புதன், 18 ஆகஸ்ட், 2010

முரளியின் 18 ஆண்டு கால சுழல் ஓய்ந்தது

உலக கிரிக்கெட் அரங்கில் 1982ஆம் ஆண்டுதான் இலங்கைக்கு டெஸ்ட் கிரிக்கெட் தகுதி வழங்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் தலை சிறந்த சாதனை மன்னன் முரளிதரனை அந்த நாடு உருவாக்கியது. அடுத்த 18 ஆண்டுகளில் அவர் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இன்று ஒருவரும் இனிமேல் அடுத்த 15 ஆண்டுகளுக்கு உடைக்க முடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.




28 ஆண்டுகாலமே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வரும் இலங்கை அணி அதற்குள் மிகப்பெரிய சாதனை மன்னனை உருவாக்கியுள்ளது என்றால் அது நிச்சயம் அந்த நாட்டின் அப்போதைய உள்நாட்டு கிரிக்கெட் உள்கட்டுமானமே காரணம் என்று கூறினாலும், முரளிதரன், பிராட்மேன், சோபர்ஸ், கபில்தேவ், வால்ஷ், சச்சின், லாரா, ஷேன் வார்ன், கும்ளே போன்றவர்கள் உள்கட்டுமான பலம் பலவீனங்களைத் தாண்டிய தனிமனித ஆளுமைகள் என்பதில் இருவேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை.



ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 'பாடிலைன்' (Bodyline) புதிய தாக்குதல் முறை பந்து வீச்சை அறிமுகம் செய்து டான் பிராட்மேனைக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டி அதில் வெற்றியும் பெற்ற இங்கிலாந்து கேப்டன் ட‌கள்ஸ் ஜார்டைனுக்குப் பிறகு முரளிதரன் என்ற கிரிக்கெட் வீரர்தான் அதிக சச்சரவுக்குள்ளானார் என்றால் அது மிகையாகாது. அதாவது கிரிக்கெட் காரணங்களுக்காக, ஷோயப் அக்தர் போன்று ஒழுக்கத் தடுமாற்றங்களால் ஏற்படும் சச்சரவுகள் அல்ல.



இன்னும் பலருக்கு முரளிதரன் கிரிக்கெட்டின் இத்தகைய உயர்வுக்குத் தகுதியற்றவராகத்தான் தோற்றமளிக்கிறார். ஆனால் பெரும்பகுதியினருக்கு இவர் ஒரு மகான் கிரிக்கெட் வீரர் மற்றும் மந்திரச் சுழற்பந்து வீச்சாளர். இன்னும் ஒரு சில அபத்த விமர்சகர்களுக்கு முரளிதரன் ஒரு ஏமாற்றுக்காரர். (பிஷன் சிங் பேடி, மைக்கேல் ஹோல்டிங் ஆகியோரின் கருத்துகளின் படி)



நடுவர்களுக்கும், ஆஸ்ட்ரேலிய மைதான ரசிகர்களுக்கும் முரளிதரன் ஒரு ஜோக்கர். ஆக்சன் ரீ-பிளேயில் அவரது கண்களை அருகில் காட்டும் ஒவ்வொரு தருணமும் ஆஸ்ட்ரேலியர்களுக்கு முரளீதரன் ஒரு ஜோக்கராகத்தான் தெரிந்துள்ளார்.



ஒவ்வொரு முறை ஆஸ்ட்ரேலியாவில் இவர் பந்து வீச வரும்போதும் ரசிகர்கள் இவர் பந்துகளை நோ-பால் என்றும், த்ரோ என்றும் கேலி பேசியுள்ளனர்.



இவ்வளவு மாற்றுக் கருத்துகளுக்கும் ஈடுகொடுத்து முன்னேறி வந்த முரளிதரனைப் பற்றி அனைவரும் ஆச்சரியமடைந்த ஒரு விஷயம் உள்ளது என்றால் கட்டாந்தரையிலும் பிட்சிற்கு வெளியே குத்தி பந்தை கடுமையாகத் திருப்பி ஸ்டம்ப்களை பெயர்த்து முன்னணி வீரர்களை அச்சுறுத்திய அவரது அசாத்திய திறமைதான்.





FILEஅவர் 1992ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக கொழும்புவில் தன் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அப்போது முதல் 1999ஆம் ஆண்டு வரை 48 டெஸ்ட் போட்டிகளில் 227 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அவர் தூஸ்ரா என்ற ஒரு புதிய பந்து வீச்சை வீசத் துவங்கினார். அதாவது ஆஃப் ஸ்பின்னிற்கு எப்படிப் பந்தை பிடித்துக் கொள்வாரோ அதுபோன்று பிடித்துக் கொண்டு வீசும் போதே பந்து எதிர்த் திசையில் திரும்பி பேட்ஸ்மென்களை நிலைகுலையச் செய்தது.



அதன் பிறகே 2000த்திலிருந்து 2010ஆம் ஆண்டு வரை விளையாடிய 85 டெஸ்ட் போட்டிகளில் முரளிதரன் மேலும் 573 விக்கெட்டுகளைச் சாய்த்து மற்றொரு சுழல் மேதை ஷேன் வார்னைக் கடந்து சென்று இன்று 800 விக்கெட் நாயகனாக சாதனை புரிந்துள்ளார்.



ஆனால் தூஸ்ராவைக் கண்டுபிடித்தது இவர் அல்ல தூஸ்ராவைக் கண்டுபிடித்தது பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் ஷக்லைன் முஷ்டாக் என்பது அனைவரும் அறிந்ததே.



சச்சரவுகளும், கேலியும் அவரை வாழ்நாள் முழுதும் துரத்தியபடியே வந்தன. அதனை தன் அகலக்கண் புன்னகை மூலம் அலட்சியப்படுத்திய அவர் உண்மையில் 1995ஆம் ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்ட்ரேலிய நடுவர் டேரல் ஹேர் தன் பந்துகளை த்ரோ என்று முத்திரைக் குத்தி நோ-பால் என்று பலமுறை அறிவித்தது கண்டு அதிர்ச்சியடைந்தார் என்பது உண்மைதான். அவர் கால்லே டெஸ்ட் போட்டியின் கடைசி பிரிவுபசார நிகழ்ச்சியில் பேசும் போது கூட நடுவர்களின் போக்கு பற்றி குறிப்பிட்டார். பிரிவுபசார நிகழ்ச்சியில் வேறு இனிய நினைவுகள் இருக்கும் போது தன்னை த்ரோ என்று கூறிய நடுவர்களுக்கு எதிராக ஒன்றும் கூறப்போவதில்லை என்று கூறியிருக்கிறார் என்றால் அது அவரை மிகவும் பாதித்துள்ளது என்றே பொருள்.






FILE3 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆஸ்ட்ரேலிய நடுவர் ராஸ் எமர்சன் முரளி பந்து வீச்சை த்ரோ என்று தீர்ப்பளிக்கிறார். பிறகு 2004ஆம் ஆண்டில் அவர் தூஸ்ராவை வீசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு பெர்த் பயோ-கெமிக்கல் சோதனை, அதன் பிறகு 15 டிகிரி வரை கையை மடக்கினால் அது த்ரோ இல்லை என்ற புரிதல் ஏற்பட்டது.



ஆனால் முரளி ஓய்வு பெற்ற பிறகு கூறியது, இளைஞர்களுக்கு இருக்கவேண்டிய மனத்திடத்தை குறிப்பதாக அமைந்தது. அதாவது தனது பந்து வீச்சு முழுதுமே தவறு என்று தீர்ப்பு வந்திருந்தாலும், ஆஃப் ஸ்பின்னைத் துறந்து லெக்-ஸ்பின் வீசி கிரிக்கெட் ஆட்டத்தை தொடர்ந்திருப்பேன் என்றார். இது அவரது அசாத்திய தன்னம்பிக்கையை அறிவுறுத்துவதாய் உள்ளது.



1996 ஆம் ஆண்டு இலங்கை உலகக் கோப்பையை வெல்லும் போது அந்த அணியில் இருந்தார். மீண்டும் 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிக்குள் நுழைந்த இலங்கை அணியின் முக்கிய வீரராகத்திகழ்ந்தார் முரளி.



சர்வதேச அரங்கில் 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றாலும் இலங்கை அணிக்கு ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து தென் ஆப்பிரிக்க அணிகள் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு டெஸ்ட்கள் கொண்ட் தொடர்களையே வழங்கிவந்தது.



இந்த நிலையில்தான் 1998ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஒரே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை நிலைகுலையச் செய்தார் முரளி. இதற்கு முன்பும் அச்சுறுத்தும் பல பந்து வீச்சு இன்னிங்ஸ் முரளியின் கிரிக்கெட் வரலாற்றில் இருந்தும் இந்த டெஸ்ட் போட்டிதான் அவரை ஒரு முக்கிய அச்சுறுத்தலாக உலக அரங்கில் மாற்றியது.



முதலில் பேட் செய்த இங்கிலாந்து 445 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதில் முரளி 60 ஓவர்கள் என்ற மராத்தான் ஸ்பெல்லை வீசி 159 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.



ஆனால் இலங்கை அணி ஜெயசூரியாவின் அதிரடி 213 ரன்களாலும் அரவிந்த டிசில்வாவின் 152 ரன்களாலும் 591 ரன்கள் எடுத்து 146 ரன்கள் முன்னிலை பெற்றது.



இரண்டாவது இன்னிங்ஸில் 25 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து முரளி பந்து வீச வந்தவுடன் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. பட்சர், ஹிக், ராம்பிரகாஷ், பென் ஹோலியோக் ஆகிய முக்கிய வீரர்களுக்கு முரளியின் ஆஃப் ஸ்பின் என்ன ஆனதென்றே தெரியவில்லை. 181 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டது.]



முரளிதரன் 54.2 ஓவர்களை வீசி அதில் 27 ஓவர்களை மைடன்களாக்கி 65 ரன்கள் மட்டுமே கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் இதனால் இலங்கை அந்த டெஸ்ட் போட்டியில் வென்றது. அந்த 1998ஆம் ஆண்டுதான் அவர் 8 டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 68 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார்.





FILEஇவர் காலத்தில் மிகச்சிறந்த பேட்ஸ்மென்களாகக் கருதப்பட்டவர்களில் லாராவும், சச்சின் டெண்டுல்கரும்தான். இதில் 19 முறை டெண்டுல்கரை எதிர்கொண்ட முரளி அதிகபட்சமாக 9 முறை டெண்டுல்கரை வீழ்த்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கரை அதிக முறை வீழ்த்திய ஒரே வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் தன்னகத்தே வைத்துள்ளார்.



ஆனால் லாராவின் கதை வேறு. 2001ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் பலவீனமானது. லாராவும் சுமார் 45 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அணிக்குத் திரும்புகிறார். முரளிதரன் அவரது பந்து வீச்சு உச்சத்தில் இருக்கிறார். இலங்கையில் அவரை இதுவரை யாரும் முறியடித்ததில்லை என்பது அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகவே மாறிவிட்டிருந்தது.



ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையை ஏற்கவில்லை ஒரு 178, 74, 48, 221, 130 என்று 651 ரன்களை விளாசினார் லாரா. முரளிதரனை ஸ்வீப் செய்து தொடர் முழுதும் காலி செய்தார் லாரா. எப்படி சச்சின் கட்டம் கட்டி ஷேன் வார்னுக்கு வேட்டு வைத்தாரோ அதே போல் முரளிக்கு வேட்டு வைத்தார் லாரா. இலங்கை மண்ணில் முரளிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் லாரா. முரளியே அந்தத் தொடர் முடிந்தவுடன் லாராவிற்கு என்னால் வீச முடியவில்லை என்று ஒப்புக் கொள்ள நேரிட்டது. இதனைத் தவிர கடைசியாக ஒரு முறை சேவாக் ஒரே நாளில் 284 ரன்கள் விளாசிய போது முரளியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த இரண்டு அல்லது இதுபோன்ற இன்னும் ஓரிரு தருணங்களே முரளியை முழுதும் ஆதிக்கம் செலுத்த முடிந்துள்ளது. மற்ற நேரங்களில் இலங்கை தோற்றாலு‌ம் இவருக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதில்லை.




ஆனாலும் இவர் இலங்கையில் 73 டெஸ்ட் போட்டிகளில் 493 விக்கெட்டுகளையும், வெளிநாடுகளில் 60 டெஸ்ட் போட்டிகளில் 307 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளமை விமர்சன ரீதியாக நோக்கப்பட இடமுண்டு. இருப்பினும் 60 டெஸ்ட் போட்டிகளில் 307 விக்கெட்டுகள் ஒன்றும் சாதாரணமல்ல.



ஆனாலும் வங்கதேசம், மற்றும் ஜிம்பாப்வே மைதானங்களில் இவர் எடுத்த 55 விக்கெட்டுகளை இவரது அயல் நாட்டு கணக்கிலிருந்து கழித்துவிட்டால் இவர் எடுத்தது 60 டெஸ்ட்களில் 252 விக்கெட்டுகள்தான். நாம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இவர் எடுத்த விக்கெட்களையும் கூட ஒரு விதத்தில் கணக்கிற்காகவே வைத்திருக்க முடியும் ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் இந்தக் காலக்கட்டங்களில் மிகவும் மோசமான அணியாக இருந்தது என்பதையும் நாம் மறந்து விடலாகாது.



அதேபோல் உள்நாட்டில் முரளி தாதாகிரியாக இருந்தாலும் ரிக்கி பாண்டிங் தலைமை ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக இலங்கை முரளி இருந்தும் 3-0 என்று உதை வாங்கியதை முரளி மறந்திருக்க முடியாது.





FILEஇவரது பந்து வீச்சை த்ரோ என்று ஆஸ்ட்ரேலியா கூறினாலும், ஹர்பஜன் சிங் அளவுக்கு ஆஸ்ட்ரேலியாவை முரளி மிரட்டவில்லை என்றே கூற வேண்டும். ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், ஆஸ்ட்ரேலிய மைதானங்களில் 5 டெஸ்ட் போட்டிகளில் 12 விக்கெட்டுகளையே இவரால் எடுக்க முடிந்தது. மாறாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 15 டெஸ்ட் போட்டிகளில் எடுத்த 104 விக்கெட்டுகளில் தென் ஆப்பிரிக்க மைதானத்தில் 6 டெஸ்ட் போட்டிகளில் 35 விக்கெட்டுகள் என்று நல்ல முறையில் வீசியுள்ளார்.



அதே போல் இந்தியாவில் இவர் 11 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளையெ எடுக்க முடிந்துள்ளது. துணைக்கண்ட ஆட்டக்களங்களில் இவர் ஒரு டெஸ்ட் போட்டியில் எடுத்துள்ள சராசரி விக்கெட்டுகளை விட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.



ஆனால் புள்ளி விவரங்கள் ஒருபுறம் இருந்தாலும் முரளிதரன் ஒரு சகாப்தம் இனி இது போன்ற ஒரு சுழற்பந்து வீச்சாளரை கிரிக்கெட் நாடுகள் உருவாக்குவது கடினம். உருவாக்கினாலும் 800 விக்கெட்டுகளை எட்ட இயலாது, ஏனெனில் டெஸ்ட் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து வரும் ஒரு காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.





FILEஷேன் வார்ன், அனில் கும்ளே, முரளிதரன் ஆகியோர் சமகால ஸ்பின்னர்களே. இவர்கள் மூவரும் முறையே 708, 619, 800 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். அதாவது 2,127 விக்கெட்டுகளை இந்த 18 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் இதுதான் ஸ்பின் பந்து வீச்சின் சிறந்த காலக்கட்டம் என்று கூறலாம் இந்த 18 ஆண்டுகள்தான் சுழற்பந்து வீச்சின் பொற்காலம் என்றே நாம் அறுதியிடலாம்.



இந்த மூவருடன் சுழற்பந்து வீச்சின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்றே கூறலாம். முன்பு ஒரு காலத்தில் பேடி, பிரசன்னா, வெங்கட்ராகவன், சந்திரசேகர், லான்ஸ் கிப்ஸ், டெரிக் அண்டர் வுட் இருந்தது போல் இந்த 18 ஆண்டுகளில் இவர்கள்தான்.



தற்போதுள்ள டேனியல் வெட்டோரி, ஹர்பஜன் சிங், கனேரியா, கிரகாம் ஸ்வான், பால் ஹேரிஸ் என்ற சுழற்பந்துக் கூட்டம் முந்தைய இரண்டு மாமரபுகளுக்கு அருகில் கூட செல்ல சாத்தியமில்லை என்றே நாம் கருதவேண்டியுள்ளது.


«123»

0 கருத்துகள்: