வியாழன், 11 நவம்பர், 2010

பொங்குமா கடல் வளமும்......வண்டி சேர் சகதியும்.....கொள்ளையர் வசம்....?

" ஒரு நாட்டின் வளம் ,அது தன்னகத்தே கொண்டுள்ள கடல் அமைப்பை பொறுத்து அமைகிறது."
மெக்கலன் குறிப்புகள்:
கடந்த 25 ஆண்டுகளில் உலகளாவிய அளவில் ,கனிமங்களின் மூலம் ஈட்டும் பொருளாதாரம் அளப்பரிய அளவில் உள்ளது. தன் நாட்டுக் கனிம வளங்களைச் சுரண்டியது போக , இப்போதெல்லாம் பிற நாட்டில் கை வைப்பதும் ,போதாக்குறைக்கு ,கடலுக்குள்ளும் ஆய்வு நடத்தி ,அங்கு கனிமங்களை சுரண்டலாமா? எப்படி எடுப்பது? என்பது போன்ற ஆராய்ச்சி முடிவுகள் அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாக உள்ளது. பெட்ரோல், வாயு போன்றவை கடலிலிருந்து ஈட்டப்படும்போது ,பிற கனிமங்களையும் நாம் ஏன் வெட்டி எடுக்கக்கூடாது என்பது போன்ற கேள்விகள் ,பதில்களே இல்லாமல் ஆக்கி விடுகின்றன. பாப்புவா நியூ கினியா ,தனது கடல் பகுதியில் ,உலகின் முதல் ஆழ்கடல் கனிம வள சுரங்கம் அமைக்க பச்சைக் கொடி காட்டியிருப்பது இயற்கை ஆர்வலர்களையும் ,கடல்சார் ஆய்வறிஞர்களையும் எச்சரிக்கை கொள்ளச் செய்துள்ளது. கனடா நாட்டு கனிம ஆய்வு கம்பெனியான நாடிலஸ் மினரல்சுடன் ,பாப்புவா நாட்டுப் பிரதமர் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த ஒப்பந்தப்படி ,அந்நாட்டின் கடல் பகுதியில் படிந்துள்ள தங்கம், துத்தநாகம், செம்பு, போன்ற கனிமங்களைத் தோண்டியெடுப்பது என்றும், நாட்டிற்கு கொடுத்தது போக ,தனக்கும், அதிபருக்கும், தனியாக கவனிக்க வேண்டும் என்றும் கைசாத்தாகியுள்ளது.1,600 மீ. ஆழத்தில் HYDRO THERMAL VENT முறையில் தோண்டப்படும் கனிமங்களால் இவர்களது வாழ்க்கை செழிக்கப் போகிறது. செளத் ஆம்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிஞர் பால் டெய்லரின் கூற்றுப்படி ,அங்குள்ள உயிரமைப்பான FAUNA முற்றிலும் சிதைவடையப்போகிறது. இனி ஒரு காலமும் உருவாக்க முடியாது. சுரங்கம் தோண்டத் தோண்ட கடல் முற்றிலும் மாசடையும். FAUNA இல்லாமல் போகும். அரிய கடல்வாழ் உயிர்கள் உயிரிழக்க நேரிடும் என புலம்புவது SCIENCE DAILY ல் ஒரு துணுக்குச் செய்தியாகத்தான் வெளிவந்துள்ளது. கனடா கம்பெனியின் சேர்மன் ,தாங்கள் போட்டிருக்கும் முதலீட்டிற்கு ,ஒரு நாளைக்கு 1.2 முதல் 1.8 டன்கள் உயர்ரக சல்பைட் மூலத் தாதுவைத் தோண்டி எடுத்தால்தான் ,இன்றைக்கு இருக்கும் தேவைக்கு ஏற்றாற் போல் தங்களால் செயல்பட முடியும் என்கிறார்.

1872ல்தான் முதன் முதலாக கடலில் கனிம வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உலகிற்குத் தெரியப்படுத்தப்பட்டது. தற்போதைய நவீன ஆராய்ச்சி சில மாதங்களுக்கு முன்பு ZAIRE நாட்டில் அதிகளவு கனிமங்கள் படிமங்களாகத் தேங்கிக் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. 4000 --6000 மீ. தொலைவில் நிக்கல், கோபால்ட், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்றவை உள்ளது. இதை தோண்டி எடுத்து முறையாகப் பிரித்தெடுக்க பெரும் முதலீடு தேவைப்படுகிறது. கடலின் மிக ஆழத்தில் உள்ள சகதியில் புதைந்துள்ள இக்கனிமங்கள் நாட்டின் பெரும் பொருளாதாரப் பின்புலமாக விளங்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக இதன் அதிபர் கூறுகிறார். இவர் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் ,மிகச் சாதாரண மீனவர் முதல் படித்த, பாண்டித்தியம் பெற்ற ஆய்வறிஞர்கள் வரை இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தான்.இது போன்ற ஓர் ஆய்வு ,பரிசோதனை முறையில் செங்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இனிவரும் காலங்களில் கடலை நம்பியே ஆக வேண்டிய சூழல் வரலாம். இப்போதே சுவிட்சர்லாந்து போன்றவை, தங்கள் காற்றாலைக் கம்பங்களைக் கடலில் அமைத்து வருகின்றன. காரணம் அங்கு கிடைக்கும் தங்கு தடையில்லாத காற்று . வரும் காலங்களில் கலைஞர் குடும்பமும் ,ஆந்திரா கம்பெனிகளுக்குப் பதிலாகத் தாங்களே இத்தகைய பெரும் தொழிலில் ஈடுபடலாம். அம்மா கேள்வி கேட்டால் ,திராவிட நாட்டில், திராவிடனுக்கு இல்லாத தொழில் சுதந்திரமா? என பதிலும் கூறலாம்!! கோபால்ட் இருப்பதிலேயே மிக முக்கிய கனிமம். ஜப்பான், அமெரிக்கா நாட்டுச் சந்தைகள் இதற்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றன. அதிகமான விலை ஏற்றம் உள்ளதும், அத்தியாவசியமானதும் இதுவே. குறிப்பாக ஜெட் விமான எஞ்சின் தயாரிப்புகளுக்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது. சுனாமி பாதித்த கடல் வடி பகுதிகள், எரிமலைக் குழம்பு ,இயற்கையிலேயே ஏற்பட்ட பூமி பிளவு போன்ற இடங்களிலிருந்து மட்டுமே இதுகாறும் தோண்டி எடுக்கப்பட்ட கோபால்ட், தற்போது கடலில்,ZAIRE நாட்டில் தோண்டியெடுக்கப்பட உள்ளது. 340 வருடங்களுக்கு நம் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு இங்கு படிந்துள்ளது. இதற்காக 100 இடங்களில் சோதனை நடத்தப்பட உள்ளது. POLY METALLIC SULPHURIC DEPOSITS என இது அழைக்கப்படுகிறது. 1958ல் ஐநா நடத்திய ஜெனிவா மாநாட்டில் LOS என அழைக்கப்படும் (LAW OF SEA) 1958 கடல் சார் ஆய்வு குறித்து சட்டங்களும், நியதிகளும் வகுக்கப்பட்டன. அப்போது அது பெரும் கவனம் பெறவில்லை. இதில் பாதுகாப்பு, எல்லை நிர்ணயம், சர்வதேச கடல் எல்லை அறிதல் ,பாதையை சரி செய்தல், உயிரின சேதம் குறைத்தல், இயற்கையை பாதுகாத்தல், என பல அம்சங்கள் காணப்படுகின்றன. வழக்கம் போலவே அமெரிக்கா இச்சட்ட வரையறையை கண்டுகொள்ளவே இல்லை. 1970 ல் அதிபராக வந்த ரொனால்ட் ரீகன், வேண்டுமெனில் சட்டத்தில் சாத்தியமாகும் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். கடல்மாசு அடைவதைத் தடுப்பது ,எல்லைகளைக் கடக்காமல் பார்த்துக் கொள்வது போன்ற அபத்த சட்டங்களை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ,தொழிலை முடக்கும் இத்தகைய வாதங்கள் கடும் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என்றும் காட்டத்துடன் பேட்டியளித்தார்.

" சுற்றுச்சூழல் பற்றி அதிகம் பேசுவோர் ஒன்று கவனிக்க வேண்டும் .சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத கார் தயாரிக்க 2 மடங்கு தாமிரம் தேவைப்படும். அது என்ன வானிலிருந்தா கொட்டும்? எங்கு கிடைக்கிறதோ ,அங்குதான் தோண்டியெடுக்க முடியும். நேற்று நிலத்தில் ,இன்று கடலில். இதில் ஒன்றும் தவறு இல்லையே?" இப்படி பேசிக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானவர் ,டாக்டர் .டேவிட் ஹெயிட்டன். வான் கூவரில் தலைமை அலுவலகம் அமைத்து ,பாப்புவா நாட்டில் கடல் கனிம வள ஆராய்ச்சி செய்யும் நிறுவனத்தின் சேர்மன்.இவரின் கடல் கனிம வள தோண்டல் குறித்துக் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இதுவரை எந்த நிறுவனமும் தோண்டாத அளவு தாமிரம், தங்கம், வெள்ளி, ஈயம் என பெருமளவில் தோண்டியெடுத்ததைப் பெரும் சீரழிவு இயற்கைக்கு இழைக்கப்பட்டதாகவே கருதுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.120 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வர்த்தக உடன்படிக்கைக்கு பிறகு, ராட்சச இயந்திரங்கள் ,பிரம்மாண்ட போர்க்கப்பல்கள் கொண்டு 1700 மீ. ஆழத்தில் தோண்டும் பணி துவங்கியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ,பாப்புவாவின் பிஸ்மார்க் கடலில் இவர் தோண்டியெடுத்த தங்கமும், தாமிரமும் உலகின் பார்வையை இவரின் பக்கம் திருப்பியது. 1950ல் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணையும், வாயுவும், ஒரு வரலாற்றுச் சாதனை என்றால், இப்போது நடத்தப்படும் ,கடல் கனிம ஆய்வு ,மக்களின் அன்றாட தேவை கருதியே தவிர மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்கிறார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சீன ,இந்திய மக்கள் அதிகளவு கனிமங்களை உபயோகிக்கத் துவங்கியுள்ளனர். எல்லா நேரமும் சூரிய ஒளி கலன் பொருத்தப்பட்ட கார்களோ ,அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற பொருட்களோ தயாரிக்கமுடியாது. அவ்வாறு தான் வாழ்வேன் என்றால் நீங்கள் நாகரீகம் இல்லாத காட்டுமிராண்டிகளாகவும், கழுதை, குதிரைகளைப் பயணத்திற்கு உபயோகிப்பவராகவுமே இருக்க வேண்டும். சுற்றுச் சூழல் பற்றி பேசுவோர் வீட்டில் நிச்சயம் "பிளாஸ்மா டி.வி. " உள்ளது. அது தயாரிக்க ஈயமும் ,தாமிரமும் வேண்டாமா? காபி மேக்கர், ஆடம்பரப் பொருட்கள், அடுப்பறை சாமான்கள் என உலகம் விரிவடைகிறது. பலரின் எண்ணமும் இங்கு மதிக்கப்பட வேண்டும் என்பதற்கு சில கண்டுபிடிப்புகள் அத்தியாவசியமாகிறது என நீண்ட விளக்கம் அளித்து ,பல ஆர்வலர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார்.

இவரின் தலைமையில் பசிபிக் பெருங்கடல் ,பிஜி, சாலமன் தீவுகள், பாப்புவா கடல் பகுதிகளில் பெரும் கனிம வளத் திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு ஏராளமான தங்கப் படிமங்கள் இருக்கலாம். சுத்தப்படுத்தப்படாத கனிம மண் படிமங்கள் மிதப்பதால் ,நீர் மாசடையும். இவரைப் பார்த்து இங்கிலாந்து கம்பெனியும் போட்டி போடுகிறது. அய்யோ........... இயற்கைக்குப் பேரழிவை ஏற்படுத்துகிறோமே எனப் புலம்புவதை விட ,அறிவியலின் துணையுடன் நாம் வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதுதான் புத்திசாலித்தனம். நாளைய கருத்துக்கள் பற்றிய கவலையை விடுங்கள் .நீங்கள் அழிக்காவிட்டால் வேறு யாராவது இப்பூமியில் இயற்கைக்குக் குந்தகம் விளைவிக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஒருபுறம் காடுகளை வெட்டுவதும் மறுபுறம் உருவாக்குவதும் இப்போதெல்லாம் சர்வ சாதாரணம் .அதுபோலத்தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது இவரது மற்றொரு அறிக்கை.
இப்படி பேசும் மனிதர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? ....காசி காண்டத்தைப் படித்தாவது யாராவது கூறுங்களேன்......!

0 கருத்துகள்: