புதன், 18 ஆகஸ்ட், 2010

மன அமைதியில்லா மனிதர்கள் கலியுகத்தில் கலியாகும் டி.வி

களியக்காவிளை: கலியுகத்தில் கலியாக வீடுகளில் டி.வி., விளங்குகிறது என செங்கல் சிவசக்தி கோயில் மடாதிபதி கிருஷ்ணன்குட்டி சுவாமிகள் பேசினார்.அகில இந்திய ஸ்ரீமத் ராமாயண ஸத்திர ஸமிதியின் சார்பில் ராமாயண விளக்கவுரை மாநாடு வரும் டிசம்பர் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை வெட்டுவெந்நி கண்டன்சாஸ்தா கோயிலில் நடக்கிறது. இந்த மாநாட்டில் திருவனந்தபுரம், குமரி மாவட்டங்களில் அமைந்துள்ள கோயில் நிர்வாகிகள், வித்வான்கள், ஆன்மிக பெரியோர்கள், சன்யாசிகள், யோகிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டை முன்னிட்டு திருவனந்தபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் அமைந்துள்ள அனைத்து கோயில்களிலும் ராமாயண பாராயணம் இரண்டு மணி நேரம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் துவக்க விழா மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது. வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம மடாதிபதி சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் துவக்கி வைத்தார். திருவனந்தபுரம் மாவட்டத்தில் ராமாயண பாராயண துவக்க விழா ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் நடந்தது. மாநில ஐ.ஜி., சாந்தாராம் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து இரண்டு மாவட்டங்களிலும் மாதந்தோறும் ராமாயண பாராயணம் நடக்கிறது.கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் நடந்த ராமாயண பாராயண துவக்க விழாவில் அகில இந்திய ஸ்ரீமத் ராமாயண பாராயண ஸத்திர ஸமிதி சேர்மன் டாக்டர் பத்மனாபன் தலைமை வகித்தார். செங்கல் சிவசக்தி கோயில் மடாதிபதி கிருஷ்ணன்குட்டி சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசியதாவது: கலியுகத்தில் கலியாக ஒவ்வொரு வீடுகளிலும் டி.வி., விளங்குகிறது. பண்டைய காலங்களில் ஒவ்வொரு குடும்பங்களிலும் தாய்மார்கள் மாலை நேரத்தில் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி ராம நாமம் சொல்வர். அப்போது மனிதர்களுக்கு மன அமைதி ஏற்பட்டது.எங்கும் அமைதி நிலவியது. மனிதர்கள் மன நிம்மதியுடன் வாழ்ந்தனர். இன்றைய கால கட்டத்தில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதன்படி மனிதர்கள் கண்டுபிடித்த டி.வி., கள் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ளன. இன்றைய தாய்மார்கள் தங்களது வீடுகளில் குழந்தைகளுடன் உட்கார்ந்து மாலை நேரத்தில் டி.வி., பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ராம நாமம் வீடுகளில் ஜெபிப்பதில்லை. இதனால் மனிதர்கள் மன அமைதியின்றி அலைகின்றனர். மன அமைதியின்றி தவிப்பதற்கு காரணமாக டி.வி., விளங்குகிறது. இதனைப் போக்கி மன நிம்மதி அடைய மனிதர்கள் ராம நாமம் ஜெபிக்க வேண்டும். இதற்கு ஸ்ரீமத் ராமாயண ஸத்திர ஸமிதி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட அனைத்து சுலோகங்களையும் மனிதர்களுக்கு போதித்து, வரும் தலைமுறைகளையாவது காப்பாற்ற இறைவன் அருள் புரியட்டும். இவ்வாறு கிருஷ்ணன்குட்டி சுவாமிகள் பேசினார்.தொடர்ந்து கவிஞர் மதுசூதனன், வக்கீல் மோகன்குமார், கிருஷ்ணம்மா ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ராமசந்திரன் நாயர், நல்லூர் வெட்டுவெந்நி ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயில் செயலாளர் புரு÷ஷாத்தமன் நாயர், ஸ்ரீகுமரன் நாயர், பரமேஸ்வரன் நாயர் மற்றும் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். அகில இந்திய ஸ்ரீமத் ராமாயண ஸத்திர ஸமிதி செயலாளர் நாராயணன் நாயர் நன்றி கூறினார்

0 கருத்துகள்: