படும் நபர்கள் அநேகமாக அரசு ஊழியர்களாகவே இருக்கக்கூடும். இதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று, அரசு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் சரியாக நடத்தப்படாமை ஆகும்.
நம் வாழ்க்கையின் ஆச்சர்யங்களுள் ஒன்று, மிகவும் அவநம்பிக்கையான சூழலிலும் நமது நம்பிக்கைகளை மீட்டெடுப்பதற்கென்றே எங்கேனும், யாரேனும் சிலர் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி ஒரு மனிதரை நான் சமீபத்தில் சந்தித்தேன். நான் ஏறத்தாழ கடந்த 25 வருடங்களாக, பல்வேறு ஊர்களிலும் உள்ள அரசு நூலகங்களுக்குத் தொடர்ந்து சென்று வருபவன். சில மாதங்களுக்கு முன்பு, என் வீட்டுக்கு அருகில் உள்ள கிளை நூலகம் இடிக்கப்பட்டபோது சற்றுத் தள்ளி சாந்தோம் பகுதியில், நீல்கிரீஸ்க்கு அருகில் ஜோனகன் தெருவில் உள்ள அரசு கிளை நூலகத்திற்குச் சென்றேன். அங்கு எனக்கு வரிசையாக இன்ப அதிர்ச்சிகள் காத்துக்கொண்டிருந்தன. ஒரு நாற்காலியில் உள்ள பதிவேட்டில் வழக்கம்போல் கிறுக்கலாக கையெழுத்தைத் தொடங்கியபோதுதான், நாற்காலியில் ஒட்டியிருந்த அறிவிப்பைப் படித்தேன். ‘கிறுக்காமல், முழுமையாகத் தெளிவாக கையெழுத்திடவும்.என்று அறிவிக்கப்பட்டிருந்தது. என்னடா இது வம்பாப் போச்சு என்று கையெழுத்தை ஒழுங்காக போட்டுவிட்டு நிமிர்ந்தால், அறிவிப்பு பலகையில், தினசரி வாழ்க்கைக்கு பயனளிக்கும் குறிப்புகளைக் கொண்ட (உதாரணம்: பன்றிக் காய்ச்சலிலிருந்து எவ்வாறு காத்துக்கொள்ளலாம்?)பல செய்தித்தாள் கட்டிங்குகள் ஒட்டப்பட்டிருந்தன. பரவாயில்லையே என்று நான் நினைத்து முடிப்பதற்குள், வாசலுக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்த நூலகர் மலர்ந்த முகத்துடன் சிரித்தபடி, "வாங்க சார்…" என்று தன் வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்பது போல் சந்தோஷத்துடன் வரவேற்றார்

 
ஒரு நிமிடத்திற்குள் பல இன்ப அதிர்ச்சிகளைத் தாங்குவதற்கு நான் தயாராக இல்லாத காரணத்தால், புன்னகையை மட்டும் பதிலாக அளித்துவிட்டு மாடி ஏறினேன். மாடியில் அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. செய்தித்தாள்கள் படிப்பதற்கு ஒரு தனி மேஜையும், வார, மாத இதழ்கள் படிப்பதற்கு ஒரு தனி மேஜையும் ஒதுக்கப்பட்டிருந்தது. வார, மாத இதழ்கள் சுவற்றில் கயிறு கட்டி வரிசையாக குப்புறப் போட்டு வைக்கப்பட்டிருந்தது. அது எடுப்பதற்கு எளிதாக இருக்கும். மேலும் பல நூலகங்களிலும் அதனை ஒரு மரப்பெட்டியில் போட்டு வைத்து, அதனைப் பலரும் நோண்டி நோண்டி எடுத்து, இரண்டே நாளிற்குள் புத்தகங்கள் நாசமாகிவிடும். இங்கு கயிற்றில் போடப்பட்டிருந்ததால், அவைகள் மெருகு குலையாமல் இருந்தன. நான் படித்துக் கொண்டிருக்கும்போதே மேலே வந்த நூலகர், ஆளில்லாத பகுதியில் ஓடிக்கொண்டிருந்த ஃபேனை நிறுத்துகிறார். டேபிளில் கிடக்கும் புத்தகங்களை எடுத்து மீண்டும் கயிற்றில் மாட்டி வைக்கிறார். என்னைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுக் கீழே செல்கிறார். மறுநாள் சென்று படித்துக் கொண்டிருந்தபோது என் அருகில் வந்த நூலகர், "உங்களுக்கு புத்தகம் படிக்கிற ஹேபிட் இருந்தால், மெம்பர் ஆவலாமேஅம்பது ரூபாதான் மெம்பர்ஷிப் ஃபீஸ். வருஷத்துக்கு பத்து ரூபா ரெனிவல் சார்ஜ் அவ்வளவுதான்." என்று கேன்வாஸ் செய்தார். எனது 25 வருட அரசு நூலக அனுபவத்தில், தனது நூலகத்தில் மெம்பர் சேர்ப்பதற்காக கேன்வாஸ் செய்யும் ஒரு நூலகரை முதன்முதலாகக் காண்கிறேன். "இல்ல சார்நான் ஏற்கனவே வேற ஒரு லைஃப்ரரில மெம்பர் சார்அதுவுமில்லாம நான் படிக்க நினைக்கிற புத்தகங்களை பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கி விடுவதால், அந்த கார்டிலும் இப்போது புத்தகங்கள் எடுப்பதில்லை." என்றேன். அப்போதும் மனிதர் என்னை விடுவதாயில்லை. "உங்க ஏரியாவுல யாராச்சும் புத்தகம் படிக்க இன்ட்ரெஸ்ட்டா இருந்தா, அவங்கள மெம்பராவச் சொல்லுங்க சார்நீங்க கூட உங்க கார்ட ரெனிவல் பண்ணிக்கிட்டு, இங்க நீங்க படிக்காத பழைய புத்தகம் இருந்தா படிக்கலாமே…" என்றவரை உற்றுக் கவனித்தேன். ஏறத்தாழ 40 வயதிருக்கும். நெற்றியில் ஒரு சிறு கீற்றாக திருநீறு. கண்ணாடி அணிந்திருந்தார். நெற்றியின் மேல்பக்கம் இதோநான் வந்துவிட்டேன் பார்... என்று அறிவிப்பு செய்தபடி ஆரம்பித்திருக்கும் மிக லேசான வழுக்கை. முகத்தில் மாறாத அந்த விளம்பரச் சிரிப்பு. மறுவாரம், இவ்வளவு பிரியமாகப் புத்தகம் படிக்கச் சொல்கிறாரே என்று எனது அட்டைகளை எடுத்துக்கொண்டு சென்றேன்(சென்னையில் நீங்கள் அரசு நூலக உறுப்பினராக இருந்தால், கன்னிமாரா லைப்ரரி தவிர சென்னையில் உள்ள அனைத்து அரசு நூலகங்களிலும் புத்தகங்கள் எடுத்துப் படிக்கலாம்.). புத்தக அடுக்குகளுக்குள் நுழைந்தால் அடுத்த அதிர்ச்சி. பெரும்பாலும் சிறு கிளை நூலகங்களில் தற்போது பொருள் வாரியாகப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதில்லை(காரணம் ஆட்கள் பற்றாக்குறை என்கிறார்கள்). இங்கு முறையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மறைந்த மலையாள இயக்குனர் ஜான் ஆப்ரஹாம் பற்றி நான் ஏற்கனவே படித்திருந்த ஒரு புத்தகம் இருக்கிறதா என்று நான் அவரிடம் கேட்டவுடன் எழுந்து வந்து, சினிமாப் பகுதியில் அக்கறையாகத் தேடி எடுத்துக்கொடுத்தார். புத்தகங்களை அவர் என்ட்ரி போடும்போது, "லைப்ரரியை நன்றாக வைத்திருக்கிறீர்கள்." என்றேன் பாராட்டாக. அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், ~~இன்னும் நிறைய செய்யலாம் சார்ஆனா அதுக்கு சௌகரியப்படல." என்றார். நான், "ஏன் நல்லாதானே வச்சிருக்கீங்க…" என்றேன். "இல்ல சார். இங்க பெரிய பிரச்சினை, புத்தகம்ல்லாம் அடிக்கடி தூசியாயிடுது. குறைஞ்சது வாரத்துக்கு ஒரு தடவையாச்சும் துடைச்சு வச்சாதான், நல்லாருக்கும் நம்ம ஒண்டி ஆளால முடியல." என்றார். நான், "புத்தகமெல்லாம் சுத்தமாத்தானே இருக்கு…" என்றேன். அதற்கு அவர், "அதுஇங்க நான் பக்கத்து தெருவுல விளையாண்டுகிட்டிருக்கிற சின்னப் பசங்கள கூப்பிட்டு, அவங்களுக்கு ஏதாச்சும் வாங்கித் தந்து அப்பப்ப சுத்தம் பண்ணி வைப்பேன்." என்றார். "இதுக்கு கைக்காசுல்லாம் செலவாயிருக்குமே…" என்றேன். "ஆமாம் சார்இதுவரைக்கும் ரெண்டாயிரம் ரூபாய் செலவு பண்ணியிருக்கேன் சார். ஆனா அதெல்லாம் எனக்குக் கவலையில்ல. இப்பல்லாம் யாரும் லைப்ரரிக்கே வர்றதில்லநீங்களே பாத்தீங்கள்லமேல ரெண்டு பேர் உக்காந்து படிச்சுக்கிட்டிருக்கீங்கஇப்ப இங்க ஆக்டிவா இருக்கிற மெம்பர்ஸ்னா 70 பேர்தான்…" என்றார் கவலையுடன். நூலகத்திற்கு ஆட்கள் வருவதில்லை என்ற வருத்தத்துடன் தொடர்ந்து உறுப்பினர்களைச் சேர்க்க முயன்றுகொண்டிருக்கும் அந்த மனிதரைக் கட்டி அணைத்துப் பாராட்டவேண்டும் போல இருந்தது. இவர் நூலகத்தை நன்றாக வைத்திருப்பதுடன் விடாமல் இரண்டு, மூன்று நாட்கள் விடுமுறையில் சென்றால், ரெகுலராக லைப்ரரிக்கு வரும் வாசகர்கள் வந்து ஏமாந்து போகக்கூடாது என்று அவர்களின் மொபைல் நம்பர்களை வாங்கி வைத்துக்கொண்டு எஸ்.எம்.எஸ்.ஸில் முன்கூட்டியே தகவலும் தெரிவித்துவிடுகிறார். இவரைப் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்துவிட்டு அவரைப் பற்றிய தகவல்களைக் கேட்டேன். பெயர் முரளி. அங்கு தற்காலிக நூலகராக, கடந்த ஓராண்டாகப் பணிபுரிவதாகக் கூறினார். தினக்கூலியாக ரூ. 162 பெறுகிறார். அவர் பணிகளை நான் பாராட்டியபோது, "எனக்கு ஒண்ணும் இதெல்லாம் பெருசாத் தெரியல சார்நான் ஒரு வாசகரா லைப்ரரிக்குப் போனப்ப, இப்படியெல்லாம் செய்யலாமேன்னு நான் நினைச்ச விஷயங்களத்தான் இங்க செஞ்சுகிட்டிருக்கேன் சார்…" என்றார் அடக்கத்துடன். போன வாரம் சென்னை வந்திருந்த என் தந்தையும் அந்த நூலகத்திற்குச் சென்றுவிட்டு வந்து ~~டேய்அங்க ஒரு லைப்ரரியன் இருக்காருடா. இத்தனைக்கும் நான் கைலி கட்டிகிட்டுத்தான் போனேன்வாங்கன்னு கல்யாண வீட்டுல வரவேற்கிற மாதிரி பயங்கர உபச்சாரம்." என்றார். நான் பதிலுக்கு சுருக்கமாக, "அவர் அப்படித்தான்." என்றேன். இக்கட்டுரையை முடிக்கும் நேரத்தில், மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் இந்த வரிகள் நினைவிற்கு வருகிறது: ‘வாழ்க்கை மகா அற்புதமான ஒன்று. அது ஒருபோதும் எதிர்பாராத ஏதோ ஒன்றை உங்களுக்குப் பொத்தி வைத்து எப்போதும் காத்திருக்கிறது.