வியாழன், 11 நவம்பர், 2010

பொங்குமா கடல் வளமும்......வண்டி சேர் சகதியும்.....கொள்ளையர் வசம்....?

" ஒரு நாட்டின் வளம் ,அது தன்னகத்தே கொண்டுள்ள கடல் அமைப்பை பொறுத்து அமைகிறது."
மெக்கலன் குறிப்புகள்:
கடந்த 25 ஆண்டுகளில் உலகளாவிய அளவில் ,கனிமங்களின் மூலம் ஈட்டும் பொருளாதாரம் அளப்பரிய அளவில் உள்ளது. தன் நாட்டுக் கனிம வளங்களைச் சுரண்டியது போக , இப்போதெல்லாம் பிற நாட்டில் கை வைப்பதும் ,போதாக்குறைக்கு ,கடலுக்குள்ளும் ஆய்வு நடத்தி ,அங்கு கனிமங்களை சுரண்டலாமா? எப்படி எடுப்பது? என்பது போன்ற ஆராய்ச்சி முடிவுகள் அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாக உள்ளது. பெட்ரோல், வாயு போன்றவை கடலிலிருந்து ஈட்டப்படும்போது ,பிற கனிமங்களையும் நாம் ஏன் வெட்டி எடுக்கக்கூடாது என்பது போன்ற கேள்விகள் ,பதில்களே இல்லாமல் ஆக்கி விடுகின்றன. பாப்புவா நியூ கினியா ,தனது கடல் பகுதியில் ,உலகின் முதல் ஆழ்கடல் கனிம வள சுரங்கம் அமைக்க பச்சைக் கொடி காட்டியிருப்பது இயற்கை ஆர்வலர்களையும் ,கடல்சார் ஆய்வறிஞர்களையும் எச்சரிக்கை கொள்ளச் செய்துள்ளது. கனடா நாட்டு கனிம ஆய்வு கம்பெனியான நாடிலஸ் மினரல்சுடன் ,பாப்புவா நாட்டுப் பிரதமர் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த ஒப்பந்தப்படி ,அந்நாட்டின் கடல் பகுதியில் படிந்துள்ள தங்கம், துத்தநாகம், செம்பு, போன்ற கனிமங்களைத் தோண்டியெடுப்பது என்றும், நாட்டிற்கு கொடுத்தது போக ,தனக்கும், அதிபருக்கும், தனியாக கவனிக்க வேண்டும் என்றும் கைசாத்தாகியுள்ளது.1,600 மீ. ஆழத்தில் HYDRO THERMAL VENT முறையில் தோண்டப்படும் கனிமங்களால் இவர்களது வாழ்க்கை செழிக்கப் போகிறது. செளத் ஆம்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிஞர் பால் டெய்லரின் கூற்றுப்படி ,அங்குள்ள உயிரமைப்பான FAUNA முற்றிலும் சிதைவடையப்போகிறது. இனி ஒரு காலமும் உருவாக்க முடியாது. சுரங்கம் தோண்டத் தோண்ட கடல் முற்றிலும் மாசடையும். FAUNA இல்லாமல் போகும். அரிய கடல்வாழ் உயிர்கள் உயிரிழக்க நேரிடும் என புலம்புவது SCIENCE DAILY ல் ஒரு துணுக்குச் செய்தியாகத்தான் வெளிவந்துள்ளது. கனடா கம்பெனியின் சேர்மன் ,தாங்கள் போட்டிருக்கும் முதலீட்டிற்கு ,ஒரு நாளைக்கு 1.2 முதல் 1.8 டன்கள் உயர்ரக சல்பைட் மூலத் தாதுவைத் தோண்டி எடுத்தால்தான் ,இன்றைக்கு இருக்கும் தேவைக்கு ஏற்றாற் போல் தங்களால் செயல்பட முடியும் என்கிறார்.

1872ல்தான் முதன் முதலாக கடலில் கனிம வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உலகிற்குத் தெரியப்படுத்தப்பட்டது. தற்போதைய நவீன ஆராய்ச்சி சில மாதங்களுக்கு முன்பு ZAIRE நாட்டில் அதிகளவு கனிமங்கள் படிமங்களாகத் தேங்கிக் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. 4000 --6000 மீ. தொலைவில் நிக்கல், கோபால்ட், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்றவை உள்ளது. இதை தோண்டி எடுத்து முறையாகப் பிரித்தெடுக்க பெரும் முதலீடு தேவைப்படுகிறது. கடலின் மிக ஆழத்தில் உள்ள சகதியில் புதைந்துள்ள இக்கனிமங்கள் நாட்டின் பெரும் பொருளாதாரப் பின்புலமாக விளங்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக இதன் அதிபர் கூறுகிறார். இவர் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் ,மிகச் சாதாரண மீனவர் முதல் படித்த, பாண்டித்தியம் பெற்ற ஆய்வறிஞர்கள் வரை இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தான்.இது போன்ற ஓர் ஆய்வு ,பரிசோதனை முறையில் செங்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இனிவரும் காலங்களில் கடலை நம்பியே ஆக வேண்டிய சூழல் வரலாம். இப்போதே சுவிட்சர்லாந்து போன்றவை, தங்கள் காற்றாலைக் கம்பங்களைக் கடலில் அமைத்து வருகின்றன. காரணம் அங்கு கிடைக்கும் தங்கு தடையில்லாத காற்று . வரும் காலங்களில் கலைஞர் குடும்பமும் ,ஆந்திரா கம்பெனிகளுக்குப் பதிலாகத் தாங்களே இத்தகைய பெரும் தொழிலில் ஈடுபடலாம். அம்மா கேள்வி கேட்டால் ,திராவிட நாட்டில், திராவிடனுக்கு இல்லாத தொழில் சுதந்திரமா? என பதிலும் கூறலாம்!! கோபால்ட் இருப்பதிலேயே மிக முக்கிய கனிமம். ஜப்பான், அமெரிக்கா நாட்டுச் சந்தைகள் இதற்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றன. அதிகமான விலை ஏற்றம் உள்ளதும், அத்தியாவசியமானதும் இதுவே. குறிப்பாக ஜெட் விமான எஞ்சின் தயாரிப்புகளுக்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது. சுனாமி பாதித்த கடல் வடி பகுதிகள், எரிமலைக் குழம்பு ,இயற்கையிலேயே ஏற்பட்ட பூமி பிளவு போன்ற இடங்களிலிருந்து மட்டுமே இதுகாறும் தோண்டி எடுக்கப்பட்ட கோபால்ட், தற்போது கடலில்,ZAIRE நாட்டில் தோண்டியெடுக்கப்பட உள்ளது. 340 வருடங்களுக்கு நம் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு இங்கு படிந்துள்ளது. இதற்காக 100 இடங்களில் சோதனை நடத்தப்பட உள்ளது. POLY METALLIC SULPHURIC DEPOSITS என இது அழைக்கப்படுகிறது. 1958ல் ஐநா நடத்திய ஜெனிவா மாநாட்டில் LOS என அழைக்கப்படும் (LAW OF SEA) 1958 கடல் சார் ஆய்வு குறித்து சட்டங்களும், நியதிகளும் வகுக்கப்பட்டன. அப்போது அது பெரும் கவனம் பெறவில்லை. இதில் பாதுகாப்பு, எல்லை நிர்ணயம், சர்வதேச கடல் எல்லை அறிதல் ,பாதையை சரி செய்தல், உயிரின சேதம் குறைத்தல், இயற்கையை பாதுகாத்தல், என பல அம்சங்கள் காணப்படுகின்றன. வழக்கம் போலவே அமெரிக்கா இச்சட்ட வரையறையை கண்டுகொள்ளவே இல்லை. 1970 ல் அதிபராக வந்த ரொனால்ட் ரீகன், வேண்டுமெனில் சட்டத்தில் சாத்தியமாகும் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். கடல்மாசு அடைவதைத் தடுப்பது ,எல்லைகளைக் கடக்காமல் பார்த்துக் கொள்வது போன்ற அபத்த சட்டங்களை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ,தொழிலை முடக்கும் இத்தகைய வாதங்கள் கடும் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என்றும் காட்டத்துடன் பேட்டியளித்தார்.

" சுற்றுச்சூழல் பற்றி அதிகம் பேசுவோர் ஒன்று கவனிக்க வேண்டும் .சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத கார் தயாரிக்க 2 மடங்கு தாமிரம் தேவைப்படும். அது என்ன வானிலிருந்தா கொட்டும்? எங்கு கிடைக்கிறதோ ,அங்குதான் தோண்டியெடுக்க முடியும். நேற்று நிலத்தில் ,இன்று கடலில். இதில் ஒன்றும் தவறு இல்லையே?" இப்படி பேசிக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானவர் ,டாக்டர் .டேவிட் ஹெயிட்டன். வான் கூவரில் தலைமை அலுவலகம் அமைத்து ,பாப்புவா நாட்டில் கடல் கனிம வள ஆராய்ச்சி செய்யும் நிறுவனத்தின் சேர்மன்.இவரின் கடல் கனிம வள தோண்டல் குறித்துக் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இதுவரை எந்த நிறுவனமும் தோண்டாத அளவு தாமிரம், தங்கம், வெள்ளி, ஈயம் என பெருமளவில் தோண்டியெடுத்ததைப் பெரும் சீரழிவு இயற்கைக்கு இழைக்கப்பட்டதாகவே கருதுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.120 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வர்த்தக உடன்படிக்கைக்கு பிறகு, ராட்சச இயந்திரங்கள் ,பிரம்மாண்ட போர்க்கப்பல்கள் கொண்டு 1700 மீ. ஆழத்தில் தோண்டும் பணி துவங்கியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ,பாப்புவாவின் பிஸ்மார்க் கடலில் இவர் தோண்டியெடுத்த தங்கமும், தாமிரமும் உலகின் பார்வையை இவரின் பக்கம் திருப்பியது. 1950ல் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணையும், வாயுவும், ஒரு வரலாற்றுச் சாதனை என்றால், இப்போது நடத்தப்படும் ,கடல் கனிம ஆய்வு ,மக்களின் அன்றாட தேவை கருதியே தவிர மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்கிறார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சீன ,இந்திய மக்கள் அதிகளவு கனிமங்களை உபயோகிக்கத் துவங்கியுள்ளனர். எல்லா நேரமும் சூரிய ஒளி கலன் பொருத்தப்பட்ட கார்களோ ,அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற பொருட்களோ தயாரிக்கமுடியாது. அவ்வாறு தான் வாழ்வேன் என்றால் நீங்கள் நாகரீகம் இல்லாத காட்டுமிராண்டிகளாகவும், கழுதை, குதிரைகளைப் பயணத்திற்கு உபயோகிப்பவராகவுமே இருக்க வேண்டும். சுற்றுச் சூழல் பற்றி பேசுவோர் வீட்டில் நிச்சயம் "பிளாஸ்மா டி.வி. " உள்ளது. அது தயாரிக்க ஈயமும் ,தாமிரமும் வேண்டாமா? காபி மேக்கர், ஆடம்பரப் பொருட்கள், அடுப்பறை சாமான்கள் என உலகம் விரிவடைகிறது. பலரின் எண்ணமும் இங்கு மதிக்கப்பட வேண்டும் என்பதற்கு சில கண்டுபிடிப்புகள் அத்தியாவசியமாகிறது என நீண்ட விளக்கம் அளித்து ,பல ஆர்வலர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார்.

இவரின் தலைமையில் பசிபிக் பெருங்கடல் ,பிஜி, சாலமன் தீவுகள், பாப்புவா கடல் பகுதிகளில் பெரும் கனிம வளத் திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு ஏராளமான தங்கப் படிமங்கள் இருக்கலாம். சுத்தப்படுத்தப்படாத கனிம மண் படிமங்கள் மிதப்பதால் ,நீர் மாசடையும். இவரைப் பார்த்து இங்கிலாந்து கம்பெனியும் போட்டி போடுகிறது. அய்யோ........... இயற்கைக்குப் பேரழிவை ஏற்படுத்துகிறோமே எனப் புலம்புவதை விட ,அறிவியலின் துணையுடன் நாம் வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதுதான் புத்திசாலித்தனம். நாளைய கருத்துக்கள் பற்றிய கவலையை விடுங்கள் .நீங்கள் அழிக்காவிட்டால் வேறு யாராவது இப்பூமியில் இயற்கைக்குக் குந்தகம் விளைவிக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஒருபுறம் காடுகளை வெட்டுவதும் மறுபுறம் உருவாக்குவதும் இப்போதெல்லாம் சர்வ சாதாரணம் .அதுபோலத்தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது இவரது மற்றொரு அறிக்கை.
இப்படி பேசும் மனிதர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? ....காசி காண்டத்தைப் படித்தாவது யாராவது கூறுங்களேன்......!

குழந்தைகள் கடத்தலும் வர்க்கப் பார்வையும்

மெளனத்தில் கரையும் அடித்தட்டு குழந்தைகளின் கண்ணீர் 

கோவையில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் பெண் குழந்தை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறது. சென்னையில் இரண்டு சம்பவங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டு உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமூகமும் தங்களது குழந்தைகள் பள்ளிக்குப் பாதுகாப்பாகச் சென்று திரும்புவார்களா என்று பீதியடையச் செய்திருக்கின்றன இந்தச் சம்பவங்கள். பள்ளி வாகனத்தில் அனுப்பி வந்த குழந்தைகளைத் தாங்களே நேரடியாக அழைத்து வருவது என ஒரு சில பெற்றோர் இந்நேரம் முடிவெடுத்திருப்பார்கள். எனினும் அந்த வைராக்கியத்தை அவர்களால் கொஞ்ச நாள் மட்டுமே காப்பாற்ற முடியும். கூட்டுக் குடும்பம் சிதைந்துபோன, கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிற இன்றைய காலகட்டத்தில் அது குறுகிய காலத்திற்கு மட்டுமே சாத்தியம்.  

                ஒரு பிரச்சினை நடுத்தர வர்க்கத்தின் வாசலில் எட்டிப் பார்க்கும்போது ஏற்படுகிற உணர்ச்சிப் பெருக்கையும் அரசுக்கு அவர்கள் ஏற்படுத்துகிற மறைமுகமான நெருக்கடியையும் பார்க்கும்போது, உண்மையில் மக்கள் மனது வைத்தால் இந்த ஜனநாயகத்தை நிஜமான ஜனநாயகமாக உயிர்ப்புடன் வைத்திருக்கும் சாத்தியங்கள் உள்ளன என்ற நம்பிக்கை பிறக்கிறது. கோவையில் ஏதோ ஒரு குடும்பம் தனது இரண்டு பிள்ளைகளையும் கடத்தல்காரர்களிடம் இழந்துவிட்டு நின்றபோது, இத்தகைய பிரச்சினை தங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் நிகழக்கூடும் என்று கருதிய ஒட்டுமொத்த நடுத்தர வர்க்கமும் அதிர்ந்து போனது. ஒரு மக்கள் செல்வாக்கு கொண்ட மிகப் பெரிய தலைவரின் இறுதி ஊர்வலம் போல அந்தக் குழந்தைகள் பெரும் திரளான மக்கள் அலையுடனும் உணர்வு அலையுடனும் அடக்கம் செய்யப்பட்டார்கள். பல லட்சங்களையோ, கோடிகளையோ ஈர்க்க முடிகிற மேல்நடுத்தர, பணக்கார வர்க்கத்தினரையே இத்தகைய கடத்தல்காரர்கள் பணம் கேட்டு மிரட்டுவதற்காக கடத்துகிறார்கள் என்றாலும், நடுத்தர வர்க்கம் இது தனது குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடும் என அஞ்சியது. அந்த உணர்ச்சி அலை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே அசைத்துப் பார்த்தது. கடத்தல்காரர்கள் மீது ஏற்பட்ட கோபம், அதைத் தடுக்காத போலீஸ் மீது ஏற்பட்ட கோபம் தி.மு.க. அரசாங்கத்தின் மீது திரும்பும், தேர்தலில் அதன் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று உணர்ந்த மறுகணமே திராவிட அரசியல்வாதிகள் போர்க்களத்தில் இறங்கினார்கள். காவல் துறை நியமனங்களில் ஊழலையும் பரிந்துரைகளையும் புகுத்தி அதை மந்தமாக்கிய அரசாங்கம் திடீரென சாட்டையை சொடுக்கியது. நல்ல தூக்கத்திற்கு நடுவில் எழுப்பிவிட்டு வேட்டைக்கு அனுப்பப்பட்டதாலோ என்னவோ சற்று தடுமாறிவிட்டுக் கடைசி இரு சம்பவங்களிலும் கடத்தப்பட்ட சிறுவர்களை உயிருடன் மீட்டிருக்கிறார்கள் போலீஸ்காரர்கள்; ஒரு சம்பவத்தில் பணத்தையும் கொடுத்த பிறகு. சம்பவம் முடிந்ததுமே அவர்களின் பி.ஆர். வேலை தொடங்கியது. ஒரு தந்திர யுக்தியாகத்தான் பணம் கொடுக்கப்பட்டது என்றார் முதல்வர் மு.கருணாநிதி. கோவையில் குழந்தைகள் கடத்தப்பட்டது குறித்து தாமதமாகவே போலீசுக்குப் புகார் தரப்பட்டதுதான் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற முடியாமல் போனதற்குக் காரணம் என்று சென்னையின் கமிஷனர் கண்ணாயிரம் உதாராகப் பேசினார். குழந்தைகள் கடத்தப்பட்டுவிட்டால் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் தங்களை எழுப்ப ஒரு வாளித் தண்ணீருடன் காவல் நிலையத்தை உடனடியாக அணுக வேண்டும், இல்லாவிட்டால் ஆபரேஷன் தோற்றதற்கு நீங்களே காரணம் என்று எஃப்.ஐ.ஆர். போடுவோம் என்ற ரீதியில் பேசியிருக்கிறார். கேடி கோயபல்ஸ் இப்படி நபர்களையும் ஊடகங்களையும் வைத்துக் காட்சியைத் தனக்கு சாதகமாக மாற்ற முடயற்சி செய்தால், ரவுடி ராக்கம்மா சும்மா விட்டுவிடுவாரா? தமிழகத்தில் சமீப காலமாக வரிசையாக நடக்கும் குற்றச் சம்பவங்களையும் குற்றங்கள் செய்வதன் ஒட்டுமொத்த டீலர்ஷிப் எடுத்துக்கொண்டிருக்கும் தி.மு.க. கட்சிக்காரர்களையும் பற்றி சம்பவ உதாரணங்களுடன் விளாசிவிட்டார் விளாசி. இந்த அரசியல் அக்கப்போருக்கு நடுவில் உண்மையில் காணாமல் போயிருப்பது அடித்தட்டு வர்க்கத்தின் கொடுத்து வைக்காத குழந்தைகள்தான்.



                இந்தியாவில் 2005ல் மட்டும் 44,476 குழந்தைகள் காணாமல் போகிறார்கள். இதைவிட அதிகமான குழந்தைகள் வேலைக்கு என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு கொடுமையான தொழிற்சாலைகளிலும் அதைவிட கொடியவர்கள் நிரம்பிய வீட்டு வேலைக்கும் பலர் பிராத்தல்களிலும் தள்ளப்படுகிறார்கள். இந்தியாவிலுள்ள 28 லட்ச பாலியல் தொழிலாளர்களில் 43 சதவீதம் பேர் வயதுக்கு வராதவர்கள். அதில் பெரும்பாலானோர் அதில் குடும்பத்தாலேயே கட்டாயப்படுத்தி தள்ளப்பட்டவர்களும் இருப்பார்கள், கடத்தப்பட்டு தள்ளப்பட்டவர்களும் இருப்பார்கள். இதில் பிரதானமாக பாதிக்கப்படுவது, ஏழ்மையின் பிடியில் இருக்கும் அடித்தட்டு குடும்பத்துக் குழந்தைகளே. அடித்தட்டு வீட்டுக் குழந்தைகள் ரயிலில் கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்லப்படும்போதோ, அவர்கள் ஏதோ ஒரு வீட்டில் காவலாளியால் அல்லது முதலாளியால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படும் போதோ நடுத்தர வர்க்கத்தின் உணர்வுகள் இவ்வாறு பொங்கி எழுவதில்லை. அத்தகைய ஒரு நிகழ்வு தங்கள் வீட்டில் நிகழும் என்ற அச்சுறுத்தல் ஏற்படும்போது வெளிப்படுத்துகிற மனிதாபிமானமும் கூட்டு உணர்வையும் சமூகத்தின் ஒவ்வொரு முக்கியமான பிரச்சினையிலும் வெளிப்படுத்தினால் திராவிட அரசாங்கங்கள்கூட மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியாது. ஆளும் கட்சியின் கொட்டத்தைத் தேர்தலின்போது அடக்கிக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவது தனக்கே இப்படி ஒரு பீதியை உண்டாக்கும் என நடுத்தர வர்க்கம் நினைத்துப் பார்த்திருக்காது.  

                கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக அரசாங்கம் ஒவ்வொரு அம்சத்திலும் செயலிழந்து வருகிறது அல்லது எதிர்மறையாகச் செயல்பட்டு வருகிறது. காவல் துறையின் முக்கிய பொறுப்புக்கள் முதல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பொறுப்புக்கள்வரை ஒரு விலைக்கு விற்கப்படுகின்றன; அரசியல் கட்சிகளுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி உண்டு. அரசின் ஒவ்வொரு அங்கமும் ஊழலால் புளுத்துவிட்ட பிறகு அவை செய்யவேண்டிய கடமையை சரிவர செய்யும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? அதனால் துணைவேந்தர்கள் கல்வி கிடக்கிறது களுதை என்று தொலைநிலைக் கல்வி மூலம் கல்லா கட்டுகிறார்கள். போலீஸ்காரர்கள் சட்டம், ஒழுங்கு கிடக்கிறது களுதை என்று தங்கள் வசூலில் குறியாக இருக்கிறார்கள். அவர்கள் வசூலைப் பார்ப்பார்களா, குற்றங்கள் அதிகமாகி வருவதைத் தடுக்கப் பார்ப்பார்களா? இப்படி பிரச்சினைகள் ஏற்படுகிற சமயங்களில் மட்டும் சுறுசுறுப்பாக இருப்பது போல் நடித்துக்கொண்டு, தங்களைப் பற்றி ஊடகங்களில் நல்லவிதமாக செய்தி வருவதை உறுதி செய்துவிட்டால் போதுமானது. தங்கள் வேலையையும் காப்பாற்றிக் கொள்ளலாம், ஏதோ நடவடிக்கை எடுத்தோம் என்றும் காட்டிக்கொள்ளலாம். நுகர்வுக் கலாச்சாரத்தின் தாக்கத்தால் உழைக்காமல், குறுக்கு வழியில் பணக்காரர்களாக நினைக்கும் நபர்களுக்கு இதுதான் சரியான வாய்ப்பு. எளிதான இலக்குகளான குழந்தைகளைக் கடத்துவதும் சுலபம், பெற்றோரின் உணர்வுகளைப் பயன்படுத்தி பணத்தை பெறுவதும் சுலபம் என அவர்கள் கணக்குப் போடுகிறார்கள். இந்த இரண்டொரு சம்பவங்கள் போலீஸில் புகாராகி, சம்பவம் ஊடகங்களில் அடிபட்டதால் நமக்கெல்லாம் அதைப் பற்றி தெரிகிறது. இந்த மட்டத்திற்கு வராமல் இந்தக் கடத்தல் பிசினஸ் எத்தனையோ குறுக்குப் புத்திக்காரர்களுக்கு பணமீட்ட உதவியிருக்கும். அந்த தைரியம்தான் மேலும் மேலும் புதிய சட்ட விரோத சக்திகள் பணக்கார வீட்டுக் குழந்தைகளைக் குறி வைத்து களமிறங்க அடிப்படை ஊக்கத்தைக் கொடுக்கின்றன.


                காவல் துறை தூங்கிக்கொண்டிருக்கிறது என்றால், நீதித்துறை அதன் மந்தத்தனத்திற்காகப் பிரசித்தி பெற்றது. நடுத்தர வர்க்கம் தனது எண்ணிக்கை மூலமும் கூட்டு சேரும் விழிப்புணர்வு மூலமும் தனது பிரச்சினைகளை வெளிப்படுத்தி அரசுக்கு நெருக்கடி உண்டாக்க முடியும். மேல்தட்டு வர்க்கம் பணத்தை வைத்தும் அரசியலுடனான நெருக்கம் மூலமாகவும் தன்னைப் பிரச்சினைகளிலிருந்து மீட்டுக்கொள்ள முயற்சிக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளும் இல்லாத அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகள்தான் காவல் துறையின் செயலின்மையாலும் நீதித் துறையின் மந்தத்தனத்தாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றன. ஹேக் கன்வென்ஷன் ஆன் சைல்ட் அப்டெக்ஷன் என்ற சர்வதேச குழந்தை கடத்தலுக்கு எதிரான ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெடுத்திட நிர்ப்பந்திப்பது தற்போதை கடத்தல்களுடன் நேரடியாகத் தொடர்புடையது இல்லையென்றாலும் அவசியமான ஒன்று. ஊடகங்களைப் போலவே மக்களின் ஞாபகமும் பலவீனமானது என்ற எண்ணம்தான் அரசாங்கத்தின் அலட்சியத்தின் ரகசியம். கோவையில் இரண்டு குழந்தைகளின் மரணத்தால் எழுந்த உணர்ச்சி வேகம், நடுத்தர வர்க்கத்தின் மனதில் ஒரு பாடமாகப் பதிய வேண்டியது அவசியம்.

ஏ.கே.செட்டியார்- முதல் தமிழ்ப் பயணி

தமிழில் ஏன் பயண இலக்கியம் இல்லை என்று நீண்ட காலமாக யோசித்து வருகிறேன்.  பயணம் செய்பவர்களுக்கு எழுதத் தெரியவில்லை.  எழுதத் தெரிந்தவர்களுக்கு பயணம் செய்வதற்கான பொருள் வசதி இல்லை. எனக்குப் பிடித்தமான தமிழ் எழுத்தாளர் ஒருவர் அமெரிக்கா சென்றார்.  மூன்று மாதம் தங்கினார் என்றதும் ஆர்வத்துடன் அவரது அனுபவங்களைக் கேட்கத் தயாரானேன்.  ஆனால் அவர் சொன்னது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. எழுத்தாளர் ஒரு நண்பர் வீட்டில் தங்குவார். அந்த நண்பரும் அவர் மனைவியும் திங்கட் கிழமையிலிருந்து வெள்ளி வரை அலுவலகம் சென்று விடுவார்கள்.  அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப நள்ளிரவு ஆகிவிடும்.  எழுத்தாளருக்கு அந்த ஒரு வாரமும் வீட்டுச் சிறை. அதிகபட்சம், அந்த வீதியில் நடக்கலாம். நமக்கு வரைபடத்தை வைத்துக்கொண்டு ஒரு இடத்தைக் கண்டு பிடித்துப் பழக்கமில்லை. யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டு செல்வதே நமக்குத் தெரிந்த வழி.  நியூயார்க் போன்ற ஒரு நகரத்தில் அது முடியுமா அல்லது ஒரு டாக்ஸி பிடித்து வெளியில் சென்று ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் அல்லது ரயிலிலோ பஸ்ஸிலோ இன்னொரு ஊருக்குப் போய் வரலாம். ஆனால் அதற்கெல்லாம் கை நிறைய காசு வேண்டும். நம்மூர் பணத்தில் லட்ச ரூபாய் எடுத்துக் கொண்டு போனாலும் டாலராக மாற்றினால் சில தினங்களே வரும். ஒரு தமிழ் எழுத்தாளனால் வேறு என்ன செய்யமுடியும்?  மூன்று மாதங்கள் வீட்டுச் சிறையில் இருந்த அனுபவத்தை எப்படி அவர் பயணக் கட்டுரையாக எழுதுவார்?
வேறு சில நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் போகாத தேசமே இருக்காது.  ஆனால் எந்த தேசத்தைப் பற்றியும் எதுவும் தெரியாது. காரணம், விமானப் பயணம்; தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல். இப்படிச் செய்தால் எப்படி ஒரு தேசத்தை அறிந்து கொள்ள முடியும்? 
சமீபத்தில் Thor Heyerdahl (1914-2002) எழுதிய Kon-Tiki என்ற பயண நூலைப் படிக்க நேர்ந்தது. நார்வே நாட்டைச் சேர்ந்த இவர் சில காலம் உலகின் மிகப் பெரிய சமுத்திரமான பசிஃபிக் பெருங்கடலில் உள்ள பாலினேஷிய தீவுகளில் (ஆயி ரத்துக்கும் மேற்பட்ட தீவுகள்) ஒன்றான தஹித்தியில் இருந்திருக்கிறார். அப்போது அந்த மக்களின் கலாச்சாரத்தை மானுடவியல் ரீதியாக ஆராய்ந்தார்.  அந்த ஆராய்ச்சியில், அமெரிக்காவை கொலம்பஸ் கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே தென்னமெரிக்க ஆதிகுடிகள் பசிஃபிக் பெருங்கடலைத் தாண்டி வந்திருக்கிறார்கள் என்றும், தஹித்தி போன்ற பாலினேஷிய தீவுகளில் வாழும் மக்கள் பெரூவிலிருந்து வந்து குடியேறியவர்களே என்றும் கண்டுபிடித்து இருக்கிறார். அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை. உடனே பெரூவிலிருந்து தஹித்திக்கு வந்த காலகட்டத்தில் அவர்கள் எப்படி வந்திருப்பார்கள் என்பதை உலகுக்கு நிகழ்த்திக் காட்ட விரும்பினார் தோர் ஹயர்தால்.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தஹிதிக்கு வந்த பெரூவிய மாலுமிகள் கட்டியது போலவே ஒரு சிறிய கட்டுமரத்தைக் கட்டினார்.  ஒன்பது பெரிய மரக்கட்டைகள். கட்டையின் நீளம் 45 அடி; அகலம் 2 அடி. ஆக, 45 அடி நீளமும், 18 அடி அகலமும் கொண்ட அந்தக் கட்டுமரத்தை ஒரு ஆணிகூடப் பயன்படுத்தாமல் கயிற்றாலேயே கட்டினார்.  தளத்தில் மூங்கில் கம்புகளைக் கட்டி அதில் பாயை விரித்தார். கட்டுமரத்தின் மத்தியில் மூங்கிலாலேயே ஒரு சிறிய அறை ஒன்றை அமைத்து வாழை இலைகளால் கூரை செய்து கொண்டார். அறையின் அகலம் 8 அடி; உயரம் 14 அடி. அந்தக் கட்டுமரத்துக்கு ‘கோன்-டிகி’ என்று பெயரிட்டு பெரூவிலிருந்து தஹித்திக்கு தன்னுடன் ஐந்து சகாக்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.  திமிங்கலங்களால் ‘கோன்-டிகி’ உருத் தெரியாமல் போய்விடும் என்றும் இன்னும் பலவாறாகவும் அவரை ஏளனம் செய்தார்கள் பலர்.  ஆனால் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் பயணத்தைத் தொடங்கினார் தோர் ஹயர்தால்.

மொத்தம் 102 நாட்கள். 102-ஆவது நாளில் ஒரு புயலால் கட்டுமரம் சேதமடைகிறது; ஆனால் அதிர்ஷ்டவசமாக அது ஒரு ஆளில்லாத தீவின் கடற்கரை.  அந்தத் தீவில் அவர்கள் சமைப்பதற்காகத் தீ மூட்டிய போது அங்கே மீன் பிடிக்க வந்தவர்கள் அவர்களைக் கண்டுபிடித்து தஹித்திக்கு அழைத்துச் சென்றனர்.  உடனடியாக அவர்களது பயணம் உலக அளவில் கவனிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஹயர்தாலைக் கௌரவித்தார்.  இது நடந்தது 1947-ஆம் ஆண்டு.  அத்தனை அனுபவங்களையும் ஹயர்தால் தன்னுடைய கோன்-டிகி என்ற நூலில் எழுதியிருக்கிறார். கோன்-டிகி என்று தன்னுடைய பயணத்தை சினிமாவாகவும் எடுத்திருக்கிறார். இந்த நூலைப் பற்றியும் தோர் ஹயர்தாலைப் பற்றியும் எனக்கு ஏ.கே. செட்டியாரின் ‘ஐரோப்பா வழியாக’ என்ற நூலைப் படித்த போது தெரிய வந்தது.
ஆனால் தோர் ஹயர்தாலை விட எனக்கு ஏ.கே. செட்டியார் சிறந்த பயணியாகத் தெரிகிறார்.  ஏனென்றால், உலகெங்கும் இனவாதம் மிகக் கடுமையாக நடை முறையில் இருந்த காலகட்டத்தில் பயணம் செய்திருக்கிறார் செட்டியார்.  அவர் செல்லாத நாடே இல்லையோ என்று நினைக்கும் அளவுக்கு உலக நாடுகள் பலவற்றுக்கும் கப்பலிலும், ரயிலிலும், பஸ்ஸிலும், காரிலுமாகச் சென்றிருக்கிறார். அந்த அனுபவங்களை 18 புத்தகங்களில் விரிவாக எழுதியிருக்கிறார். எங்குமே அவர் விமானத்தில் செல்லவில்லை. கடல் தாண்டிச் செல்வதாக இருந்தால் கப்பல்; நிலவழி என்றால் ரயில். இப்போதைய விமானப் பயணத்தில் அடுத்த மனிதர்களோடு உறவாட முடியவில்லை.  ஆனால் கப்பல் பயணத்தில் ஒரே இடத்தில் பல தினங்கள் ஒன்றாக இருக்க வேண்டியிருப்பதால் பல தேசங்களைச் சேர்ந்த பலதரப்பட்ட மனிதர்களோடும் உறவாட முடிகிறது. 1930லிருந்து 1955 வரை 25 ஆண்டுகள் கப்பலிலேயே உலகம் முழுவதும் சுற்றியிருக்கும் ஒருவருக்கு எத்தகைய அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்பதற்கு சான்றாகத் திகழ்கின்றன ஏ.கே. செட்டியாரின் பயண நூல்கள்.  
சென்னையிலிருந்து நேபாளம் வரை ரயிலில் சென்ற அனுபவத்தை ஒரு புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.  கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன் ரயில் பயணம் எப்படி இருந்திருக்கும்? பல இடங்களில் இரண்டு மூன்று தினங்கள் கூட ரயில் நிலையத்தில் அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கிறார். சமயங்களில் சரக்குப் பெட்டியில் சரக்குகளோடு சரக்காகக் கிடந்து பயணம் செய்திருக்கிறார்.  இவ்வளவையும் அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும்.  ஆனால் தமிழில் எழுதி விட்டதால் அவருடைய 18 பயண நூல்களும் 70 ஆண்டுகளாக மறு பதிப்பு இல்லாமல் கிடக்கின்றன.  தமிழர்களின் சுரணையுணர்வை என்னவென்று சொல்வது?

இந்தப் புத்தகங்களைப் படிக்கும்போது ஏதோ ஒரு தங்கப் புதையலைப் பார்ப்பது போல் இருக்கிறது. இந்த நூல்களில் காணக் கிடைக்கும் தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு பத்துப் பேர் உலகப் பயணம் மேற்கொண்டால் பல நூறு அற்புதங்களைக் கண்டு பதிவு செய்யமுடியும்.  மிக முக்கியமாக, உலகிலுள்ள பல்வேறு தேசங்களின் ஊர்களும் வெவ்வேறுபட்ட மக்களும் 60/70 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தனர்; அவர்கள் வாழ்ந்த ஊர் எப்படி இருந்தது என்பதையெல்லாம் இந்த நூல்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.  செட்டியார் ஒரு தேர்ந்த புகைப்பட நிபுணராகவும் இருந்ததால் எல்லாவற்றையும் புகைப்படமாகவும் எடுத்து தன் புத்தகங்களில் இணைத்திருக்கிறார். 
செட்டியாரின் ஐரோப்பியப் பயண நூலில் ஒரு இடம்: 1953-ஆம் ஆண்டு.  இங்கிலாந்தின் New Castle on Tyne என்ற துறைமுக நகரத்திலிருந்து நார்வேயில் உள்ள பெர்கன் என்ற துறைமுகத்துக்கு கப்பல் ஏறுகிறார் செட்டியார். (டைன் நதிக்கரையில் இருப்பதால் முன்பு அப்படி அழைக்கப்பட்ட அந்த நகரம் இப்போது வெறும் நியூகேஸில்). பெர்கனை அடைய கப்பலில் 22 மணி நேரப் பயணம்.  ஐரோப்பா முழுவதுமே சுங்க அதிகாரிகள் அவருடைய பெட்டியைத் திறந்து பார்க்கவில்லை என்று எழுதும் செட்டியார், இந்திய சுங்க அதிகாரிகளிடமும், இந்தியத் தூதராலய அதிகாரிகளிடமும் தான் மாட்டிக் கொண்ட கதைகளைக் கண்ணீர் விட்டு எழுதியிருக்கிறார். அந்த நிலை இன்னும் மோசமாகி இருக்கிறது என்பதே என்னுடைய சொந்த அனுபவம்.
பெர்கன் துறைமுகத்தில் ஜான் ஹோயம், அவர் மனைவி எல்ஸி இருவரும் செட்டியாரைச் சந்தித்துத் தம் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர்.  இந்த ஜானும் எல்ஸியும் யார்?  1937-ஆம் ஆண்டு - அதாவது, 16 ஆண்டுகளுக்கு முன்பு - செட்டியார் அமெரிக்கா சென்றிருந்தபோது நான்கு மாணவர்களோடு சேர்ந்து 15,000 மைல்கள் (கிலோ மீட்டர் அல்ல) அமெரிக்கா முழுவதும் காரில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். அப்போது அவருடன் வந்த நான்கு மாணவர்களில் ஒருவர்தான் ஜான் ஹோயம். சுற்றுப்பயணம் செய்த காரும் ஜானுடையதுதான்.  அதற்குப் பிறகு 1939-ஆம் ஆண்டில் ஒருமுறை நார்வே வந்தபோதும் அவர் ஜானையும் எல்ஸியையும் சந்தித்திருக்கிறார். அந்தத் தம் பதியைத்தான் இப்போது 14 ஆண்டுகள் கழித்து பெர்கனில் மீண்டும் சந்திக்கிறார் செட்டியார்.  அன்று இரவு ஜானின் வீட்டில் 14 ஆண்டுக் கதையை இரவு முழுவதும் இருவரும் பேசுகிறார்கள்.  அப்போது ஜான் தங்களுடைய ஊரில் நாஜிகள் பல யூதர்களைக் குடும்பம் குடும்பமாக விஷவாயுக் கிடங்கில் உயிரோடு போட்டு எரித்தது பற்றிய கொடுங்கதைகளைச் சொல்கிறார்.  இப்போது அதெல்லாம் நமக்கு வரலாறு. ஆனால் செட்டியார் ஜானைச் சந்தித்த அந்த இரவில் அது அவர்களின் சமீபத்திய கொடுந்துயரம். 
பிறகு மறுநாள் காலை ரயில் பிடித்து அன்று மாலையே ஓஸ்லோ வந்து சேர்கிறார்.  பழைய நண்பர்களின் முகவரியைத் தொலைபேசி அட்டவணையைக் கொண்டு கண்டுபிடிக்கிறார். நண்பர்கள் என்றால் தமிழர்கள் இல்லை.  எல்லோரும் அவருடைய தேசாந்திரப் பயணத்தின்போது சினேகிதமான நார்வேக்காரர்கள்.
இப்போது தூரதேசங்களுக்குப் பயணம் செய்யும் எழுத்தாளர்கள் அந்தந்த ஊர்களில் வசிக்கும் தமிழர்களையே சந்தித்து விட்டு வந்து பயணக் கட்டுரை எழுதுகிறார்கள்.  அவர்களுக்குத் தெரிந்த தமிழ் நண்பர்கள்,  வாசகர்கள், தமிழ்ச் சங்கங்கள் என்பதைத் தவிர அந்த எழுத்தாளர்களின் கால்கள் எங்கேயும் நகர்வதில்லை.  தமிழ்ச் சங்கத்தைப் பார்ப்பதற்கா 14,000 கி.மீ. தாண்டி நியூயார்க் வரை செல்லவேண்டும்? இங்கேயே மும்பை அல்லது தில்லியில் இருக்கும் தமிழ்ச் சங்கத்துக்குச் செல்லலாமே? கடல் கடந்து சென்று அங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் மாட்டியிருக்கும் திருவள்ளுவர் படத்தைப் பார்த்துவிட்டு வருவது தமிழர்களுக்கே உள்ள பிரத்தியேக குணம் என்று நினைக்கிறேன்.  உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்கள் தாங்கள் வாழ்கின்ற நாட்டு மக்களோடும், அங்குள்ள கலாச்சாரத்தோடும் தங்களைத் தொடர்புபடுத்திக் கொண்டு வினையாற்றுவதில்லை.  எங்கே இருந்தாலும் தமிழ்த் தொலைக்காட்சி சேனல்கள், தமிழ் ஜனரஞ்சகப் பத்திரிகைகள், எந்திரன் சினிமா என்றே அவர்களின் வாழ்க்கை முடிந்து போகிறது.  இதற்குத் தமிழ் எழுத்தாளர்களும் விதிவிலக்காக இல்லாமல் நியூயார்க் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்று வந்ததையெல்லாம் பயணக் கட்டுரையாக எழுதுகிறார்கள். 
இந்தத் தமிழ்ச் சங்கக் கதையெல்லாம் ஏ.கே. செட்டியாரின் பயண நூல்களில் இல்லை. அவர் எழுதியிருக்கும் நூற்றுக்கணக்கான பயண அனுபவங்களில் அவர் ஒரே ஒரு இந்தியரைத்தான் சந்திக்கிறார். அவர் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ். 


ஒவ்வொரு நாட்டிலும் தங்கி, அந்த மக்களோடு உறவாடி, பேசிப் பழகி எழுதியதால் ஏ.கே. செட்டியாரின் பயண நூல்கள் விசேஷமான கவனத்துக்குரியவை ஆகின்றன. நார்வேஜியர்கள் அடிப்படையில் மிகவும் நல்லவர்கள்; அங்கே ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் மிகவும் குறைவு; பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்க்கம்; உழைப்பாளிகள்; உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் என்று கூறும் செட்டியார், அவர் சென்றிருந்த சமயத்தில் நார்வேஜிய மக்கள் இந்தியாவுக்குச்  செய்த ஒரு பெரிய உதவி பற்றியும் குறிப்பிடுகிறார்.  நார்வேஜிய மக்கள் தங்களுக்குள் பத்து லட்சம் ரூபாய் வசூலித்து மீன் பிடிக்கும் தொழிலில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களை இந்தியாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.  ஆழ்கடலில் மீன் பிடிப்பதில் மிகுந்த திறமை கொண்டவர்கள் நார் வேஜியர்கள். “32 லட்சம் ஜனத்தொகை உள்ள நார்வே 36 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவுக்கு எந்தப் பிரதி பலனும் கருதாமல் செய்த உதவிக்கு இந்தியா என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது” என்கிறார் செட்டியார்.
செட்டியார் கூறும் வேறு சில தகவல்களும் சுவாரசியம் மிகுந்தவை.  ஒன்றே கால் லட்சம் சதுரமைல் கொண்ட நார்வேயில் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 2 லட்சம். உலகிலேயே அதிகமாகப் புத்தகம் படிப்பவர்கள் நார்வேஜியர்கள்.  உலகின் அற்புதங்களில் ஒன்றான த்ரோந்தியம் (Trondheim) என்ற நார்வேஜிய நகரத்துக்குச் சென்றபோது நள்ளிரவில் சூரியனைப் பார்த்தது பற்றி எழுதுகிறார். குளிர் காலத்தில் மைனஸ் பத்து செல்ஷியஸ் கொண்ட அந்த ஊரில்தான் சர்வதேசப் புகழ்பெற்ற நடிகை லிவ் வுல்மன் வாழ்ந்தார். மற்றொரு நார்வே நகரமான போடோ பற்றி ஒரு விபரம்  சொல்கிறார் செட்டியார்.  அந்த நகரில் ஜூன் 2 முதல் ஜூலை 10 வரை நள்ளிரவில் சூரியனைப் பார்க்கலாம்.  அதே போல் டிசம்பர், ஜனவரியில் சூரியனை அறவே பார்க்க முடியாது. இவ் வளவையும் 1939-இல் நேரில் பார்த்து எழுதுகிறார் செட்டியார். 
உலகப் போர்களைப் பற்றியும், அதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் ஆய்வு செய்பவர்களுக்கு செட்டியாரின் நூல்கள் மிக முக்கியமான ஆவணமாக இருக்கும்.  ஐம்பதுகளின் ஐரோப்பா பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறார் செட்டியார். 1953-இல் ட்ரினிடாடிலிருந்து கப்பலில் புறப்படுகிறார்.  எட்டாவது நாள் இங்கிலாந்தின் ப்ளிமத் (Plymouth) என்ற துறைமுக நகருக்கு வந்து சேர்கிறார்.  அக்டோபர் மாதக் குளிர்.  எங்கே தங்குவது என்று புரியவில்லை.  அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அப்போது நிறப்பாகுபாடு கடுமையாக இருந்திருக்கிறது.  கறுப்பு நிறத்தவரான செட்டியாருக்கு எளிதில் தங்க இடம் கிடைப்பதில்லை.  ஒவ்வொரு முறை இங்கிலாந்து வரும் போதும் இதுதான் பெரிய பிரச்சினை என்று எழுதுகிறார்.  அப்படியானால் 1953-க்குள் எத்தனை முறை இங்கிலாந்து வந்திருப்பார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். ப்ளிமத்திலிருந்து ரயிலில் லண்டன் வந்து எங்கே தங்குவது என்ற கவலையுடன் சாலையைக் கடப்பதற்காக பிக்காடில்லி சதுக்கத்தில் நின்று கொண்டிருக்கும்போது இந்தியரைப் போல் தோற்றமளித்த ஒருவர் செட்டியாரிடம் வந்து பேசுகிறார்.  செட்டியாரின் கையில் வைத்திருந்த பையிலிருந்த கப்பலின் அடையாளச் சீட்டில் ட்ரினிடாடின் பெயர் இருக்கிறது.  அந்த இளைஞர் அது பற்றிக் கேட்கிறார்.  பிறகு அவர் செட்டியாரோடு சிநேகமாகிறார்.  காமரான் கார்டிஸ் என்ற அவர் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த செயிண்ட்வின் சென்ட் தீவைச் சேர்ந்தவர். அவர் பெற்றோர் இந்தியாவிலிருந்து வந்து அந்தத் தீவில் குடியேறியவர்கள்.
காமரான் அவரை நிறவேற்றுமை அதிகமில்லாத கில்போர்டு வீதியிலுள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் செல்கிறார். தான் கொஞ்சம் பழுப்பு நிறம் என்பதால் தப்பியதாகவும், நீக்ரோவாக இருந்தால் (அப்போது நீக்ரோ என்ற வார்த்தைதான் பழக்கத்தில் இருந்தது) தங்கும் அறை கிடைப்பது சாத்தியமே இல்லை என்றும் எழுதுகிறார் செட்டியார்.  தினம் ஒன்றுக்கு பதினான்கரை ஷில்லிங்கில் அங்கே ஒரு அறை கிடைக்கிறது. அறைக்குள் கனப்பு அடுப்பு இல்லை. ஒரே குளிர். குளிப்பதற்கும் வெந்நீர் இல்லை.  உடைந்த நாற்காலிகள்.  ஆடுகின்ற மேஜை.  எல்லாம் விக்டோரியா மகாராணி காலத்தில் வாங்கியவை போலும் என்று கிண்டலடிக்கிறார்.  மேலும் எழுதுகிறார்:
“கீழ் வீட்டில் சமையலறை. அங்கிருந்து தான் பலகாரம் மேல் வீட்டுக்கு வர வேண்டும். அதற்குக் கிணற்றில் தண்ணீர் இறைப்பது போல் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள்.  கீழ் வீட்டில் ஒரு பெரிய மரப்பலகையில் பலகாரத்தை வைத்து உரக்கக் கத்தினார்கள். மேல் வீட்டில் சாப்பிடும் இடத்திலுள்ள வேலைக்காரப் பெண் தண்ணீர் இறைப்பது போல் கயிற்றை இழுத்தாள்.  மேலே வந்த பலகாரங்களை எடுத்துப் பரிமாறினாள். எச்சில் தட்டுகளை அதே பலகையில் வைத்துக் கீழ் வீட்டுக்கு அனுப்பினாள்.
மேலே இருந்தபடியே யார் யாருக்கு என்னென்ன பலகாரம் வேண்டும் என்று கீழே இருந்தவர்களிடம் அப்பெண் உரக்கக் கத்தினாள்.  அதுவும் தவிர அவள் கொண்டு வந்த தட்டு, கத்தி, கரண்டி, முள்கரண்டி எல்லாவற்றிலும் எண்ணெய்ப் பசை இருந்தது.  சுவையற்ற உணவுக்குப் பேர் பெற்றது இங்கிலாந்து.”
இங்கிலாந்து பற்றிய இப்படி ஒரு சித்திரத்தை நாம் வேறு எங்காவது படித்திருக்க முடியுமா?  தாமஸ் ஹார்டியின் நாவல்கள் தவிர வேறு எதுவும் எனக்கு ஞாபகம் வரவில்லை. ஆனால் ஹார்டியின் இங்கிலாந்து, செட்டியார் சித்தரிக்கும் இங்கிலாந்துக்கு 50 ஆண்டுகள் முற்பட்டவை. 

செட்டியாரின் இங்கிலாந்து இரண்டாம் உலகப் போரின் விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரம் அது.  1953-இல்தான் இங்கிலாந்தில் உணவுப் பங்கீட்டு முறையை நீக்கியிருந்தார்கள். அதுவரை எல்லாம் ரேஷன்தான். ஆங்கிலேயர்கள் சாப்பிட்டபின் டிப்ஸ் கொடுக்கும் வழக்கமுடையவர்கள் என்பதால் செட்டியார் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கொடுத்ததும் அதை வாங்கிய பெண் மிகவும் அதிசயித்துப் போய் பலமுறை அவருக்கு நன்றி சொன்னதைப் பதிவு செய்கிறார். கில்போர்டு தெரு ஓட்டலில் செட்டியாருக்குப் பக்கத்து அறையைச் சேர்ந்த ஒரு ஆங்கிலேயர் அன்றைய இங்கிலாந்து வாழ்க்கையைப் பற்றிக் கூறிய ஒரு பதிவு இது:
“பஞ்சாப் மாகாணத்தில் பல ஆண்டுகள் உத்தியோகத்தில் சௌகரியமாக இருந்தேன். பங்களா, மூன்று வேலைக்காரர்கள்.  இப்போது லண்டனில் ரயில் இலாகாவில் வேலை செய்கிறேன். வாரம் ஐந்தரை பவுன் சம்பளம். அதைக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியவில்லை. தினந்தோறும் இரண்டு வேளைதான் சாப்பாடு. பகலில் சிறு ரொட்டியும் தேத்தண்ணீரும்தான் ஆகாரம். மாதத்துக்கு ஒருமுறைதான் படக்காட்சிக்கு செல்ல முடியும்.  நல்ல உடை வாங்குவதற்கு ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து வருகிறேன். ஆங்கிலேயர் தவறு செய்து விட்டனர். இந்தியாவை விட்டு வந்திருக்கக் கூடாது. இந்தியாவை விட்டு வந்ததால் என்னைப் போல் எத்தனையோ ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது.”
இதைப் படிக்கும்போது எனக்குத் தோன்றியது இதுதான்: அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இருந்த இங்கிலாந்து இன்று எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறது என்பதும், இந்தியா இந்த 60 ஆண்டுகளில் எந்த அளவுக்கு சமூக, அரசியல், பொருளாதார வாழ்வில் சீரழிந்து விட்டது என்பதும்தான்.
இதேபோல் ஒருமுறை செட்டியார் டென்மார்க்கிலிருந்து ரயிலில் ஜெர்மனி வழியாக ஹாலந்திலுள்ள ரோட்டர்டாம் நகருக்குச் செல்கிறார். எட்டு பேர் அமரக்கூடிய மிக வசதியான அந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியில் செட்டியாரின் சக பயணிகள் ஐந்து பேர். அதில் ஒரு டேனிஷ்கார இளம் பெண்ணும் இருக்கிறாள்.  கிராமத்தில் பிறந்து, உயர்நிலைப்பள்ளிவரை படித்தவள்.  அவளுக்குப் பல மொழிகள் தெரிந்திருக்கிறது. செட்டியாரிடம் சரளமான ஆங்கிலத்தில் அவள் தன் கதையைச் சொல்கிறாள். அவளுக்கு ஊர் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசை. உத்தியோகத்துக்குச் சென்றால் போதுமான வருமானம் கிடைக்காது.  அதனால் ஸ்விட்ஸர்லாந்தில் சூரிச் நகரில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் சமையல் வேலை செய்கிறாள். உணவும் தங்குமிடமும் இலவசம் என்பதால் சம்பளப் பணத்தை சேமித்து வைத்து இத்தாலி, ஃப்ரான்ஸ் முதலிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்கிறாள். 
இப்படி ஒரு வாழ்க்கை முறை இந்தியாவில் அந்த வேலையைச் செய்யும் ஒருவருக்கு - ஏன், அரசாங்க வேலையில் இருப்பவருக்குக் கூட - சாத்தியமாகுமா என்று யோசித்தேன்.
இப்படி சிறு சிறு உரையாடல்களின் வழியாக ஒரு தேசத்தைப் பற்றிய மனச் சித்திரத்தை உருவாக்குகிறார் செட்டியார். நான் ஜெர்மனி சென்றிருந்தபோது அந்த நாட்டை ஒரு ஆசாரமான அக்கிரகாரம் போல் இருக்கிறது என்றும், அந்தக் காற்றிலேயே ஒருவித இறுக்கம் தெரிகிறது என்றும், திரும்பி ஃப்ரான்ஸ் வந்ததும்தான் சுதந்திரமாக சுவாசிக்க முடிந்தது என்றும் எழுதினேன். புரட்சி என்றால் கூட அதற்கும் டிக்கெட் வாங்கிக் கொண்டுதான் அதில் கலந்து கொள்வார்கள் ஜெர்மன்காரர்கள் என்பது லெனினின் புகழ்பெற்ற ஒரு வாக்கியம். அந்த ரயில் பயணம் பற்றிய குறிப்புகளில் மற்றொன்று இது:
“ரயில் ஹாம்பர்க்கை அடைந்தது. எங்களுடன் இருந்த ஆடவர் இறங்கி விட்டார்.  ரயில் நிலையத்தில் தேர்த் திருவிழா மாதிரி ஏராளமான கூட்டம். பிரயாணிகள் நெருக்கியடித்துக் கொண்டு ஏறினர்.  மிகக் கனமான சாமான் பெட்டிகளைப் பின்னால் உள்ள சாமான் வண்டியில் போடாமல் எங்கள் பெட்டியிலேயே வைக்க முயன்றனர்.
அவ்வளவு பெரிய கூட்டத்தைக் கண்டதும் பெண்கள் மிகவும் பயந்தவர்களாய் “தயவுசெய்து எங்கள் இடத்துக்குப் பக்கத்தில் உட்காருங்கள். ஜெர்மானியர் வருகிறார்கள்” என்றனர்.
“ஏனம்மா, ஜெர்மானியர் உங்கள் அண்டை நாட்டார்தானே? ஏன் பயப்படுகிறீர்கள்?” என்றேன்.
“உங்களுக்குத் தெரியாது.  அவர்கள் மிகவும் மிருகத்தனமாய் நடந்து கொள்வார்கள். அவர்களைக் கண்டாலே பயமும் வெறுப்பும் உண்டாகிறது” என்றாள் ஒரு பெண்.

“அவள் கூறியதில் எந்தத் தவறும் இல்லை” என்று சொல்லும் செட்டியார், அதற்கடுத்து அந்தப் பெட்டியில் நடந்த சம்பவங்களை சுவையாக விவரிக்கிறார். பாஸ்போர்ட்டை சோதிக்க வந்த ஜெர்மன் அதிகாரிகள் 'தேங்க் யூ’ சொல்வதே ஏதோ சண்டைக்கு அறைகூவுவது போல் இருந்தது என்றும், ஜெர்மானியர்கள் ஏதோ எந்திரங்களைப் போல் இருந்தனர் என்றும் கூறும் செட்டியார்,  பிறகு தன் பெட்டியில் இருந்த ஜெர்மானியர்களை ‘ஹெயில் ஹிட்லர்’ என்று கூறி சிரிக்க வைத்ததாக எழுதுகிறார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய ஜெர்மானிய அனுபவமும் செட்டியாரின் அனுபவத்திலிருந்து சற்றும் மாறுபடாமல் இருந்தது.  மிக மோசமான நிறவெறி, நியோ நாஜிகளின் வன்முறை ஆகியவற்றை நான் ஜெர்மனியில் நேரடியாகப் பார்த்தேன். 
நாற்பதுகளில் செட்டியார் மேற்கொண்ட இலங்கைப் பயணம் அவருடைய உலகப் பயணங்களிலேயே பொக்கிஷமாகக் கருதப்பட வேண்டியதாகும். 70 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணமும், மற்ற தமிழ்ப் பகுதிகளும், தமிழ் வாழ்க்கையும் எப்படி இருந்தன என்பது பற்றி இன்றைய ஈழத் தமிழர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. அவர்களுக்கு செட்டியாரின் இலங்கைப் பயண நூல் மிக முக்கியமான ஆவணமாகப் பயன்படும்.  பின்னாளில் சிங்கள இனத்துக்கும் தமிழ் இனத்துக்கும் ஏற்பட்ட பகைமைக்கும் முரண்பாடுகளுக்குமான காரணங்களையும் செட்டியாரின் இந்த நூலில் நம்மால் கண்டுகொள்ள முடியும். 
படங்கள் உதவி :
ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

திங்கள், 8 நவம்பர், 2010

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் - 01

1. உறவு
*******
‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்
காட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் ‘ஊர்’ என்று அழைகப்படது.
அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் ‘நகரம்’ என்றழைக்கப்பட்டது.
தனி மனிதர்கள் ‘சமூக’மாகி விட்டார்கள்.
தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.
அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாக்க் கருதப்பட்டு தருமங்களாயின.
கணவன் - மனைவி உறவு, தாய்-தந்தை பிள்ளைகள் உறவு, தயாதிகள்- பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.
தந்தைவழித் தோன்றல்களெல்லாம் ‘பங்காளி’ களாவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் ‘தாயாதி’ களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.
வார்த்தைகளை கவனியுங்கள்.
தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளிய யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.
‘சகோதரன்’ என்ற வார்த்தையே ‘சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.
சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகிவிட்டன.
இந்த உறவுகளுக்குள்ளும், பொதுதவாகச் சமூகத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அஐயும் சட்டங்களாகி விடன.
இந்தச் சட்டங்களே நமது சமூகத்தின் கௌரவங்கள்: இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.
இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும் நம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.
ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?
இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.
“பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை என்பது இந்துமத்த்தத்துவம்
பிறப்பின் உறவுகளே பேதலிக்கின்றன.
பெற தந்தையைப் பிச்சைகு அலையவிடும் மகன் இருக்கின்றான்.
கட்டிய தாரத்தையும் பட்டின் போடும் கணவன் இருக்கின்றான்.
தாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக் கடக்கும் பிள்ளை இருக்கிறான்.
கூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.
சமூக மரபுகள் இவற்றை ஒழுக்க் கேடாக்க் கருதவில்லை.
முதலில் நமது சமூகங்களுக்கு, ‘இவையும் ஒழுக்க் கேடுகள்’ என்று போதித்தது இந்து மதம்.
கணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம். இச்சை தீர்ந்ததும், அவளைத் தள்ளில் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே தவிர, அங்கு நீக்கமுடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.
அந்த உறவு இரவுக்கு மட்டுமே!
அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். வேலையிலிருந்து விலகியதும், வேலை பார்த்த இடத்தை மறந்து விடுகிறோம். அந்தப் பிணைப்பு கூலிக்காகவே!
ஹோடலில் அறை எடுத்துக்கொண்டு தங்குவதுபோல் சில உறவுகள்,சொந்த வீட்டில் வாழ்வதுபோல் சில உறவுகள்.
ஆயிரம் வாசல் இதயம்! யாரோ வருகிறார்கள், யாரோ போகிறார்கள்!
வாழ்ந்தால் சிரிக்கிறாரகள். வறண்டால் ஒதுங்குகிறார்கள். செத்தப்பின் ஒப்புக்காக அழுகிறார்கள்.
இர்ண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, ஓர்ஆத்மா தாக்கப்படும்போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால், அந்த உறவே புனிதமான உறவு.
பிறப்பில் சொந்தமிருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி.
எங்கே பந்தம் ஏற்றத்தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ, அங்கேதான் உறவிருக்கிறது.
கண்ணீரைத் துடைக்கின்ற கைகள், காயத்துக்கும் கடுப் போடம் கைகள், வறுமையில் பங்கு கொள்ளும் உள்ளம, சோதனையில் கூடவே வரும் நட்பு - உறவு பூர்த்தியாகிவிடுகிறது.
“அற்ற களத்தி ன்றநீர்ப்பறவைபோல்
உற்றழித் தீர்வா ருறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியு மாம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவா ருறவு!” -ஔவையார்
இதற்குப் புராணத்திலிருந்து ஒரு பகுதியை உதாரணம் காட்டி விரிவுரை தருகிறார், திருமுருக கிருபானந்த வாரியார்.
அதை அவருடைய வாசகத்திலேயே தருகிறேன்.
‘இடர் வந்த காலத்தில்தான் சிநேகிதர, பந்துக்கள் முதலியவர்களுடைய அன்பைத் திட்டமாக அளந்தறியலாம். நமக்கு வரும் இடர்தான்,சிநேகிதரையும் உறவின் முறையினரையும் அளகும் அளவுகோல். ஆதலால் அக்கேட்டிலும் ஒரு பலன் உளது என்றார் பொய்யில் புலவர்.
கேட்டினும் உண்டோர் உறுதி; கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
இது சம்பந்தமாக, தரும்புத்திர்ர் வினவி, பீஷ்மர் கூறிய வியாக்கியானத்தை எடுத்துக் காட்டுவோம்.
காசிராஜனுடைய தேசத்தில் ஒரு வேடன், வடமுள்ள பாணத்தை எடுத்துக்கொண்டு, சேரியிலிருந்து புறப்படுட் மானைத்தேடிப்போனான். அங்கு ஒருபெரிய வனதில் மான்கள் அருகிலிருக்கக் கண்டு மாமிசத்தில் இச்சையுடைய அந்த வேடன்,ரு மானையடிக்கக் குறிவைத்துக் கூரிய பாணத்தை விடதாதன். தடுக்கமுடியாத அந்தப் பாணம் குறி தவறினதால், அக்கானகத்திலுள்ள ஒரு பெரிய தழைத்த மரத்தின்மீதுபாய்ந்தது. கொடுயி விடந்தடவய கணையினால் மிக்க வேகத்துடன் குத்தப்பட்ட அம்மரம், காய்களும் இலைகளும் உதிர்ந்து உலர்ந்து போயிற்று. வானளாவி வளர்ந்தோங்கிநயிருந்த அத்தருவானது அவ்வாறு உலர்ந்தபோது, அதன் பொந்துகளில் வெகுநாள்களாக வசித்திருந்த ஒரு கிளி, அம்மரத்தின் மேல்லுள்ள பற்றினால் தன்னிருப்பிடதை விடவில்லை. நன்றியறிவுளதும் தருமத்தில் மனமுள்ளதுமாகிய அந்தக் கிளி வெளியிற் சஞ்சரியாமலும், இரையெடாமலும், களைப்புற்றும் குரல் தழுதழுத்தும், மரத்துடன் கூடவே உளர்ந்தது. மரஞ்செழிப்புற்றிருந்து போது அதனிடஞ் சுகித்திருந்தது போல், அது உலர்ந்து துன்றபுறும்போது அதனை விட்டுப் பிரியாமல், தானுந்துன்புற்றிருந்தது. அந்தக் கிளியின் உயர்ந்த குணத்தை நன்கு நோக்குங்கள்.
சிறந்த குணமுள்ளதும், மேலான சுபாவமுள்ளதும் மனிதர்க்கு மேற்பட்ட நல்லொழுகமுடையதுமான அக்கிளி, அமர்ரத்தைப் போலவே சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்ட தேவேந்திரன் திகைப்படைந்தான். ‘திரிய் ஜாதிகளுக்கு இல்லாத கருணையை இந்தப பட்சி அடைந்திருப்பது எவ்வகை?’ என்று நினைத்தான்: பிறகு, ‘இதில் ஆச்சர்யப்படவேண்டியதில்லை. எல்லாப் பிராணிகளிலும் குணம், குற்றம் எல்லாம் காணப்படுகின்றன. என்று எண்ணமும் இந்திரனுக்கு உண்டாயிற்று.
இங்ஙனமெண்ணிய இந்திரன், மானிட உருவெடுத்து ஓர் அந்தணன் வடிவமாகப்பூமியில் இறங்கி அந்தப் பட்சியைப் பார்த்து, ‘ஓ பட்ணசிகளிற் சிறந்த கிளியே; உன்தாயாகிய தாக்ஷேயி உன்னால் நல்ல சந்ததியுள்ள வளாக ஆகிறாள். கிளியாகிய உன்னை நான் கேட்கிறேன் உலர்ந்து போன இந்த மரத்தை ஏன் விடாமலிருக்கிறாய்?” என்று கேட்டான்.
இமையவர் தலைவனாம் இந்திரானால் இவ்வாறு கேட்கப்பட்ட கிளியானது அவனுக்குத்தலைவணங்கி நமாகாரம் புரிந்து, “தேவராஜாவே, உனக்கு நல்வரவு. நான் தவத்தினால் உன்னைத் தெரிந்துகொண்டேன். என்று சொல்லிற்று. தேவேந்திரன் “நன்று! நன்று!” என்று கூறி, ‘என்ன அறவு’ என்று மனத்திற்குள் கொண்டாடினான்.
“அறிவிற் சிறந்த பறவையே! இலைகளும் காய்களும் இன்றி உலர்ந்து, பறவைகளுக்கு ஆதரவற இம்மரத்தை ஏன் காக்கிறாய்? இது பெரிய வனமாயிருக்கிறதே! இலைகளினால் மூடப்பட்ட பொந்துகளும் சஞ்சரிக்கப்ப போதுமான இடமுள்ள இன்னும் அழகான மரங்கள் அநேகம் இப்பெரிய வனத்திலிருக்கையில் முதிர்ச்சியடைந்து, சக்தியற்று, இரசம் வற்றி ஒளி குன்றிக் கெட்டுப்போன இந்நிலையற்ற மரத்தைப் புத்தியினால் ஆராய்ந்து பார்த்துவிட்டு விடு.”
அமரேசனுடைய இந்த வார்த்தையைக்கேட்டு தம்மவாத்மாவான அந்தக் கிளி, மிகவும் நீண்ட பெருமூச்செறிந்து துயரத்துடன் பின்வருமாறு சொல்லத் தொடங்கிற்று:
“மகாபதியே! இந்திராணியின் கணவனே! யாவராலும் வெல்ல முடியாத தேவர்களிருக்கும் பொன்னுலகத்தில் வசிக்கும் நீ, நான் கூறுவதைத் தெரிந்உகொள். அநேக நற்குணங்கள்பொருந்திய இம்மரத்தில் நான் பிறந்தேன். இளமைப் பருவத்தில்நன்றாகப் பாதுகாக்கப்பட்டேன். பகைவர்களாலும் பீடிக்கப்டாமலிருந்தேன். மழை,காற்றி, பனி,வெயில் முதலிய துன்பங்களால் வருந்தாது, இத்தருவில் சகித்திருந்தேன்.
வலாரியே! தயையும் பக்தியுமுள்ளவனாக வேறு இடம் செல்லாமலிருக்கும் என் விடயத்தில் அனுக்கிரகம் வைத்து என் பிறவியை ஏன் பயன்படாமற் செய்கின்றாய்? நான், அன்பும் பக்தியுமுள்ளவன். பாவத்தைப் புரியேன். உப காரியங்கள் விடயத்தில் தயை செய்வதே நல்லோர்களுக்கு எப்போதும் மனத்திருப்தியை உண்டாக்குகிறது. எல்லாத் தேர்களும் தருமத்திலுள்ள சந்தேகங்களை உன்னிடத்திலேயே கேட்கின்றனர். அதனாலேயே,நீ தேவசிரேட்டர்ளுக்கு அதிபதியாப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறாய். இந்திரனே! வெகு காலமாக இருந் மரத்தை நான் விடும்படி நீ சொல்வது தகாது. நல்ல நிலைமையிலிருந்ததை அடுத்துப்பிழைத்தவன், கெட்ட நிலைமைக்கு வந்தவுடன், அதை எப்படி விடலாம்?”
எக்காலமு மிப்பாதப மெனதாமென வைகி
முக்காலே முதிருங்கனி முசியாது நுகர்ந்தேன்
இகாலமி தற்கிவ்வண மிடையோறு கலந்தாற்
சுக்காகல் வதுவோவுணர் வுடையோர்மதி தூய்மையே!
- மகாபாரதம்
இவ்வாறு கூறிய, பொருளடங்கியதும், அழுகுடையதுமாகிய கிளியினது வசனங்களால் மகிழ்உள்ள இந்திரன், அதன் நன்றியறிவையும் தயையையும் எண்ணித் திருப்தியுற்று, தரும்ம் தெரிந்த அக்கிளயைப் பார்த்து, மொரு வரம் கேள்!” என்றுசொன்னான்.
அன்பர்காள்! அகிளியானது தன் நன்மையைக் குறித்து வரம் கேட்கவில்லை. அதனுடைய பெருங்குணத்தை உற்று நோக்குங்கள்!
எப்போதும், பிறர் நோவாமையைப் பெரிதாக்க் கருதிய அந்தக் கிளி, “ஏ தேவர் கோமானே! இம்மரமானது நன்றாகச் செழித்துத் தலைத்து ஓங்க வேண்டும்!” என்றது.
அப்பறவையினுடைய உறுதியான பக்தியையும் நிரம்பின நல்லொழுக்கத்தையும் அறிந்து களிப்புற்று இந்திரன் உடனே அம்மரத்தின் மீது அமிர்தம் பொழிந்தான். அதனால் அத்தரு, கனிகளும், இலைகளும், கிளைகளும் உண்டாக்கித்தழைத்து.
கிளியினுடைய உறுதியான பக்தியால், அம்மரம் முன்னைக் காட்டிலும் மிகவும் நன்றாகச்செழித்தது.
நன்இயறிவு, தயை இந்தக்குணங்களின்பயனாகிய அச்செய்கையினால் கிளியும் அத்தருவில் இனிது மகிழ்ந்திருந்தது. தன் ஆயுள் முடிந்த பிறகு இந்திர லோகத்தையடைந்தது.

2. ஆசை
*******
வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?
ஆசையிலும் நம்பிக்கயிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது.
சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.
அன் துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்ய என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை.
ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான்.
ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது.
ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசன் ஆரம்பமாகிறது.
சுயதரிசன் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது
ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?
லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது.
என் ஆசை எப்படி வளர்ந்ததன்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.
சிறுவயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன்.
கொஞ்ச நாளில் கிடைத்தது.
மாதம் இருப்பத்தைய்து ரூபாய் சம்பளத்திலே ஒருபத்திரிகையில் வேலை கிடைத்தது.
ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.
“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.
அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரகையில் பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று.
அதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று.
அது ஆயிரமாக வளர்ந்தது.
ஈராயிரமாகப் பெருகிற்று.
யாவும் கிடைத்தன.
இப்பொழுது நோட்டடிக்கும் உருமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!
எந்க கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.
‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?
அதுதான் இறைவன் லீலை!
ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன.
குற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய்விட்டால் மனிதனுக்க அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன.
அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக்கண்டுபிடிக்க முடியாது.
ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கா, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.
ஆசையை மூன்றுவிதமாப் பிரிக்கிறது இந்து மதம்.
மண்ணாசை!
பொன்னாசை!
பெண்ணாசை!
மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.
பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.
பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.
இந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.
ஆகவேதான்,பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது.
பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!
“இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.
ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.
நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன்.
அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே.
மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கியிருக்கிறது.
சிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான்.
ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.
அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.
“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்
பற்றுக பற்று விடற்கு” - என்பது திருக்குறள்.
ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை.
அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?
அதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல்ய என்று போதித்தது இந்து மதம்.
நேரிய வழியில் ஆசைகள் வளரலாம்.
ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு.
ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது.
எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் த்த்துவம்.
எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?
லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன்மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே,ஏன்?
அது ஆசை போட்ட சாலை.
அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையிலிருக்கிறது.
போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்ந அப்போது அவனுக்கு தெய்வஞாபகம் வருகிறது.
அனுபவங்கள் இல்லாமல, அறிவின்மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மத்த்தத்துவம்.
‘பொறாமை, கோபம்’ எல்லேமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான்.
வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுதும் வேலையை, இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது.
இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.
அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.
வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது.
அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்து கொள்வதற்காக அல்ல.
உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூச்ச் சொல்லுகிறது.
உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்கும்ம்’ வைக்கச் சொல்கிறது.
‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது.
தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது.
யாராவது ஆடவன்தன்னை உறு நோகுகிறான் என்பதைக் கண்டால், இந்தப் பெண்கள் மார்பகத்து ஆடையை இழுத்து மீட்க்கொள்கிறார்களே, ஏன்?
ஏற்கனவே திருத்தமாக உள்ள ஆடையை மேலும் திருத்துகிறார்களே, ஏன்ழ
எந்தவொரு ‘கவர்ச்சி’யும் ஆடவனுடைய ஆசையைத் தூண்டிஇடக்கூடாது என்பதால்.
ஆம்; ஆடவன் மனது சலனங்களுக்கும், சபலங்களுக்கும் ஆட்பட்டது.
கோவிலிலே தெய்வ தரிசன்ம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது.
அதை மீட்க முடியாத பலவீன்னுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது.
“பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி.
கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம்.
அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது.
அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.
இன்றைய இளைஞனுக்கு ஷேக்பியரைத் தெரியும்; ஷெல்லியைத்தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப்போன பின்புதான் அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.
ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண மரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இநுத் மதம் என்பது வெறும் ‘சாமியார் மடம் ‘ என்ற எண்ணம் விலகிவிடும்.
நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள, உன் தாய் விடிவில் துணை வருவது இந்துமதம்.
ஆசைகளைப்பற்இ பரமஹம்சர் என்ன கூறுகிறார்?
“ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களிஙல் அமிழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்” என்கிறார்.
“அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடிகொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது.
அது போல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது”
“விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகி விடுகிறது”. என்றார்.
அடக்கியாள்வதன் பெயரே வைராக்யம்.
நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது.
உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது

3. துன்பம் ஒரு சோதனை
வெள்ளம் பெருகும் ந்திகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.
குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன.
நிலங்கள் வறண்ட பின்தான் பசுமை யடைகின்றன.
மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.
இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான்.
அதுவும் வளர்வதாகவும், அமிழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான்.
நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
முதற்கட்டம் வரவு என்றால், அடுத்தக் கட்டம் செலவு.
முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்தக்கட்டம் துன்பம்.
முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம் இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன.
“இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்”
என்றான் வள்ளுவன்.
எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை.
அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை.
பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத்தது.
இப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை. அடுக்கடுக்காகப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதார்ரானார் ஒருவர்.
ஆன மறுநாளோ, அவரை ‘அரிசி சாப்பிடக்கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்.
சீனாலவில் மாசே - துங் புரட்சி நடக்கும்போது பல ஆண்டுகள் காடுமேடுகளில் ஏறி இறங்கினார். மனைவியைத் தோளில் தூக்கிக்கொண்டு அலையக்கூட வல்லம பெற்றிருந்தார்.
புரட்சி முடிந்து, பதவிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் நோயில் படுத்தார்.
ரஷ்யாவில் லெனின் கதையும் அதுதான்.
புரட்சி நடக்கும்வரை லெனின் ஆரோக்கிய மாகவே இருந்தார்.
பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே படுக்கையில் விழுந்தார்; சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார்.
எனது தி.மு.க நண்பர்கள் ஒவ்வொருவரும் கடுமையான உழைப்பாளிகள். ரயிலிலும் கட்டை வண்டிகளிலும், கால்நடையாவும் சென்று கூட்டத்தில் பேசுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைச்சாலைக்குப் போவார்கள்.
அப்பொழுதெல்லாம் அவர்கள் உடல்நிலை நன்றாகவே இருந்தது.
அவரகள் பதவிக்கு வந்து நிம்மதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அவர்களில் பலருடைய ஆரோக்கியம் கெட்டு விட்டது.
எனது நண்பர் ஒருவர் படமெடுத்தார்.
முதற்படமே அபார வெற்றி. அளவுகடந்த லாபம்.
அடுத்த படத்திலிருந்து விழத் தொடங்கியது அடி. இன்னும் அவர் எழமுடியவில்லை.
இன்னொரு பட அதிபர்…
ஊமைப்படக் காலத்திலிருந்து தொழிலில் இருக்கிறார். ஆரம்பக் கட்டத்தில் பலபடங்கள் அவருக்குக் கை கொடுக்கவில்லை. மிகுந்த சிரம்ப்பட்டுச் சென்னைக்கு வந்து ஒருபடம் எடுத்தார்.
அவரது ‘வாழ்க்கை’யையே அந்தப் படம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்.
அந்தப் படம் அமோகமாக ஓடியது. ஒருபுது நடிகையை நட்சத்திர நடிகையாக்கிற்கு. அது தெலுங்கிலும் வெற்றி; இந்தியிலும் வெற்றி. அதுமுதல் அவர் தொட்டதல்லாம் வெற்றி.
பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இலாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்?
கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள்.
ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி!
ஏற்றம் என்பது இறைவன் வழங்கும்பரிசு.
இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.
நீ நினைப்பது எல்லாமே நடந்துவிட்டால், தெய்வத்தை நம்ப வேண்டாம்.
எப்போது நீ போடும் திட்டம் தோல்வியுறுகிறதோ அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறன் என்று பொருள்.
எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்து விட்டான் என்று பொருள்.
“ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நிறையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்
என்யாளும் ஈசன் செயல்”
என்பது முன்னோர் பழமொழி.
“கற்பகத்தைச்சேர்ந்தார்க்குக்
காஞ்சிரங்ககாய் ஈந்தேன்
முற்பவத்தில்செய்தவினை”
இதுவும் அவர்கள் சொன்னதே.
உனது வாழ்க்கை பூஜ்ஜியத்திஏ ஆரம்பமாகிறது. அதற்கு முன்பக்கம் நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு; பின் பக்கம் விழுந்தால் அவனது சோதனை.
மேடும் பள்ளமுமாக ஆழ்க்கை மாறி மாறி வந்தால் உனக்குப் பெரிய வீழ்ச்சியில்லை.
ஒரேயடியாக உச்சிக்கு நீ போய்விட்டால் அடுத்துப் பயங்கரமான சரிவு காத்திருக்கிறது.
என் வாழ்க்கை மேடும் பள்ளமுமாகவே போவதால்,என் எழுத்து வண்டி இருப்பத்தைந்தாண்டுக் காலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதைத்தான் ‘சகடயோகம்’ என்பார்கள். வீழ்ச்சியில் கலக்கமோ எழுச்சியில் மயகமோ என்றார்கள் நம் முன்னோர்கள்.
‘ஆண்டவனின் அவதாரங்களே ஆண்டவன் சோதனைக்குத் தப்பவில்லை’ என்று நமது இதிகாசங்கள் கூறுகின்றன.
தெய்வ புருஷன் ஸ்ரீராமனுக்கே பொய் மான் எது, உண்மை மான் எது என்று தெரியவில்லையே!
அதனால் வந்த வனைதானே, சீதை சிறையெடுகப்பட்டதும், ராமனுக்குத் தொடர்ச்சியாக வந்த துன்பங்களும்!
சத்திய தெய்வம் தருமனுக்கே சூதாடக்கூடாது என்ற புத்தி உதயமாகவிலையே!
அதன் விளைவுதானே பாண்டவர் வனவாசமும் பாரத யுத்தமும்!
முக்காலும் உணர்ந்த கௌதமனுகே,பொய்க்கோழி எது, உண்மைக் கோழி எது என்றுதெரியவில்லையே!
அதனால்தானே அகலிகை கெடுக்கப்பட்டதும், சாபம் பெற்றதும்.
ஆம், இறைவனின் சோதனை எவனையும் விடாது என்பதற்கு, இந்தக கதைகளை நமது இந்துமத ஞானிகள் எழுதி வைத்தார்கள்.
துன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின் சோதனைள் என்றும், அவற்றுக்காக்க் கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும் முட்டாள்தனமென்றும் உன்னை உணர வைத்து, துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே அவர்கள் இதை எழுதி வைத்தார்க்க்.
இந்தக் கதைகளை ‘முட்டாள்தனமானவை’ என்று சொல்லும் அறிவாளிகள் உண்டு.
ஆனால்,முட்டாள்தனமான இந்தக் கதைகளின் தத்துவங்கள், அந்த அறிவாளிகளின் வாழ்க்கையையும் விட்டதிலை.
நான் சொல்ல வருவது, ‘இந்து மத்த்தின் சாரமே உனது லௌகீக வாழ்க்கையை நிம்மதியாக்கித் தருவது என்பதையே.
துன்பத்தைச்சோதனை என்று ஏற்றுக்கொண்டு விட்டால், உனக்கேன் வேதனை வரப்போகிறது?
அந்தச் சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும் படி நீ இறைவனை வேண்டிக்கொள்; காலம் கடந்தாவது அது நடந்துவிடும்.
தர்ம்ம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள்முட்டாள்களல்ல.
கஷ்டத்திலும் நேர்மையாக இரு.
நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே.
உன்வாழ் நாளிலேயே அதன் பலனைக்காண்பாய்.
தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது.

4. பாவமாம், புண்ணியமாம்!

இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவிலை.
இப்போது ஒருவருடைய பெயரை குறிப்பிட விரும்புகிறேன்.
பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய்.
சிறு வயதிலிருந்தே அவர்தெய்வ நம்பிகை யுள்ளவர்.
சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர்.
மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்ஐ கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது.
அப்போதும் அவர் நாணயத்தை நேர்மையையும் விட்டதில்லை.
குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலைபார்த்தார்.
அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும்.
அந்த நேரத்தில் ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் அவருகு ஆறு ரூபாய் வரை கடனாகிவிட்டது.
கடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கினான்; அந்தக் கடையிருகும் பக்கமே போக முடியாதபடி அவதிப்பட்டார்.
அடிக்கடி கோவைக்குப் பத்து மைலுக்கு அப்பாலிருக்கும் மருதமலைக்குப் போய் ‘முருகா!, முருகா!’ என்று அழுவார்.
அந்தக் கோவிலோ ஜன நடமாட்டமில்லாத கோவில்.
கடைக்காரன் கோபித்துக் கொண்ட அன்று இரவு. அந்த மருதமலைக் கோவிஇல் போய் உட்கார்ந்து கொண்டு அழுதார்: “முருகா! காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டார்.
நள்ளிரவில், காடுகள் நிறைந்த அந்த மலையைவிட்டு இறங்கினார்.
வழியில் ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்தது.
அதைக் காலால் உதைத்துக்கொண்டே நகர்ந்தார்.
கொஞ்சதூரம் வந்ததும் என்ன தோன்றிற்றோ?
அந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தார்
உள்ளே இர்ணுட சிகரட்டுகளும்,பத்து ரூபாய் நோட்டும் இருந்தன.
அப்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?
“நலவனாக வாழ்ந்தோம்ந தெய்வத்தைநம்பினோம்; தெய்வம் கைவிடவில்லை” என்று தனே எண்ணியிருக்கும்!
அந்த முருகன் அவரை வாழ வைத்தான்.
ஒவ்வொருநாளும், “முருகா! முருகா! ” என்று உருகுகிறார்.
“தனக்கு நஷ்டம் வந்தாலும் பிறருக்கும் நஷ்டம் வரக்கூடாது” என்று தொழில் புரிகிறார்.
அதனால், அவர் நாளுக்குநாள் செழித்தோங்குகிறார்.
நீயும் நல்லவனாக இரு.
தெய்வத்தை நம்பு.
உனக்கு வருகிற துன்பமெல்லாம்,பனிபோலப் பறந்து ஓடாவிட்டால், நீ இந்து மத்த்தையே நம்ப வேண்டாம்.
“பாவமாம், புண்ணியமாம்; எந்த மடையன் சொன்னான்?”
“சொர்க்கமாம், நரகமாம்! எங்கே இருக்கின்றன அவை?”
“பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே? பார்த்துக்கொள்வோம் பின்னாலே?”
இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும்பொன் மொழிகள்.
பாவம்- புண்ணியம், சொர்க்கம் - நரகம் என்ற வார்த்தைகளைக் கேட்கின்ற இளைஞனுக்கு , அவை கேலியாகத் தெரிகின்றன.
‘நரம்பு தளர்ந்துபோன கிழவர்கள், மரண பயத்தில் உளறிய வார்த்தைகள் அவை. என்று அவன் நினைக்கிறான்.
நல்லதையே செய்தால் சொர்க்கத்துக்குப் போவாய் என்றும், அங்கே வகைவகையாக விருந்துகள் உனக்கு காத்திருக்குமென்றும், தீங்கு செய்தால் நரகத்துக்குச் செல்வாயென்றும், அங்கே உன்னை எண்ணெய்க் கொப்பரையில் போட்டு வறுத்தெடுப்பார்களென்றும் சொல்லப்படும் கைகள் நாகரிக இளைஞனுக்கு நகைச்சுவையாகத் தோன்றுவதில் வியப்பில்லை.
ஆனால் இந்தக் கதைகள், அவனை பயமுறுத்தி, அவன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்காகவே தோன்றிய கதைகள்.
அவனுடைய பற்றாக்குறை அறிவைப் பயமுறுத்தித்தான் திருத்த வேண்டும் என்று நம்பிய நம் மூதாதையர் அந்தக கதைகளைச் சொல்லி வைத்தார்கள். இந்தக கதைகள் நூற்றுக்கு ஐம்பது பேரையாவது திருத்தியும் இருக்கின்றன. என்பதை அறிந்தால், நம் மூதாதையர் நம்பியுரைத்த கற்பனைகள் கூட , எவ்வளவு பலனை அளிக்கின்றன என்பதை அவன் அறிவான்.
பாவம் புண்ணியம் பற்றிய கதைகளை விடு; பரலோகத்துக்க உன் ஆவி போகிறதோ இல்லையோ, இதை நீ நம்ப வேண்டாம்.
ஆனால், நீ செய்யும் நன்மை தீமைகள், அதே அளவில் அதே நிலையில், உன் ஆயுட்காலத்திலேயே உன்னிடம் திரும்பிவிடுகின்றன.
அந்த அளவு கூடுவதுமில்லை, குறைவதுமில்லை.
ஒருவனை எந்த வார்த்தை சொல்லி நீ திட்டுகிறாயோ, அதே வார்த்தையில், எப்போதாவது ஒருமுறை நீ திட்டப்படுகிறாய்.
“எப்படித் தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள்” என்று கிறிஸ்தவ வேதம் கூறுகிறது.”செய்த வினை, அதே வடிவத்தில் திரும்ப வரும்” எறு முதன்முதலில்போதித்தது இந்து மதம்தான்.
“பாவம் என்பது நீ செய்யும்தீமை.”
“புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை”.
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்”.
“விநாச காலே விபரீத புத்தி.”
-இவையெல்லாம் இந்துக்களின் பழமொழிகள்.
ஊரைக்கொள்ளையடித்து, உலையிலே போட்டு, அதை உயில் எழுதி வைத்துவிட்டு மாண்டவன் எவனாவது உண்டா?
பிறர் சொத்தைக் திருடிக்கொண்டு, அதை நிம்மதியாக அனுபவித்து, அமைதியாகச்செத்தவன் எவனாவது உண்டா?
அப்படி ஒருவன் இருந்தாலும், அவன் எழுதி வைத்த உயிலின்படி அவன் சொத்துக்கள் போய்ச் சேர்ந்ததுண்டா?
எனக்குத் தெரிந்தவரை அப்படிப்பட்ட சொத்துக்களை நீதி மன்றத்தால் நியமிகப்படும் ‘ரிஸீவர்’கள்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். இறந்தவனுடைய சந்ததி சாப்பிட்டதில்லை.
கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகி, தண்டனையில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து, வலி இல்லாமல் செத்தவன் எவனாவது உண்டா?
எனக்குத் தெரிந்தவரை இல்லை.
ஒருவன் செய்த எந்த பாவமும் அவன் தலையைச்சுற்றி ஆயுட்காலத்திலேயே அவனைத் தண்டித்து விட்டுத்தான் விலகியிருக்கிறது.
“பாவத்தின் சம்பளம் மரணம்” என்கிறது கிறிஸ்துவ வேதம்.இல்லை, பாவத்தின் சம்பளம் வயதான காலத்தில் திரும்பரும் சிறு சேமிப்பு நிதி; சரியான நேரத்தில் அவனுக்குக் கிடைக்கும் போனஸ்!
சாவுக்குப் பின் நடப்பது இரண்டாவது விசாரணை!
முதல் தீர்ப்பு அவன் ஆயுட்காலத்திலேயே அளிக்கப்பட்டுநிறைவேற்றப்பட்டு விடுகிறது.
எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. 1953 - ஆம் ஆண்டு தால்மியாபுரம் போராட்டத்தில், பதினெட்டு மாதம் கடுங்காவல் தண்டனை விதக்கப்பட்டு, நானுத்,நண்பர் அன்பில் தர்மலிங்கமும், மற்றும் இருபது பேரும் திருச்சி மத்திய ணசிறையில் இருந்தோம். அங்கே தூக்குத் தண்டனை பெற்ற கைதிகள் சிலரும் இருந்தார்கள்.
அர்களைத்தனித்தனியாகச்சில அறைகளில் பூட்டி வைத்திருந்தார்கள்.
அவர்களில, ‘மாயவரம் கொலை வழக்கு’ என்று பிரபலமான வழக்கில், தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏழு பேர்.
செஷன்ஸ் கோர்ட் அவர்களுக்குத்தூக்குத்தண்டனை விதித்தது.
அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் தரு.சோமசுந்தரம்.
பெரும்பாலான கொலை வழக்குகளில் அவர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டையாக மாற்றுவது வழக்கம்.
காரணம், பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் திரும்ப몮போகும் குற்றவாளி நல்லவனாகத்திரும்பி வந்து அமைதியான வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கையே!
அவர் சட்டத்தோடு தர்மத்தையும் கலந்தே யோசிப்பார்.
செஷன்ஸ் கோர்ட்டின் தூக்குத்தண்டனை யொன்றை அவர் ஊர்ஜிதம் செய்கிறார் என்றால், அதை ஆண்டவனே ஜர்ஜிதம் செய்த்தாக அர்த்தம.
மாயவரம் கொலை வழக்கில் ஏழு கைதிகளின் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.
அவரத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டும், அதை ஊர்ஜிதம் செய்ததது.
ஜனாதிபதிக்கு கருணை மனு போயிற்று. அவரும் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.
காரணம் நடந்த நிகழ்ச்சி அவ்வளவு பயங்கரமானது.
மாயவரத்தில் நாற்பது வயதான ஒரு அம்மையார் விதவை. அந்த வயதிலும் அழகாக இருப்பார்.
சுமார் அறுபதனாயிரம் ரூபாய் பெறக்கூடிய நகைகளை அவர் வைத்திருந்தார்.
சொந்த வீட்டில் ஒரு வேலைக்காரப் பெண்ணை மட்டுமே துணையாக்க் கொண்டு வாழ்ந்திருந்தார்.
அவரை மோப்பமிட்ட சிலர், ஒருநாள் இரவு அவர் வீட்டுக்குள் புகுந்தார்கள்.
ஐந்து பேர் அவரைக் கற்பழித்தார்கள். அந்த அம்மையார் மூச்சுத்தின்றி இறந்துபோனார்.
இறந்து பிறகும் இன்னொருவன் கற்பழித்தான்.
ஆம். மருத்துவரின் சர்டிபிகேட் அப்படித்தான் கூறிற்று.
நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொலைகார்ர்கள் ஓடிவிட்டார்கள்.
பிடிபட்டவர்கள் ஏழு பேர்.
சிறைச்சாலையில் அந்த ஏழுபேரில் ஆறுபேர் “நாளை தூக்குக்குப் போகப்போகிறோமே!” என்று துடித்துக்கொண்டிருந்தார்கள். “முருகா முருகா” என்று ஜபித்துக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், ஒருவன் மட்டும் சலனமில்லாமல் அமைதியா இருந்தான்.
சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை மற்ற கைதிகள் அணுகிப் பேச முடியாது.
நானும் நண்பர் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, அவர்களை அணுகினோம்.
சலனமே இல்லாமலிருந்தானே அந்த மனிதன், அவனிடம் மட்டுமே பேச்சுக் கொடுத்தோம்.
உடம்பிலே உணிகூட இல்லாமல் சிறைச்சாலை விதிகளின்படி நிறுத்தப்பட்டிருந்த அந்த மனிதன், அமைதியாகவே பேசினான்.
நாளை சாகப்போகிறோம் என்ற கவலை அவனுக்கில்லை. அவன் சொன்னான்:
“ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கெனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாத்துமாதிர ‘அலிபி’ தயார் செய்துவிட்டு, அந்தக் கொலையைச் செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன்தன் என்னை இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்டியங்களோடு என்னைக் கைதுசெய்துவிட்டார்கள். காரணம் கொலை சொய்தவர்களிலே மூன்றுபேர் என் சொந்க் கார்ர்கள். சாட்சியம் சரியாக இருந்ததால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கெனவே செய்த கொலைகளுக்காகவே சாகப் போகிறேன்.”
அவன் சொல்லி முடித்தபோது, ‘அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்ய என்று பழமொழியே என்நினைவுக்கு வந்தது.
அப்போது மாலை ஐந்து மணி இருக்கும். அறைக்கதவு மூடப்படும் நேரம். நானும் தர்முவும் எங்களுடைய அறைக்குத் திரும்பினோம்.
தர்மு தன்னையும் மறந்து சொன்னார்:
“என்னதான் சொல்லையா, செய்யற பாவம் என்றைக்கும் விடாதய்யா!”
ஆமாம்,பாம் கொடுத்த, ‘போனஸ்யதான் செய்யாத கொலைக்குத் தண்டனை.
அன்று இரவு நான் தூங்கவே இல்லை.
காலை ஐந்து மணிக்கு “முருகா! முருகா!” என்று பலத்த சத்தம்.
அப்போது நான் உணரவில்லை. இப்போது உணருகிறேன்.
“என்ன விலை கொடுக்கிறாயோ, அதே விலை திரும்ப வரும்”.

5. மறுபடியும் பாவம் - புண்ணியம்

“இந்து மத்த்தைப்பற்றி எழுத வந்து எங்கெங்கோ நடந்த சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறாயே, ஏன்?” என்று நீ கேட்பது எனக்குப் புரிகிறது.
இந்து மத்த்தைப்பற்றி ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், காஞ்சி ஆசாரிய சுவாமிகளும், விரிவுரை நிகழ்த்தும் வாரியாரும், பிறரும் சொல்லாத விஈயங்கள் எதையும் நான் புதியதாகச் சொல்லப் போவதில்லை.
ஆனால் அர்கள் சொன்னபடியேதான் உன் வாழ்க்கை நட்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது என் கடமை.
“ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி இருக்கிறது” என்பது அவர்கள் வாதம்.
அப்படி விவாதித்தபோது கண்ணெதிரே நடந்த சாட்சியங்களை அவர்கள் காட்டவில்லை. த்துவார்த்த விளக்கமே கூறினார்கள்.
அந்தத் த்த்துவார்த்தம் என்னைப் போன்றவர்களுக்கு
அந்தத் த்த்துவப்படி நடந்த சம்பவர்களை நான் எழுதுவது உன்னைப் போன்றவர்களுக்கு,
பாவம்,புண்ணியம் என்பதையெல்லாம், வெறும் த்த்துவமாகவே கேட்டுக் கொண்டிருந்த மனிதனுக்கு சில நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டினால் விளங்கும் என்பதற்காகவே இதை நான் எழுதுகிறேன்.
வாழ்க்கை ஒழுக்கத்தை, சமுதாய ஒழுக்கத்தை அதிகமாக வற்புறத்துவது இந்து மதம்தான்.
அதன் பாண்பாடுகள் உன்னதமானவை. அதன் சடங்குள் அர்தமுள்ளவை.மங்கல வழக்கு, அமங்கல வழக்கு எனப் பிறந்தது இந்துக்களிடம்தான்.
சில சின்னங்களை மங்கலமாகவும், சிலவற்றை அமங்கலமாகவும் அவர்க்க் காட்டினார்கள்.
மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும் வீட்டில், அமங்கல வார்தைகூடக்கேட்க்க்கூடாது என்றார்கள்.
பெண்ணுக்கு மங்கலம் என்றது தாலி.
திருமணத்தில் கட்டப்படும் அந்தத் தாலியை யார் அபகரித்தாலும், அந்தத் தாலி அவர்கள் குடும்பத்தையே அழித்துவிடும் என்பது, இந்துகள் நம்பிக்கை.
எனக்கொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
பதினான்கு ஆண்டுகளுக்குமுன்னால் நான்படம் எடுக்கத் தொடங்கியபோது, எனது பாட்டுத் திறமையை மட்டுமே வைத்து, ஒரு படமெடுக விரும்பினேன்.
நன்கு பாடக்கூடிய ஒரு நடிகரை அதற்கு ஏற்பாடு செய்தேன்.
ஒரு காலத்தில் ஓகோ என்று விளங்கிய அந்த நடிகர் நான் ஒப்பந்தம் செய்தபோது வறுமையிலிருந்தார்.
அவருடைய மனைவியின் கழுத்தில் தங்க மாங்கல்யம் இல்லை.
அரக்கு மஞ்சளை மஞ்சள் நூலில் கோர்த்து அணிந்திருந்தார்.
தாலி ஓரிடத்தில் அடகு வைக்கப்பட்டிருப்பதாக நடிகர் கூறினார்.
உடனே நான், அதற்கு வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு அவரையும் கூட்டிக்கொண்டு, அடகு பிடித்தவர் வீட்டிற்குப் போனேன்.
நடிகருடைய எல்லா நகைகளுமே அவரிடம்தான் அடகு வைக்கப்பட்டிருந்தன.
தாலிக்கு வேண்டிய பணத்தை மட்டும் கொடுத்துத் தாலியைத் திருப்பிக் கேட்டேன்.
அவர் பணத்தையும் வாங்கிக்கொண்டு, ஏராளமான வட்டி பாக்கியிருக்கிறது; இதை வட்டிக்கு வரவு வைத்துக்கொள்கிறேன்; தாலியைத் தரமுடியாதும என்று சொல்லிவிட்டார்.
பணம் கொடுத்தும் அந்தத் தாலி கிடைக்கவில்லை.
பிறகு நான் மேலும் கொஞ்சம் பணம் கொடுத்து, அவர்புதிய தாலியையே வாங்கி தன் மனைவியின் கழுத்தில் கட்டினார்.
என் படம் நடந்து கொண்டிருந்தபோதே, அந்த நடிகர் ‘இன்சால்வென்ட்’ ஆனார்.
ஆனால் மூன்றாவது மாதமே படம் வெளிவந்ததும் பத்துப் படங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுப் பணமும் வந்தது. ‘இன்சால்வென்சி’யும் ரத்தாயிற்று. அவருடைய சொத்துக்கள் அவருக்கே திரும்பி வந்தன. இன்று அவர் சுகமாக நாடகங்களிலும் படங்களலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவருடைய மனைவி உத்தமி.
புராண காலத்துச் சீதை, வரலாற்றுக் காலத்துக் கண்ணகிக்கு நிகரான சத்தியவதி.
அந்தச் சத்தியவதியின் தாலியை வைத்திருந்தாரே அவரது குடும்பம் பட்ட பாடும், அதில் ஏற்பட்ட குழப்பும், அவர் நோயில் இழுத்துக்கிடந்து மாண்டதும் விவரிக்கமுடியாத பெருங்கதை.
அந்தத் ‘தாலி’ அவரது குடும்பத்தின் நிம்மதியையே அழித்துவிட்டது.
இந்துக்களின் மங்கல சூத்திரம் தன் சக்தியைக் காட்டி விட்டது.
பாவத்தின் விலை, அவரது வாழ்நாளிலேயே கிடைத்துவிட்டது.
நிற்க,
‘அன்னையும் பிதாவும் முதல்தெய்வம்’ என்பது இந்துக்கள் சம்பிரதாயம்.
‘தாயைப் பணிந்தவன் கோவிலுக்குப் போக வேண்டாம்’ என்பார்கள்.
தாய்-தந்தையைச் சுற்றி வநுத கணபதிக்குத்தான் சிவபெருமான் மாம்பழத்தை அளித்தார்; உலகத்தைச் சுற்றி வந்த முருகனுக்கு அல்ல.
தாய் தந்தையருக்குத் தொண்டு செய்து கொண்டிருந்த ஒருபக்தன், மாறுவேடத்தில் வந்த இறைவனைக் கவனிகவில்லை என்உம், இறைவன் ஆத்திரமுற்றபோது ‘தன் முதற்கடமை இதுதான்’ என்று அவன் உறுதியாக்க் கூறினான் என்றும், இறைவனே மனமயங்கி, அவன் பாத்த்தில் விழுந்தான் என்றும் நாம் படிக்கிறோம்.
அந்தத் தாய் தந்தையரை மனமார நேசிக்கும் எவனுகும் எதிர்காலம் உண்டு.
நான் கண்ணெதிரிலேயே பாரகிறேன். பலரை.
ஆனால் தாயின் குரலைக் கேளாத ஒருவருடைய கதையை உனக்குச் சொல்ல வேண்டும்.
அவர் என்னுடைய சமூகத்தைச்சேர்ந்தவர்; ஏழைக் குடும்பத்திலே பிறந்தவர்.
அரது விதவைத் தாய் தன் வயிற்றைக் கட்டி வைத்து மகனுக்குச்சோறூட்டுவாள்.
எங்கள் பக்கத்தில் பிள்ளைகள் இல்லாத பணக்கார்ர்கள் ‘சுவிகாரம்’ எடுகும் பழக்கம் பரவலாக உண்டு.
அந்தச் சுவிகாரத்தில் பிள்ளையைப் பெற்ற தாய்க்கு விலையாக ஒரு தொகையையும் தருவார்கள்.
அந்தத் தொகைக்காகவும், தன் பிள்ளையாவது நல்ல இடத்தில் வாழட்டுமே என்றும் சுவிகாரம் விட்டு விட்டாள், அந்தத் தாயார்.
ஏழை மகன் லட்சாதிபதியானான். பணக்காரப் பெண்ணைக் திருமணம் செய்துகொண்டான். வசதியான வாழ்க்கையில், பெற்ற ‘தாயையே’ மறந்துவிட்டான்.
அவனால் மறக்க முடிந்தது; தாயினால் அது முடியவில்லை.
ஒருநாள் நான் அந்த மனிதனைப் பார்க்கப் போனேன். காய்கிற வெயிலில், அந்த வீட்டின் வெளித் திண்ணையில், அந்த அம்மையார் உட்கார்ந்திருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும் “ஐயா, நீ யார்?” என்று கேட்டார்கள்.
“என்ன ஆச்சி? என்ன வேண்டும்?” என்று நான் கேட்டேன்.
உடனே அந்த மூதாட்டி, “தம்பி, உள்ளே இருப்பது ன்பிளைதான். சுவிகாரம் விட்டுவிட்டேன். அவைப்பாகுறதுகாக்க் காலையில் இருந்து திண்ணையிலேயே உட்கார்ந்திருக்கேன். ஒருத்தரும் விடமாட்டேங்கிறாங்க. நீயாவது எம் மங்கிட்ட கொஞ்சம் சொல்லேன்ம என்றார்கள்.
என் கண்கள் கலங்கிவிட்டன.
ஆசையாக ஒரு கூடையில் பணியாரமும் உளுந்து வடையும் கொண்டு வந்து, துணியல் அதை மூடி வைத்திருக்கிறார்கள், தன் மகனுக்குத் தன் கையாலேயே ஊட்டி விடுவதற்காக.
நான் ஏகமாக உள்ளே போய், அந்தப் பையனைப் பார்த்து, “உன்னைப் பெற்ற தாயார் வந்திருக்கிறார்கள். கொஞ்சம் உள்ளே கூப்பிட்டு உட்கார வையப்பா” என்றேன்.
அவர் கோபமக “அவுங்களுக்கு எப்பவும் இதே வேஐயாய்ப் போச்சு. வராதே வராதேன்னா எதுக்காக அழைத்து, “இந்தா ஆத்தா வந்திருக்காளாம், ஒரு இருநூறு ரூபாய் கொடுத்து, இனிமே ந்தப் பக்கம் வர வேண்டாம் என்று சொல்லும என்றார்.
“அதை நீயே கூப்பிட்டுச் சொல்லேன்” என்றேன் நான்.
அவர் மறுத்துவிட்டார், மனைவிக்கு பயந்து.
கணக்குப்பிள்ளை அந்தப் பணத்தைக் கொண்டு போய்க் கொடுத்ததும் அந்த அம்மையார்,
“அப்பச்சி! தம்பி! ஐயா! ஒருதரமாவது பார்த்துட்டுப் போயிடுறேன்!” என்று சத்தம் போட்டார்கள்.
அந்தக் குரல் அந்தப் பாவியின் காதில் விழவில்லை. விளைவு என்ன தெரியுமா?
தாயின் குரலைக் கேட்காத அந்தக் காதுகள், வேறு எந்தக்குரலையும் கேட்க முடியாதபடி, ‘டமாரச்’ செவிடாகிவிட்டன.
மனைவி மயக்கத்தில் மாதாவை மறந்தவன் கதி யென்ன என்பதைப் புராணங்களைப் படித்து நீ நம்பவில்லையானால், உன் பக்கத்து வீடுகளில் கேட்டுக் பார். இப்படியொரு அங்கேயும் நடந்திருக்கும்.
தாய் - தகப்பனுக்குச்செய்யும் பாம் உன் தலையைச் சுற்றி அடிக்கும்.
ஆயிரம் மனைவிமார்களை விலைக்கு வாங்கலாம்; அன்னையும் பிதாவும் மறுபடி வரமுடியாது.
இந்துக்கள் சொன்ன த்த்துவம் வேடிக்கைக் கதையல்ல.
‘யாருகு நீ பாவம் செய்தாலம் அதற்குத் தண்டனை உண்டு’ என்பது அழிக்க முடியாத உண்மை.
இத்தகைய நிகழ்ச்சிகளை நான் விவரித்துக் கொண்டே போகலாம்.
எவ்வளவோ பாவிகள் தங்கள் வாழ்நாளிலே தண்டிக்கப்ட்டதை நான் பார்த்திருக்கிறேன்..
‘பாவத்தின் அளவு எவ்வளவோ அவ்வளவே தண்டனை’ என்து, எவ்வளவு உண்மை!
இறைவன் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை இந்துக்கள் சொன்னதுபோல் வேறு யார் சொன்னார்கள்?
இறைவா, இந்து சமூகம் உன்னையும் உன் ராஜாங்கத்தையும் சரியாக அளந்து வைத்திருப்பதை எண்ணி எண்ணி நான் வியக்கிறேன்.
சொந்த நிகழ்ச்சிகளில் இந்த அனுபவத்தைக் காணாதரை, ஞானமார்க்க உபதேசிகளை நான் கேலி செய்த்துண்டு.
ஒவ்வொரு படிக்கட்டிலும், ஒவ்வொரு உண்மையைக் காணக் கான, நமது ஞானிகள் ‘அறிவுலகத்தின் சுதரளிகள்’ என்றுதான் நான் நம்புகிறேன்.
இசையின் சுவையைப் பாடல் அதிகப்படுத்துவது போல், தத்துவத்தின் உண்மையைச் சம்பவங்களே உறுதி செய்கின்றன.
‘இந்து மகாசமுத்திரம்’ என்ற பெயர். இந்து மதத்துதக்கே பொருந்தும்.
‘பாவமும் குற்றமும் செய்துவிட்டுத் தெய்வத்தை வணங்கினால் பலன் உண்டா?’

6.புண்ணியம் திரும்ப வரும்
“வந்த வினையும் வருகின்ற வல்வினையும்,
கந்தனென்று சொல்லக் கலங்கும்”
ஆனால், செய்த வினையும் செய்கின்ற் தீவினையும், ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டா.
நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்தபின்னால்தான் அந்த நிலத்தில் வேறுபயிர்களைப் பயிரிட முடியும்.
கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு, “குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோயிலுக்குக் கூட வரமாட்டான்.
இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு.
என்னிடம் படம் வாங்கிய ஒருவர், படத்துக்காக வசூலான கணக்குக்காட்டாமல், பொய்க் கணக்கு எழுதி, நான் அவருக்கு முப்பதினாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோர்ட்டிலே வழக்குத் தொடர்ந்தார்.
வேறு வழியில்லாமல் வயிற்றெரிச்சலோடு நானும் கொடுக்க வேண்டி வந்தது.
அவர் ஏற்கெனவே ஒரு பணக்காச செட்டியாரையும் ஆச்சாள்புரத்துக்கார்ர் ஒருவரையும் ஏமாற்றியவர்.
அவரது மூலதனமே ஏமாற்றுவதுதான்.
ஏமாற்றி என்ன பயன்?
அத்தனை பணமும் போய், நகை நட்டுகளும் போய், அன்றாடச் சோற்றுக்கே இன்று அலை மோதுகிறார்.
அவரை அடிக்கடி வடபழனி கோவிலில் காணலாம்.
உடம்புக்குச் சட்டையில்லாமல் இடுப்புக்குத் துண்டு கட்டிக்கொண்டு, அந்தப் ‘பாபாத்மா’ தினமும் கோயிலுக்கு வருகிறது.
நெற்றியில் கட்டுக்கட்டடாக விபூதி; இரண்டு காதிலும் கதம்ப몮 பூக்கள்; கையில் தேங்காய் பழம் கொண்ட தட்டு.
அந்த மனிதர் தினந்தோறும் முருகனைத் தேடுகிறார்.
முருகனோ அவரைக் கண்டாலே ஓடுகிறான்.
ஒருவன் வந்த வழியைப் பார்த்துத்தான், கந்தன் வரப்போகும் வழியைத் திறந்து விடுகிறான்.
ராஜாங்கம் கட்டி ஆண்டவனுங்கூட, நேர்மை தவறி நடந்தால் நிம்மதி இல்லாமல் துடிக்கிறான்.
இறைவனில் தராசு வணிகனின் தராசு அல்ல; அது எடையைச் சரியாகவே போடுகிறது.
குளத்திலே ஒருரூபாயைத்தவறிப் போட்டுஇட்டால், குளம் வற்றியுத்ம அது உன் கைக்கே கிடைக்கிறத - அது நேர்மையாகச் சம்பாதித்த பணமாக இருந்தால்.
ஒரு நடைபாதையில் நீ கணாடித் துண்டைப்போட்டால், நீ திரும்பி வரும்போது, அது உன் காலிலேயே குத்துகிறது.
குளிக்கும் அறையில் நான் எசஞ்சிலைத் துப்பி விட்டேன்.
ஒரு மணி நேரம் கழித்து நான் உள்ளே போன போது, அது என் காலையே வழுக்கி விட்டது.
விதி என்பது இறைவன் விதித்தது மட்டுமல்ல; நீயே விதித்ததுமாகும்.
ஊரையெல்லாம் கேலி செய்த ஒரு பணக்கார்ர். ஊர் முழுவதும் கேலி செய்யும் நிலையில் வாழ்ந்து மடிந்ததை நான் அறிவேன். அவரும் பக்தர்தான்!
பக்தி செய்யும் எல்லாருக்கும் பரமனருள் கிடைப்பதில்லை.
அது பாவம் செய்யாதவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
‘உண்மையே தெய்வம்’ ‘ அனபே தெய்வம்’ என்று இந்து மதம் சொன்னது அதனால்தான்.
‘நம்பினோர் கெடுவதில்லை. நான்கு மறைத்தீர்ப்பு” உண்மைதான். ‘கெட்டவன்’ நம்பினால் அவனருள் கிட்டுவதில்லை.
அதுவும் உண்மைதான்.
காலங்களை நிர்ணயிக்கின்வனும், வாழ்க்கையின் கதியையே உருவாக்குகின்றவனுமான பரம்பொருள், உன் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக் கொளவில்லை, ஆத்மாவுக்கே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
மத்த்துறையை ‘ஆத்மார்த்தத்துறை என்பது அதனால்தான்.
ந்தியின் ஓட்டம் பள்ளத்தை நோக்கியே; அந்த நாயகனின் ஓட்டமும் எளிமையான நேர்மையை நோக்கியே.
ஒன்று, அறியாமல் செய்யும் தவறுகள் பாபங்கள் அல்ல; அவை வெறும் தவறுகளே!
அவற்றுக் உடனே மன்னிப்பு உண்டு.
அறிந்து செய்யும் தவற், தவறல்ல: அது குற்றம்.
அதற்கு மன்னிப்புக் கிடையாது!
ஆண்டவனின் அவதாரங்களேகூட, அறியாமல்தவறு செய்திருப்பதாக வழக்குக்கதைகள் உண்டு.
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி ஒருமுறை கங்கைக்குக் குளிக்கச்சென்றார்.
அவரது அம்பாறாத் தூணியில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது.
அந்த அம்பைப் படுக்கை வசமாக வைக்கக்கூடாதென்ற மரபுப்படி, அதைப் பூமியிலே குத்தி வைத்தார்.
‘ஒற்றை அம்பை ஊன்றி வை என்பது வழக்கு. அம்பை ஊன்றிய ராம்பிரான், கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறினார்.
ஊன்றிய அம்பை எடுத்தார்.
அதிலொரு தேரைக்குஞ்சு குத்தப்பட்டிருந்தது.
பூமிக்குள்ளிருந்த தேர்க்குஞ்சை அவர் அறியாமல் குத்திவிட்டார்.
தேரைக்குஞ்சு சாகும் தருவாயிலிருந்தது.
ராம்பினான் கபண்கள் கலங்கிவிட்டன்.
“ஐயோ, தேரையே! நான் குத்தும்போது நீ கத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே. ஏன் கத்தவிலை?” என்றார்.
அதற்குத் தேரை சொன்னது;
“பெருமானே! யாராவது எனக்குத்துண்பம் செய்யும்போதெல்லாம் நான் ‘ராமா ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?”
ராம்பிரான் கண்ணீரோடு சொன்னார்: “தேரையே, என்னை மன்னித்துவிடு. இதுநான் அறியாமல் செய்த பிழை.”
தேரை சொன்னது:
“பெருமானே! ‘அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ என்று சொன்னது உன் வாக்குத்தானே!”
தேரையின் ஆவி முடிந்தது. நான் பாவம் என்று குறிப்பிடும்போது, நீ அறியாமல் செய்த பிழைகளை எல்லாம் பாபக்கணக்கில் சேர்காதே.
சிறு வயதில் கடன் தொல்லை தாங்காமல் நான் ‘திருடியிருக்கிறேன்’ - என் தாயின் பணத்தைத்தான்.
திருடிவிட்டு நிம்மதியில்லாமல் இருந்திருக்கிறேன். கடவுளை வேண்டியிருக்கிறேன் - “இறைவா மன்னி” என்று.
அந்தத்தவற்றைக்கடவுள் மனிக்கவில்லை என்றால் இந்த வாழ்க்கையை எனக்கு அருளியிருப்பாரா?
என்னுடைய நண்பர்களில் என்னிடம் உதவி பெறாதவர் குறைவு.
உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.
உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.
என்னுடைய ஊழியர்களில் என்னை ஏமாற்றாதவர்கள் குறைவு.
ஏமாற்றியவர்களில் நன்றாக வாழ்கின்றவர்கள் குறைவு.
எழுத்தின்மூலமே சம்பாதித்தவர்களில் என்னைப்போல் சம்பாதித்தவர்கள் குறைவு.
சம்பாதித்ததை அள்ளி இறைத்ததில், என்னைப்போல் அள்ளி இறைத்தவர்கள் குறைவு.
இவ்வளவு அறியாமைக்கிடையிலேயும், ஏதோ ஒரு சுடரொளி என்னைக் காப்பாறுகிறது.
ஏன் காப்பாற்றுகிறது? எதனால் அது என்னைக் காப்பாற்றுகிறது?
‘தர்ம்ம் தலைகாக்கும்’ என்ற இந்துகளின் பழமொழி எனக்கு நினைவுக்கு வருகின்றது.
செய்த பாவம் தலையிலடிக்கிறது - செய்த புண்ணியம் தலையைக்காக்கிறது.
ஆம்: செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.
புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!
பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.
கஷ்ட காலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான் ஞாபகத்தில் வைதுக்கைம்மாறு செய்திருக்கிறேன்.
அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.
ஆகவே பாவம் செய்யாமல்,புண்ணியம் செய்து கொண்டே இறைவனைத்தியானித்தால் உன் வாழ்நாளிலேயே உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
நான த்த்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.
இந்துமத்த்தின் ஒவ்வொரு அணுவையும் நான் உணர்வதற்கு எதையும் நான் படிக்கவில்லை.
சாதாரணம் பழமொழிகளும் அனுபவத்தில் அவற்றின் எதிரொலிகளுமே, இந்துமத்த்தில் ஆழ்ந்த நம்பிக்கையை எனக்கு உண்டாக்கியிருக்கின்றன.


7. விதிப்படி பயணம்
உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே ‘விதி’ என்று கூறப்படுகிறது.
உனதுவாழ்க்கை எந்தச் சாலையில்போனாலும், அது இறைவன் விதித்ததே.
ஜன்னம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது.
பத்தவாது மாதம் ஜன்னம் என்பது நிரந்தரமானது.
ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது?
நீ கருப்பையில் இருக்கும்போது, நீ போகப்போகிற பாதைகளும், சாகப்போகிற இடமும், நேரமும், உன் மண்டை ஓட்டுக்குள் திணிக்கப்படுகின்றன.
நீ எங்கே போனாலும், எப்படி வாழ்ந்தாலும், அது இறைவன் வித்ததே.
மனத்தின் சிந்தனைப் போக்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம்; ஆனால் அது நடப்பதும் நடக்காத்தும் உன் விதிக்கோடுகளில் அடங்கி இருக்கிறது.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
என்றார் வள்ளுவர்.
ஊழ் என்பது பூர்வ ஜம்த்தயும் விதியையும் குறிக்கும்.
பூர்வ ஜன்மத்தின் எதிரொலியைக் கொண்டே அந்த ஜன்மத்தின் விதி நிர்ணயிக்கப்பெறுகிறது.
அதனை, ‘ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என்றான் இளங்கோ.
போன ஜன்மத்தின் எதிரொலியைக் கொண்டே அந்த ஜன்மத்தின் விதி நிர்ணயிக்கப்பெறுகிறது.
அதனை, ‘ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்றான் இளங்கோ.
போன ஜென்மத்தில் உன் வித பாவம் செய்யும்படி விதிக்கப்பட்டிருந்தால், அதற்கான பரிகாரம் இந்த ஜன்மத்தில் எழுதப்படுகிறது.
ஆகவே விதியின் கோடுகள்தாம் உன்னை ஆட்சி செய்கின்றன ன்பது, இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
நீ எண்ணியது நடந்தாலும் நடக்காவிட்டாலும், எண்ணாத்து நடந்தாலும், யாவும் உன் விதி ரேகைகளில் விளைவே.
முயற்சி கால் பங்கு; விதியின் ஒத்துழைப்பு முக்கால் பங்கு.
“எல்லாவற்றுக்கும் கால நேரம் வர வேண்டும்” என்கிறார்களே இந்துக்கள், அதற்கு என்ன காரணம்?
இன்ன காரியங்கள், உனக்கு உன்ன காலங்களிஙல் நடக்கும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது; அவ்வளவுதான்.
நினைவுகளின் மயக்கத்தை விதி ஒழுங்குபடுத்துகிறது.
இரண்டாவது உலக யுத்தத்தின்போது, ஹிட்லருகு இருந்த வசதியும் , ஆயுதப் பெருக்கமும் வேறு எந்த நாட்டிற்கும் இல்லை.
ஒரே நாளில் போலந்தைப் பிடித்தான்.
வெறும் மிரட்டலிலேயே செக்கோஸ்லாவாகியாவைப் பிடித்தான்.
குண்டு போடாமலேயே பிரான்ஸைப் பிடித்தான். அவன் விரும்பியிருந்தால் ஐரோப்பாவையும், ஆறு நாட்களில் பிடித்திருக்கலாம்.
எறும் வாய் வேட்டுக்களையே விட்டுக் கொண்டிருந்த சர்ச்சிலை, அவன் கனடாவுக்குத் துரத்தி யடித்திருக்கலாம்
(சர்ச்சில் தென் அமெரிக்காவுக்கு ஓடத் திட்ட மிட்டிருந்தார்.)
அகல ஐரோப்பாஐயும் பிடித்துவிட்டால், உலகத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குக்காலனியாக இருந்த ஆசிய - ஆப்பிரிக்க , அரேபிய நாடுகள் - சுமார் எண்பது- குண்டுகள் போதாமலேயே அவன்கைக்கு இயற்கையாகவே வந்திருக்கும்.
இது சுலபமாக நடந்திருக்கக் கூடியதே.
ஆனால், விதி ஹிட்லரின் ஆணவத்தை ஆட்சி புரிந்தது.
பிரட்டனைக் ‘கோழிகுஞ்சு’ என்று அவன் கேலி செய்துவிட்டு, ‘யானையைச் சாப்பிட்டால்தான் என் பசி அடங்கும் என்று சோவியத் யூனியனுக்குள் நுழைந்தான்.
‘அவனது சவக்குழி அங்கேதான் தோண்டப்படுகிறது’ என்று விதி சிரித்தது.
சோவியத் யூனியனின் பருவகாலத்தில் அவன் சிக்கிச் சிக்கி இழுபட அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களைத் தயார் செய்து கொண்டு விட்டன.
எச்சரிக்கையாக இருந்திராத்தால், உலகத்தையே ஆண்டிருக்கூடிய ஹிட்லர், தன் பிணத்தைக்கூடப் பிறர் பார்க்க முடியாதபடி இறந்துபோனான்.
எந்த மனிதனின் பாதையையும் திசை திருப்பி விடும் விதி. ஹிட்லரின் ஆணவதையும் அழிவை நோக்கித் திருப்பிவிட்டது.
உலக வரலாறுகளை கூர்ந்து நோக்குங்கள்.
நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவன் எவன்?
நினைப்பவன் தான் நீ. முடிப்பவன் அவன்.
இந்துக்களின் த்த்துவத்தில் இதுமுக்கியமானது.
நம்முடைய லகான் இறைவன் கையிலே உள்ளது என்பதை, இந்துமதம்தான் வலியுறுத்துகிறது.
பிச்சைக்காரி ராணியான கதையும், ராஜா பிச்சைக்காரனான கதையும் அதிர்ஷ்டம் என்ற பெயரிலோ, துரதிர்ஷ்டம் என்ற பெயரிலோ விதியின் பரிசளிப்பு.
“ஐயோ! எவ்வளவோ ஆசை வைத்திருந்தேனே, இப்படி ஆகிவிட்டதே” என்று நீ பிரலாபித்துப் பயனில்லை.
“அப்படித்தான் ஆகும்ம என்று நீ ஜனிக்கும்போது எழுதப்பட்டிருக்கிறது.
ராமனையும் விதி ஆண்டது. ரதியையும் விதி ஆண்டது.
சோழ நாட்டுக் கோவலனின் விதி. மாதவியின் மயக்கத்திலே இருந்தது.
கண்ணகியின் விதி மதுரையிலே இருந்தது.
பாண்டியன் நெடுஞ்செழியன் விதி, ஒரு காற்சிலம்பில் அடங்கியிருந்தது.
அலெக்சாண்டரின் விதி, பாபிலோனியாவில் முடிந்தது.
ஜூலியஸ் சீஸரின் விதி, சொந்த நண்பனின் கையிலே அடங்கியிருந்தது.
நெப்போலியனின் விதி, அவனது பேராசையிலே அடங்கியிருந்தது.
காந்திஜியின் விதி, கோட்ஸேயின் கைத்துப்பாக்கியில் அடங்கி இருந்தது.
அடிமைகள் கிளர்ந்து எழுந்ததும், ஆதிக்க வெறியர்கள் விழுந்து துடித்ததும், காலமறிந்து கடவுள் விதித்த விதி.
கடவுளே இல்லை என்று வாதிடுவோரும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று இறைவன் ஏன் விதிக்கிறான்?
தங்கள் கொள்கைகள், தங்கள் கண் முன்னாலேயே தோல்வி அடைவதைக் கண்டு சாக வேண்டும் என்றுதான்!
உண்மையான பக்தி உள்ள சிலருகுஆண்வன் ஏன் நீண்ட ஆயுளைத் தருகிறான்?
‘தாங்கள் பக்தி செலுத்தியது நியாயமேய என்று அவர்களும், அவர்களைப் பார்த்துப் பிறரும் உணர்வதற்காகத்தான்.
இறைவன் விதியை ஒருவேடிக்கைக் கருவியாக வைத்திருக்கிறான்.
சக்தியும் சிவனும் பூமியில் பூமியில் பல வேடங்களில் பிறந்ததாக இந்துக் கதைகள் கூறுவது, இனைவன், தானும்விதிக்கு ஆட்பட்டு, அதன் சுவையை அனுபவிக்கிறான் என்பதைக் காட்டுவதற்காகத்தான்.
அந்தக் கதைகளை வெறும்கைதகளாக நோக்காமல், இறைவின் த்ததுவங்களாக நோக்கினால், மானடத் த்தத்துவத்தை எப்படி இறைவன் வகுத்திருக்கிறான் என்பதை அறிய முடியும.
விதி-மதி ஆராய்ச்சியில் மதியையே விதிதான் ஆட்சி செய்கிறது என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
அதை ஒரு கதையாக மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதினேன்.
பிரவாகம்
-----------
ஞானி, பிகதீஸ்வர்ர், திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார்.
அவர் பெரிய மகான், உண்மையிலேயே ஞானி. சிறுவயதிலே துறவு பூண்டவர்.
கல்மண்டபத்தின் வடக்கில் அவருக்காக மேடை அலங்கரிக்கப்பட்டது. எதிரே ஆண்களும் பெண்களும் கணக்கிலடங்காது கூடியிருந்தனர்.
வேதங்கள் பற்றியும், புராணங்களைப் பற்றியும் விளக்கிக்கொண்டே வந்த ஞானியார், ‘யாரும் கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லப்படும்’ என்று தெரிவித்தார்.
யார் என்ன கேள்வி கேட்கப் போகிறார்கள் என்பதையே ஒவ்வொருவரும் ஆவலாக எதிர்ப்பார்த்தார்க்க்.
மண்டபத்தின் மேறகு மூலையிலிருந்து ஓர் உருவம் மெதுவாக எழுந்து நின்றது.
நடுத்தர வயது; தீட்சண்யமான கண்கள்; பந்த பாசங்களில் அடிபட்டுத்தேறி வந்துது போன்ற ஒரு தெளிவு.
சபையில் இருந்த எல்லோரும் அவரையே திரும்பிப் பார்த்தார்கள்.
“தாங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?” என்று ஞானியார் கேட்டார்.
அவர் சொன்னார்:
“சுவாமி!
விதியையும் மதியையும் பற்றி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சர்ச்சைகள் தோன்றி முடிவுகு வராமல் முடிந்திருக்கின்றன.
‘விதியை மதியால் வெல்ல்லாம் என்றும், மதியை விதி வென்றுவிடும்’ என்றும், இரண்டு கருத்துகள் இன்னும் இருந்துகொண்டிருக்கின்றன.
எது முடிவானதோ சாமிக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்”
கேள்வி பிறந்ததும், ஞானியார் லேசாகச்சிரித்தார்.
மண்டபத்தில் இருந்த எல்லோரையும் பார்த்து, “எல்லோரும் எழுந்து வெளியே செல்லுங்கள்; நான் கூப்பிட்ட பிறகு வாருங்கள்” என்றார்.
மண்டபம்காலியாயிற்று.
இரண்டு நிமிஷங்கள் கழித்து, எல்லோரும் வாருங்கள்” என்றழைத்தார்.
திபுதிபுவென்உற எல்லோரும் ஓடி வந்து அமர்ந்தார்க்க்.
ஞானியார் கேட்டார்.
“குழந்தைகளே, இந்த மண்டபத்தில் உட்பார்ந்திருந்தவர்கள் வெளியே போய் மீண்டும் உள்ளே வந்திருக்கிறீர்கள். உங்களி போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்க்க் எத்தனை பேர்?”
எல்லோரும் விழித்தார்க்க்.
நாலைந்து பேர் மட்டும்பழைய இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.
மற்ற எல்லோரும் இடம் மாறி இருந்தார்கள்.
கேள்வி கேட்டவரைப் பார்த்து, ஞானியார் சொன்னார்:
பாருங்கள், இந்தச சின்ன விஷயத்தில் கூட இவர்கள மதி வேலை செய்யவில்லை.
கொஞ்சம் நிதானமாக யோசித்தால், இவர்கள்மெதுவாக வந்து, அவரவர் இடங்களில் அமர்ந்திருப்பார்கள்!
இவர்கள் மதியை மூடிய மேகம் எது?”
கேள்வியாளர் கேட்டார்:
“இது அவர்கள் அறியாமையைக் குறிக்கும்: இதை விதி என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”
ஞானியார் சொன்னார்:
“அறியாமையே விதியின் கைப்பாவை.
அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்து விட்டால், விதியும் இல்லை. விதித்தவனும் இல்லை.”
கேள்வியாளர் கேட்டார்:
“மனிதனின் அறியாமையே விதி என்றால், விதிக்குத் மனி நியமங்கள் இல்லையா?”
ஞானியார் சொன்னார்:
“இருக்கின்றன!
இந்த உருவத்தில், இந்த இடத்தில் பிறக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.
உங்களைப் பிறக்க வைத்தது விதியின் பிரவாகம்.
இப்படித்தான் வாழ வேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள்; அப்படி வாழ விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
இந்தப் பெண்தான் எனக்குத்தேவை என்று முடிவு கட்டுகிறீர்கள்; அவளைக் கிடைக்க விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
எபோது நீங்கள் நினைத்தது நடகவில்லையோ அப்போது உங்கள் நினைவுக்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம்.
அதற்கும் நம் மூதாதையர் சூட்டிய பெயரே விது”
கேள்வியாளர் கேட்டார்:
“அந்த விதி எப்போது நிர்ணயிக்கப்படுகிறது; ஜன்னத்தில் தொடங்குகிறது.
தான் நினைத்தபடியெல்லாம் வாழ்க்கையை நடத்தி முடித்தவர்களை எத்தனைபேர்? வீரன் வெற்றி பெற்றால், அது வீரத்தால் வந்தது. கோழை தோல்வியுற்றால், அது கோழைத் தனத்தால் கிடைத்து.
ஆனால் வீரன் தோல்வியுற்றாலோ, கோழை வெற்றி பற்றாலோ, அவை விதியால் நிர்ணயிகப்பட்டவை!
வரலாற்று ந்தியைத் தனி மனிதனின் சாகசங்கள் இழுத்துச் செல்வதில்லை.
விதியே அழைத்துச்சென்றிருக்கிறது
கோவலனை மதுரைக்கு அழைத்ததும், பொற்கொல்லனைச் சந்திக்க வைத்ததும் விதி.
மாதர்களாலேயே ஆரம்பமான பிரஞ்சு சாம்ராஜ்யம், மாதர்களாலேயே அழிவுற்றதற்குக் காரணம் விதி!
ஒன்று நடைப்பெற்ற பின்னால், ‘கொஞ்சம் அப்படிச்செய்திருந்தால் நடந்திருக்காதே’ என்று மதி சிந்திக்கிறது!
மதி ஏன் தாமதமாகச்சிந்திக்கிறது?
விதி முந்திக்கொண்டு விட்டது!”
கேள்வியாளர் கேட்டார்:
“அப்படியானால் மனிதனின் மதியால் ஆக்க் கூடியது ஒன்றுமே இல்லையா?”
ஞானியார் சொன்னார்:
“இருக்கிறது!
பள்ளம் என்று தெரியும்போது, அதில் விழாதே என்று எச்சரிப்பது மதி.
அதைப்பள்ளம் என்று தெரிய வைத்தது விதி.
விதி வாசலைத் திறந்து கொடுத்தால் மதி மாளிகைக்குள்ளே நுழைகிறது.
விதி வாசலை மூடிவிட்டால்,மதி அதிலே மோதிக் கொண்டு வேதன் அடைகிறது.
விதியென்னும் மூலத்திலிருந்து முளைத்த கிளையே மதி.
தந்தையைக்கொன்று சாம்ராஜ்யத்தைக்கைப்பற்றிய இளவரசர்களைப்போல் மதி சில நேரம் விதியை வென்றிருக்கலாம்.
ஆனால் விதி அந்த மதியின் குழந்தையாக மறுபடியும் பிறந்து தந்தையைக் கொன்று விடுகிறதமு.
நியமிக்கப்பட்ட தர்மங்கள் சலனமடைவதும், நியமிக்கப்படாத்தை உறுதி பெறுவதும்,நமக்கு அப்பாற்பட்ட ஒருசக்தியினாலே.
அதை என்ன பெயர் வைத்து அழைத்தாலும், அதுதான் நம்மை அழைத்துச் செல்கிறது.
சாமியாக இருந்தவன் யோகியாக மாறுவது அனுபவதால் வந்த மதி.
யோகி சாமியாக மாறுவது ஆசையின் மூலம் வந்த விதி.
தொடக்கம்பலவீனமனல், முடிவு பலமாகிறது.
தொடக்கம் பலமானால், முடிவு பலவீனமாகிறது!
தொடக்கமும் முடிவும் ஒரே மாதிரி இருந்தால் விதி வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.
அப்படி யாராவது இருக்கிறார்களா?”
ஞானியாரின் கேள்வி, கேள்வியாளரைச் சிந்திக்க வைத்தது.
கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசித்தார்.
மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஞானியார் அமைதியாக்க் கேட்டார்:
“உங்கள் மதி வேலை செய்யவில்லையா>?”
கேள்வியாளர் அமர்ந்தார்.
ஞானியார் சொன்னார்:
ஜன்னத்துக்கும்முன்பும் மரணத்திற்குப்பின்பும், நாம் எங்கிருந்தோம். எங்கு போகிறோம் என்று தெரியும்வரை நமக்கு அப்பாற்பட்டது ஒன்று இருக்கிறது.
இடைப்பட்ட வாழ்க்கையை அது நடத்துகிறது.
நான்துறவியானதும் நீங்கள் சம்சாரிகளானதும் நமது விருப்பத்தால் மட்டும் விளைந்தவை அன்றுழ
காலை வெயிலில், நமது நிழல்நம் உயரத்தை விடப் பன்மடங்கு உயரமாக இருக்கிறது.
நம் உருவம் என்னமோ ஒரே மாதிரி இருக்கிறது.
நம் முரவமே விதி; நம் நிழலே மதி!”
மண்டபமே அதிரும்படி கையொலி கேட்டது.
அபை கலைந்தது.
கேள்வியாளர் மட்டும் வெளியே நின்று கொண்டிருந்தார்.
“உங்கள் கேள்வியும் என் பதிலும் விதியல்ல; மதியே!
மதியால் விதியை ஆராய்ச்சி செய்ய முடியும், ஆட்சி செய்ய முடியாது.” என்றபடி ஞானியார் நடந்தார்.
கேள்வியாளர் பின் தொடர்ந்தார்.

8. ஆணவம்
‘நம்மிடம் ஏதுமில்லை’ என்று நினைப்பது ஞானம்.
‘நம்மைத்தவிர ஏதுமில்லை’ என நினைப்பது ஆணவம்.
ஞானம், பணிந்து பணிந்து வெற்றிமேல் வெற்றியாகப்பெறுகிறது.
ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது.
நமது புராண இதிகாசங்களில் ஆணவத்தால் அழிந்தவர்களைச் சித்தரிக்காத்து மிகவும் குறைவு.
ராம காதையில் ராவணன், பாரத்த்தில் துரியோதன்ன், இரணியன், கண்ணனால் கொல்லப்பட்ட நரகாசுரன், கந்தனால் கொல்லப்பட்ட சூரபத்மன், மற்றும் பத்மாசுரன் இவர்களேலாம் ஆவத்தின் அடையாளச்சின்னங்கள்.
இவர்களுடைய முடிவு கொடுமையானதைக் காட்டி, இந்துமதம் ஆணவக்கார்ர்களை எச்சரிக்கிறது.
‘நான்’ என்னும் எண்ணம் ஒருவனுக்குத் தோன்றுகின்றதென்றால், அவன் தோல்விகளைச சந்திக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறான் என்று பொருள்.
அறிவு குறைவானவர்களுக்கே ஆணவம் வருகிறது.
நிறை குடங்களுக்கு அது வருவதில்லை. வெற்றி மயக்கம் ஏற ஏற அறிவு தடுமாறி, முட்டாள்தனமான தைரியம் தோன்றி, ‘எல்லாம் நாமே’ என்று எண்ணம்ப் பிறந்து, தடுமாறிக்காரியம் செய்யத் தொடங்கியதும் ஒவ்வொரு தோல்வியாகத் தொடர்ந்து வந்து, ஆணவக்காரனைக்கூனிக் குறுகிச்செய்கின்றன.
எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் நீண்ட கால நண்பர்.
ஆரம்பத்தில் மிகுந்த சிரம்ப்பட்டுக் கொண்டிருந்தார்.
அந்தச் சிரமத்தோடு கடன் வாங்கி ஒரு படம் எடுத்தார்.
கதை, வசனம், டைரக் ஷன், எல்லாம் அவரே.
படம், ‘ஓகோ’ என்று ஓடிற்று.
வெற்றி மயக்கத்தில் அவர் நிலை கொள்ளவில்லை.!
உடனே ஒரே நேரத்தில், நாலைந்து படங்கள் எடுக்கப்போவதாக விளம்பரம் செய்தார்.
விநியோகஸ்தர்கள் அவரிடம் வந்து, “புதிய படங்களை நாங்கள் வாங்கிக்கொள்கிறோம்; யார் யார் நடிக்கிறார்கள்!” என்று கேட்டார்கள்.
அதறகு அவர் \கோபமாக, “எல்லாம் நானே என் பெயருக்குத்தான் படமே தவிர நடிப்பவர்ளுக்காக அல்ல; இஷ்டமிருந்தால் கையெழுத்துப் போடுங்கள்” என்று மிரட்டினார்.
நான் ஒருநாள் அவரைச் சந்தித்தபோது, “என் ஒவ்வொருபடத்தையும் ‘பாக்ஸ் ஆபீஸ்’ பண்ணிக் காட்டுகிறேன்” என்று என்னிடமே சவால்விட்டார்.
என்னுடைய படம் என்றால், ஓலையிலே பிரிண்ட் பண்ணினாலும் ஓடும்” என்று சொன்னார். பெரிய பெரிய கோவில்களுக்கெல்லாம் வேண்டிக்கொண்டும், அவரது அடுத்த பட்ம படுதோல்வியடைந்தது. மூன்றாவது படமும் படுதோல்வி.
கடன்கார்ர் ஆனார். கஷ்டப்படுகிறார்.
தன்னைத் தேடி வந்தவர்களிடம் ஆணவத்தோடு நடந்து கொண்ட அவர், தினமு அவர்க்கைத் தேடி நடக்கிறார்.
இன்னொருவம்… அவரும் கதை எழுதி டைரபக் ஷன் செய்கிறவர்.
அவர் விழித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், பெரும் பகுதி தன்னைப் பற்றிஏ பேசிக்கொண்டிருப்பார்.
நீங்கள் அவரோடு பேசப்போனால் நீங்களும் அவரைப்பற்றியே பேசினால்தான் அவர் உங்களோடு பேசுவார்.
வசனத்திலே வல்லினம் மெல்லினம் இருக்காது.
ஆனால் குருட்டுத்தனமாக வந்த வெற்றி, அவரைக்குருடனாகவே ஆக்கிவிட்டது.
இதுவரை ஆணவக்காரர்கள் எப்படி அவதிப்பட்டார்களோ, அப்படிப்பட்ட அவதிக்கே அவரும் தயாராகிக்கொண்டிருக்கிறார்.
மனிதன் உடம்பு மிகவும் பலவீனமானது.
அதில் ஒரு நரம்பைத் தட்டினால் பல நரம்புகளிலும் சங்கீதம் கேட்கிறது.
ஒரு வெற்றிக் கண்ணுக்குத் தெரிந்துவிட்டால், வரப் போவதெல்லாம் வெற்றியே என்ற திமிர் வருகிறது.
அந்தத்திமிர், யாரையும் அலட்சியப்படுத்தச் சொல்கிறது.
அடி பலமாக விழுந்ததும்,திமிர் தானாக அடங்கிப் பணிவு எங்கிருந்தோ வந்து விடுகிறது.
ஒரு சபைக்கு நான் போயிருந்தேன்.
பெரிய பெரிய அறிஞரெல்லாம் வந்திருந்தார்கள்.
அவர்களையெல்லாம் சாதாரணமாக நினைது, ஓர் அரைகுறைப் படிப்பாளி, ஆணவத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்.
அவரது ஆணவத்தைப் பார்த்து அவர் பேசியதிலிருந்த தவறுகளைக்கூட யாரும் திருந்தவில்லை.
ஒவ்வொ வரியையும் முடிக்கும்போது, “எப்படி நான் சொல்வது?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
நான் ஆத்திரம் தாங்காமல், “ஒரு குழந்தை எப்படிச் சொல்லுமோ, அப்படியே சொல்கிறீர்கள்” என்றேன்.
“தெளிவில்லாதவன், விவேகமற்றவன்” என்பதை நயமாகவும், நளினமாகவும் சொன்னேன்.
சில கவியரங்கங்களிலும் இந்த அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது.
இலக்கண மரபோ, இலக்கியச் சுவையோ தெரியாத சிலரும், அந்த அரங்கங்களில் தோன்றிவிடுவார்கள்.
என்னைத்தாக்கிவிட்டால் தாங்கள்பெரிய கவிஞர்கள் என்ற எண்ணத்தில், அசிங்கமாகத் தாக்குவார்கள்.
நான் அடக்கத்தோடும் பயத்தோடும் உட்கார்ந்திருப்பேன். திரும்ப அவர்களைத் தாக்க மாட்டேன்.
காரணம், கிருபானந்தவாரியர் சொன்ன ஒரு கதை.
கோயில் யானை ஒன்று நன்றாக்க்குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்ததாம்.
ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம்.
யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டதாம்.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக்கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்ததாம்.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா! நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டதாம்.
அதற்குக் கோயில்யானை கீழ்க்கண்டவாறுபதில்சொன்னதாம்.
“நான் சுத்தமாக இருக்கிறேன், பன்றியின் சேறு என் மேல் விழுந்துவிடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சம்மாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும்.”
-இந்தக் கதையின்படி சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நான் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது வழக்கம்.
முன்னேற விரும்புகிற எவனுக்கும் ஆணவம் பெருந்தடை.
ஆணவத்தின் மூலம் வெற்றியோ லாபமோ கிடைப்பதில்லை; அடிதான் பலமாக விழுகிறது.
தான்பணக்கார வீட்டுப்பெண் என்ற ம்மதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி.
தான் மந்திரியாகிவிட்ட போதையில் தொண்டர்களை அலட்சியப்படுத்தும் தலைவன்;
தான்சொன்ன ஏதோ ஒன்றை ஜனங்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்காகத்தினமும் எதையாவது சொல்லிக்கொண்டிருக்கும் தலைவர்கள்;
-இவர்களெல்லாம், ஒருகட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக்குறுகிப் போய் விடுகின்றார்கள்.
‘எதற்கும் தான் காரணமல்ல; ஏதோ ஒரு சக்தி தான் காரணம்’ என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை.
‘மற்றவர்களுக்கு என்ன தெரியும்’ என்று நினைப்பவன், சபைகளில் அவமானப்படாமல் தப்பியதில்லை.
ஆணவத்தால் அழிந்துபோன அரசியல் தலைவர்ள் உண்டு; சினிமா நடிகர்கள் உண்டு;பணக்கார்ர்கள் உண்டு.
அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு.
மகாபாரத்த்தில் நான் கேட்டிருந்த ஒரு சம்பவம்.
பரந்தாமன் மஞ்சத்தில் அமைதியாகத்தூங்கிக் கொண்டிருந்தானாம்!
துரியோதன்ன் பரந்தாமனின் தலைமாட்டருகே அமர்ந்தானாம். அர்ச்சுன்ன் காலடியில் அமர்ந்தானால்ம!
காலடியில் அமர்ந்திருந்ததால், விழித்துதும் முதன் முதலில் அவனையே பாரத்த பரந்தாமன், “என் உதவி உனக்குத்தான்” என்று கூறிவிட்டானாம்.
ஆணவம் தலைமாட்டில் அமர்ந்தது; அடக்கம் காலடியில் அமர்ந்தது.
அடக்கத்துக்கு உதவி கிடைத்தது.
பாரதப்போரில் ஆணவம் தோற்றது.
ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயற்காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை.
நாணலோ பணிந்து, வளைந்து, எந்தக் காற்றிலும் தப்பி விடுகிறது.
‘எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்’ என்றான் வள்ளுவன்.
‘அடக்கம் அமரருள் உய்க்கும் ‘ என்று பேசுகிறவர்கள் உண்டு.
ஆனால், கம்பனுக்கு அந்த ஆணவம் வந்ததில்லை.
அதனால்தான், காலங்களுக்கும் நிலைக்கக்கூடிய காவியத்தை அவனால் எழுத முடிந்தது.
இந்துக்கள் வற்புறுத்தும்பணிவும் அடக்கமும் வாழ்வில் வெற்றியை நோக்கிப் போவதற்கான படிக்கட்டுகளே!
இந்தப் பணிவை வங்காளத்து இந்துக்களிடம் அதிகம் காணலாம்.தன்னைவிட வயதில் மூத்தவரைச்சந்தித்தால், எந்தப் பேரறிஞனும், அவர்கள் காலைத்தொட்டுக்கும்பிடுகிறான்.
வெறும் வயதுக்கே அந்த மரியாதையைத் தருகிறான்.
என்னுடைய விழா ஒன்றில், ஒரு பெருந்தலைவனில்காலத் தொட்டு வணங்கியதுபற்றி, என்னைச் சிலர் கோபித்தார்கள்.
நான் சொன்னேன்.
“அந்தக் கால்கள் தேசத்துக்காக சத்தியாக்கிரகம் செய்யப்போன கால்கள்.
சிறைச்சாலையில் பல்லாண்டு உலாவிய கால்கள் என்னுடைய கால்களுக்கு அந்தப்பாக்கியம் இல்லாத்தால்,கைகளாவது அந்தப் பாக்கியத்தைப் பெறட்டுமே!”
சில சபைகளில், என்னை உட்கார வைத்துக் கொண்டே என்னைப்புகழ்வார்கள். எனக்குச் சர்வாங்கும் ஒடுங்கிவிடும்.
‘நாம் என்ன எழுதிவிட்டோம்? என்ன செய்து விட்டோம்?’ என்ற எண்ணமே தோன்றும்.
‘இப்படிப் புகழ்கிறார்களே’ என்ற பயம் தோன்றும்.
ஆண்டவன், ன் தலையில் ஆணவத்தை உட்கார வைத்து என்னை அவமானபடுத்தியதில்லை!
அடக்கதில் இருக்கும் சூகம், ஆணவத்தில் இல்லை!
ஆணவத்தின் வெற்றி ஆரவாரங்களையும், அவற்றின் வீழ்ச்சியையும், இந்துக்களின் புராணங்களிலும், இதிகாசங்களிலும் படியுங்கள்.
‘கீதையில் கண்ணன் சொல்லும் ஸ்வதர்மங்களில் அடக்கமும் ஒன்று’ என்பதையும் அறியுங்கள்.
குருட்டுத்தனமாக ஏதேனும் வெற்றியோ பதவியோ கிடைத்துவிட்டால், அதை வைத்துக்கொண்டு, ஞானிகளையும் பெரியவர்களையும் அவமதிக்காதீர்கள்.
அடங்கி வாழ்ந்தால் ஆயுள் காலம் முழுவதும் ஓங்கி வாழலாம் என்பதே இந்து மதத்தின் சாரம்.


தொடரும் ............



.