புதன், 18 ஆகஸ்ட், 2010

இந்தியா, சீனாவை முந்துவதற்கு கூடுதல் பட்டதாரிகள் தேவை : ஒபாமா

இந்தியா, சீனா ஆகிய நாடுகளை முந்துவதற்கும், உலக அளவிலான போட்டியில் சிறப்பிடம் பெறவும் அமெரிக்காவில் மேலும் அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.




இதுகுறித்து ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரியாரையாற்றி அவர், “பீஜீங்கில் முதல் பெங்களூரில் தொடங்கி சியோல் முதல் சாவ் பவ்லோ வரை தொழில்களில் புதிய தொழில்நுட்பமும், புத்தாக்கங்களும் புகுத்தப்படுகின்றன. நமது போட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது,” என்றார்.



அமெரிக்க பொருளாதாரத்தை தொடர்ந்து உயர்த்த வேண்டும் என்ற அவர், “மூன்று சொற்கள் கொண்ட வாக்கியத்தை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படவேண்டும். “மேட் இன் அமெரிக்கா”.. இதுவே அந்த மந்திரச் சொல்.



நாம் இரண்டாவது இடத்தைப் பெறுவதற்காக ஆடுகளத்தில் இல்லை. நாம் யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா… நாம் முதலிடத்தில் தான் இருக்க வேண்டும்.



2020 ஆம் ஆண்டுக்குள் மேலும் 80 லட்சம் கல்லூரி பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என உறுதிபூண்டுள்ளேன். ஏனெனில், நம் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது, அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் தேவைப்படுகிறார்கள்,” என்றார் ஒபாமா.



மேலும், ஒரே தலைமுறையில் கல்லூரிப் பட்டதாரிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து 12-வது இடத்துக்கு அமெரிக்கா தள்ளப்பட்டதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.



இந்தியா,சீனாவுக்கு இனி அவுட்சோர்ஸிங் பணி இல்லை…



முன்னதாக, டெக்சாஸ் மாகாணத்தில் தனது கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று பே‌சிய அவர், “அமெரிக்காவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. இதனை எதிர்கொள்வது அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.



எனினும், இப்பிரச்னைக்கு தீர்வுகாண அரசு உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து பெரும்பாலான பணிகள் இந்தியா, சீனா, ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்குப் பணிகள் ஒப்படைக்கப்படாது. இதில் அரசு உறுதியாக உள்ளது.



அத்துடன், புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நான் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினேன். நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தக் கொள்கை வகுக்கப்பட்டது.



ஆயினும், நாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத பொருளாதார நெருக்கடியால் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளதை நன்கு அறிவேன். இது தாற்காலிகமானதே. இதில் இருந்து விடுபட அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்றார் ஒபாமா.



0 கருத்துகள்: