புதன், 18 ஆகஸ்ட், 2010

ஒரு தமிழனின் கனவு

ஒரு தமிழனின் கனவு!!






விடுதலையின்

வேட்கையில்

ஒவ்வொன்றாய் உதிர்கிறது

ஈழ உயிர்ப்புகள்;



ஆயினும் -

வெல்வோமெனும் திடத்தில்

தோற்றிடவில்லை ஒரு

உலகத்

தமிழரும்!

---------------------------------------------------



அண்ணன் தம்பி

அம்மா அப்பா

பிள்ளை மனைவி

யாரையும் இழந்த

எம் உறவுகள் -

ஈழத்தை இழக்க மட்டும்

தயாரில்லை!

---------------------------------------------------



சுவாசத்தில் சுதந்திரம்

கேட்டு -

வாழ்தலுக்கு ஒரு

ஈழம் கேட்டுத் தானே

இத்தனை போராட்டமென

அறுபது வருடம் தாண்டியும்

புரிந்துக் கொள்ள வில்லை

உலகம்!

---------------------------------------------------



கைவீசி நடந்த அதே

தெருவில் -

கைகால் முடமாக்கப் பட்டு

கிடக்கிறேன் -

பரவாயில்லை;

எக்காரணம் கொண்டும் எம்

விடுதலை உணர்வை

முடமாக்கிக் கொள்ளாதீர்கள்

உறவுகளே!

---------------------------------------------------



நெல்மணிக்கும்

தேயிலைக்கும்

விவசாயம் பார்த்த

தமிழனமே; வாருங்கள்

ஊரெல்லாம் உறைந்துக் கிடக்கும்

ரத்தத்தில் -

எந்த உயிர் யாருடையதெனப்

பார்ப்போம்.



ஒருவேளை அது -

என்னுடையதாய் இருந்தால்

மீண்டுமென்னை உயிர்பித்து விடுங்கள்

ஈழம் வெல்லும் வரை மட்டும்!

---------------------------------------------------



உலக தமிழினங்களே

வாருங்கள் -

ஒரு வாரம்

ஈழத்தில் தங்கி

இறந்த போராளிகளின்

உடம்பு கறி கிடைக்கும்

தின்று விடுதலை உணர்வை

மீட்டுக் கொள்ளுங்கள்!

---------------------------------------------------



குண்டு வெடி

சப்தத்திற்கோ

பீரங்கியில் சிதைந்து போகும்

மரணத்திற்கோ

பயமில்லை;



இறந்து கொண்டிருப்பது

வெறும் போராளிகள் மட்டுமல்ல

எங்களின் நம்பிக்கையுமென்பதே

பயம்!

---------------------------------------------------



இறந்தவர்களுக்கு

இறந்த பின்பும்

நிறைய கடிதங்கள்

எழுதப் படுகின்றன;



பதிலாய் வரும்

அத்தனை கடிதத்திலும்

ஒற்றை சொல்லே

வருகிறது; மீண்டும் மீண்டும்

போராடுங்கள்..

போராடுங்கள்..

---------------------------------------------------



இதுவரை

வீடிழந்து

நாடிழந்து

விடுதலை தேடி திரியும்

எம் உறவுகளே;

உயிரை

யாருக்கு வேண்டுமாயினும்

விட்டுவிடுங்கள்;

விடுதலை உணர்வை -

ஈழத்திற்கு மட்டுமாய்

மிச்சம் வையுங்கள்!

---------------------------------------------------



ரத்தம் ஊறிய

மண்ணில் ஓர் தினம்

புலிக்கொடி -

பட்டொளி வீசிப்

பறக்கும்;



இது கனவென்று

நினைக்கிறார்கள் சிலர்;



ஆம் கனவு தான்

தமிழனின் கனவு!!

-----------------------------------------

0 கருத்துகள்: