புதன், 22 ஜூன், 2011

சட்டம் மட்டுமே போதாது!

காமாலைக் கண்ணால் பார்த்தால் எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும் என்பார்கள், அதேபோல, கடந்த 64 ஆண்டுகளில் இந்தியாவில் உருப்படியாக எதுவுமே நடக்கவில்லை என்று யாராவது சொன்னால், அது காமாலைப் பார்வை என்றுதான் கூறவேண்டும். நாம் முன்னேறியிருக்க வேண்டிய அளவுக்கு முன்னேறவில்லையே தவிர, இந்தியாவின் முன்னேற்றம் அபரிமிதமானது என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

நமது வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கற்களாக இருப்பவை, மக்கள் மத்தியில் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும், நமது நியாயமான உரிமைகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் இருப்பதும், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் "சிவப்பு நாடா' கலாசாரமும்தான். இவை இரண்டுமே, காலனிய அடிப்படைச் சிந்தனைகள்தான் என்பதை 64 ஆண்டுகளாகியும் நாம் உணர்ந்து அதிலிருந்து விடுபடாமல் தொடர்வதுதான் துர்பாக்கியம்.

இந்தக் காலனிய சிந்தனையைத் தகர்த்தெறியும் விதத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்து எழுந்த மக்கள் குரல், மத்திய அரசை நிர்பந்தித்து தகவல் பெறும் உரிமையைச் சட்டமாக்க வைத்தது. அதிகம் படிப்பறிவில்லாத ராஜஸ்தானிய கிராமத்தினரின் போராட்டம், அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது மட்டுமல்ல, இப்போது அந்தச் சட்டத்தின் தொடர்விளைவாக, அரசியல் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை ஓரளவுக்கு உறுதிப்படுத்தவும் உதவியிருக்கிறது.

எந்த அளவுக்குத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பொதுமக்களால் பயன்படுத்தப்படுகிறது என்பது விவாதத்துக்குரிய ஒன்றாக இருந்தாலும், நிச்சயமாக இந்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதும், நாளுக்கு நாள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் இந்திய ஜனநாயகம் தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனை "தகவல் பெறும் உரிமைச் சட்டம் - 2005' என்றால் இப்போது இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனையாக தொலைநோக்குப் பார்வையுடன் இன்னொரு மசோதா விரைவிலேயே சட்டமாக்கப்பட இருக்கிறது. தகவல் பெறும் உரிமைச்சட்டம் எந்த அளவுக்கு அரசியல் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த உதவியதோ, அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கும் ஒரு மசோதா பயன்படும்.

நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கும் "மின்னணுவழிச் சேவை வழங்கல் வரைவு மசோதா - 2011' பல வகைகளில் அரசு அலுவலகங்களில் காணப்படும் கையூட்டுகளுக்கு முடிவுகட்ட உதவும். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் இணையதளத்தில் காணப்படும் இந்த வரைவு மசோதா சட்டமாக்கப்பட்டால், அரசு அலுவலகங்களில் மனுக்களைக் கொடுத்துவிட்டு மேஜைக்கு மேஜை ஒவ்வோர் அதிகாரியாக கெஞ்சிக் கூத்தாடி, கையில் கொடுத்து, காலைப் பிடித்து நமது நியாயமான உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் பொதுமக்கள் போராட வேண்டிய தேவையிருக்காது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டுவிட்டால், லைசென்ஸ், பர்மிட், சான்றிதழ், அனுமதி அல்லது உத்தரவு, பணம் அடைப்பது அல்லது பெறுவது போன்ற எல்லா அரசுத் துறைகள் சம்பந்தப்பட்ட அலுவல்களையும் இணையதளத்தின் மூலம் இனிமேல் செய்துகொள்ள முடியும். தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ல் காணப்பட்டதுபோலவே, இந்தச் சட்டத்திலும் குறைகளைப் பதிவு செய்யவும் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படாத அரசு அலுவலர் அல்லது அதிகாரிக்கு அபராதம் விதிக்கவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் எல்லாத் துறைகளும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு அலுவல்கள் அனைத்திலும் மின்னணு சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது இந்த மசோதா. இந்தச் சட்டம் மத்திய அரசுக்கு மட்டுமல்லாமல், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தைப்போலவே எல்லா மாநில அரசுகளுக்கும்கூடப் பொருந்தும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இணையதள சேவை மூலம் அரசு அலுவல்கள் நடைபெறுவது என்பது காலத்தின் கட்டாயம். இல்லாமல் போனால், அரசு அலுவல்களைப் பீடித்திருக்கும் லஞ்சமெனும் காலனிய அடிமைத்தன அடையாளமான புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வின்படி இணையதள சேவையைச் செயல்படுத்துவதில் உலகிலுள்ள 192 நாடுகளில் இந்தியா 119-வது இடத்தில்தான் இருக்கிறது. மின்னணு சேவை உறுதிப்படுத்தப்படுமேயானால், ஐக்கிய நாடுகள் சபையின் லஞ்ச ஊழல் பட்டியலிலும் நிர்வாகத் திறமையின்மைப் பட்டியலிலும் இந்தியா நகைப்புக்குரியதாக இருக்கும் இன்றைய நிலைமை தொடராது.

தகவல் பெறும் உரிமைச்சட்டமும் சரி, மின்னணு சேவையை உறுதிப்படுத்தக் கொண்டுவரப்படும் சட்டமும் சரி, ஒருவேளை ஆளும் கூட்டணிக்கேகூட எதிரான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று தெரிந்தும், இந்தியாவின் வருங்காலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு இதைச் சட்டமாக்க முன்வந்திருக்கும் மன்மோகன் சிங் அரசை நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். நல்ல நேர்மையான நிர்வாகம் உறுதிப்படுத்தப்பட்டு, அடிப்படைச் சேவைகளில் லஞ்ச ஊழல் ஒழிக்கப்படுவது என்பதேகூட அரசுக்கு நல்ல பெயரை வாங்கித்தரக் கூடும்.

சட்டங்களை இயற்றுவதால் மட்டுமே மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியாது. சட்டம் என்பது வெறும் ஆயுதம் மட்டுமே. அதை முறையாகப் பயன்படுத்தினால்தான் பயனை அனுபவிக்க முடியும். தகவல் பெறும் உரிமைச்சட்டத்தையும் மின்னணுவழிச் சேவை வழங்கல் சட்டத்தையும் முறையாகப் பயன்படுத்தி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது மக்களின் கையில்தான் இருக்கிறது.

நன்றி-தினமணி

0 கருத்துகள்: