புதன், 8 டிசம்பர், 2010

தமிழீழக் கோரிக்கை தோல்வியடைந்தால் இந்தியாவின் பூகோள அரசியல் ஓர் துக்க சாகரமாக மாறலாம்

எழுதியது: உலகத்தழிழ் இணையச் செய்தியாளர்

சிங்கள சிறிலங்கா நடத்திய, தமிழினப் படுகொலையையும், தமிழரின் போராட்டத்திற்கு எதிரான போருக்கும் முற்று முழுவதுமாக டில்லியின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்த நாரணயனின் “டில்லி மூவர் அணி”, டில்லிக்கு சீனாவையே காரணம் காண்பித்தனர். ஆனால், இந்தியாவிற்கெதிரான தன்னுடைய யுத்த தந்திரத் திட்டத்தில் இந்தியாவைச் சுற்றி வளைக்க வெளிப்படையாக முயற்சிகளை மேற்கொண்டதும் மட்டுமன்றிப் பகிங்கரமாக அறிவிக்கவும் செய்த சீனாவின் பக்கம் செல்லும் இலங்கையை, தன்பக்கம் இழுக்கும் டெல்லியின் முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போனது மனவருத்தத்திற்குரியதே.

நேரு – சூயென்லாய் ஆகியோரது கொள்கைச் சார்பற்ற நாடுகள் அமைப்புகளின் (NAM) ‘தேனிலவு’ ஆண்டுகள் ; முடிந்த கையோடு, இந்தியா எதிர்பாராத நேரத்தில், அதன் வட-கிழக்கு எல்லைகளில் படையெடுத்துப் பெருமளவிலான நிலப்பரப்பைக் கபளீகரம் செய்த சீனாவின் அதிரடியான நிலை இன்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதைப் பிரபல ஆய்வாளர்கள் உறுதிபடுத்துகின்றனர்.
தற்போதைய நிலையில், இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளான பர்மா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளைத் தனது நேசமிகு நாடுகளாகச் சீனா உருவாக்கியிருக்கிறது. மே 2009 வரை, சிங்கள இலங்கையின் ஊடாகச் சீனாவால் இந்தியாவிற்கு வரக்கூடிய அபாயத்தைத் தமிழீழ நிர்வாகம் (விடுதலைப் புலிகள்) தவிர்த்தது.
ஆனால், சிங்கள இலங்கையோடு கைக்கோர்த்துக் கொண்டு, இனப்படுகொலையை ஆதரித்ததன் மூலம், தமிழீழ நிர்வாகத்தால் கிடைத்துவந்த பலத்தைத் இந்தியா தூக்கியெறிந்தது என ஆய்வாளர் பத்திரக்குமார் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கையில் உள்ள இராணுவத் தளங்கள் வாயிலாக, இந்தியாவின் அமைதிப் பிராந்தியமான தென்னகத்தே, வரக்கூடிய சீனாவின் அச்சுறுத்தலை, நடேறி அடிகள், அனில் அத்லே போன்ற பிரபல ஆய்வாளர்கள் அறிவுறுத்தும் வகையில் விமர்சிக்கின்றனர். இலங்கையில் நிலைகொண்டுவிட்ட சீனாவின் அச்சுறுத்தல், தேசப்பக்தியுள்ள ஒவ்வொரு இந்தியனையும் கவலைப்படச் செய்தாலும், டில்லியில் இருக்கும் அரசியல் பீடத்தை அவை அசைக்கவில்லை என்றே தோணுகிறது.
சீனாவால் ஏற்படும் பூகோள அரசியலில், தமிழீழத்தினால் இழந்த பாதுகாப்பை நிவர்த்தி செய்ய, அமெரிக்க – இலங்கையின் தொடர்பில் நிர்மாணிக்கப்பட வேண்டிய கொள்கைபற்றி, அமெரிக்க வெளியுறவுக்கான செனட் குழுவின், ஜான் கெர்ரி அறிக்கையில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.
இவ்விடயம் அமெரிக்காவை நேரடியாக அச்சுறுத்தாத போதும் இதை அமெரிக்கா அவசரமாகக் கவனத்தில் கொள்கிறது. ஆனால், தனக்கு மிக அருகாமையிலும் தனது பிராந்தியத்தில் உருவாகிவரும் இத்தகைய மிக முக்கியமான அச்சுறுத்தலை இந்திய  கொள்கை வகுப்பாளர்கள் கருத்திலெடுக்காது, கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்திருப்பது கவலை ஊட்டுகிறது.
அரசியல், பொருளாதார-இராஜதந்திர ரீதிகளில் பெருந்தொகையான முதலீட்டையும் செய்து அமைதியான தெற்குப்புறத்தின் வாசற்படியில் இத்தகைய ஓரு அச்சுறுத்துலை கொண்டுவந்ததில் டில்லியின் மூவர் அணியே முக்கிய காரணம் ஆவர். இப்படியாக, ஆழங்காண முடியாத, ஆபத்தான செங்குத்துச் சரிவை நோக்கி, டில்லியின் இலங்கை-இந்திய கொள்கைகள் திசைதடுமாறி இழுபட்டுச் செல்கின்றன.
நாராயணனின் தற்கொலைக்கு ஒப்பான கொள்கைகள், இந்திய தமிழ் நாட்டின் கரையோரங்களின் அருகே இதுவரை காலமும் இல்லாத அளவிலான, சீனாவின் ஆபத்தைக் கொண்டு வந்துள்ளன. நாராயணன், தமது குறுகிய நோக்குக் கொண்ட தமிழ் எதிர்ப்புக் கொள்கைகளை மூடி மறைப்பதற்காக, பூகோள அரசியல் ஒன்றைப் படைத்து, அதன் மூலம் டிக்சித்தைப் போன்று தலையிடும் கொள்கையைத் தவிர்த்து, அதற்கெதிரான இராஜபக்சேவை சந்தோஷப்படுத்தும் கொள்கையைத் தான் மேற்கொள்வதாக விளக்கம் கொடுத்தார்.
1983-ல் டிக்சித் மேற்கொண்ட பிரதேசத் தலையீட்டுக் கொள்கை, அவரிடம் இலங்கையரசின் மதிப்பை ஏற்படுத்தி, அதன் விளைவாக 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கியது. இதன் பலனாக, இலங்கை அரசானது இந்தியாவின் பிராந்திய வலுவிற்குப் போட்டியான வேறு சக்திகள் எதுவும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ இலங்கையுடன் கொண்டாடுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது, நாராயணனின் குறுகிய நோக்குக் கொண்ட கொள்கையினால், ஈழத்தமிழரின் தடைவலு இல்லாத இடத்து, சீனா, இந்தியாவின் பிராந்திய வலுவைச் சுலபமாகக் கட்டுப்படுத்தும் நிலையில் உருவாகிவிட்டது.
அதே போல, டில்லி மூவர் அணியின் குறுகிய நோக்குக் கொண்ட பூகோள அரசியல் பணி மூலம், தமிழீழப் பாதுகாப்பை அழித்ததால் சிங்கள இலங்கையில் காலூன்ற, இந்தியாவிற்கு சீனாவோடு நேரடியாக அபாயகரமாக மோதிக்கொள்ளும் நிலையை உருவாக்கி, இலங்கையில் நிலைகொள்ளும் நோக்குடன் வளர்ச்சிக்கேற்ற வேலைத்திட்ட ஒப்பந்தங்களை இலங்கை அரசிடம் சீனாவுடன் போட்டிபோட்டுப்  பெறும் நிலைக்கு இந்தியாவைத் தள்ளிவிட்டது. யுத்த தந்திர ரீதியில் ஐயப்பாட்டிற்குரிய ஒரு சில வேலைத்தி;ட்டங்கள் மட்டுமே சிங்கள இலங்கையில், இந்தியாவிற்குக் கொடுக்கப்பட்டுள்ளன என்றாலும், அவற்றில் இருந்து வரும் இலாபங்கள், சிங்கள இலங்கையில் சீனாவின் வேலைத் திட்டங்களால், இந்தியாவின் இறையாண்மைக்கு உருவாகிவரும் யுத்த தந்திர ஆபத்துகளைத் தடுத்துக்கொள்வதற்காக ஏற்படும் செலவுகளுடன் ஒப்பிடும்போது, இந்த வருமானம் ஒரு தினையளவு ஆகும்.
தமிழீழத்தால் கிடைத்த பாதுகாப்பை இழந்தபின், “உலகில் உள்ள போட்டியாளர்களிடையில் காணப்படும் பேரம் பேசும் சூழ்நிலையை இலங்கை தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையை நன்கு உணர்ந்திருக்கிறது” என அமெரிக்க செனட் குழுவின் கெர்ரி அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமன்றி, தமிழீழப் பாதுகாப்பு, இலங்கையின் கடலோர எல்லையில் மூன்றில் இரண்டைக் கட்டுப்படுத்தி, தேவையேற்பட்ட போது ஜப்பான் உட்பட்ட நேச நாடுகளுக்குச் செல்லும் எண்ணை விநியோகம் முதலியனவற்றைத் தலையீடு ஏற்பட்டால் தடுப்பதற்கேற்ற சக்தியைக் கொடுத்தது என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. அத்துடன் சீனா, சிங்கள இலங்கையைப் பாவித்து இந்தியாவின் ஸ்திரத்தன்மையை பலவீனபடுத்தும் முயற்சியை மேற்கொள்வதையும் தெளிவாக குறிப்பிடுகிறது.
தமிழீழத்தை அழித்ததன் மூலம் இலங்கையானது சீனாவை நோக்கிச் சென்றுவிட்டது என்பதானது, அமெரிக்கா சந்தித்த சவால்கள் எல்லாவற்றிலும் பெரிதெனக் கூறுகிறது. அதற்கு இராஜபக்சேவே பொறுப்பாகின்றார் என கெர்ரி அறிக்கையானது மேலும் தெரிவிக்கின்றது.. இப்படிப்பட்ட ஆபத்தான, பதட்ட நிலையில் உள்ள அரசியல் நிலைமை ‘நாராயணனின் மூவர் அணியினால்’ உருவாக்கப்பட்ட பின்பும் சீனாவிடம் இழுத்துச் செல்லப்படும் பயமூட்டக்கூடிய நிலையைத் தடுப்பதற்கான முயற்சிகளை எதிர்ப்பதிலும் அது உடந்தையாக இருந்தது என்பது ஆச்சரியம் ஊட்டுகிறது. இத்தகைய ‘பூகோள அரசியல்’ சோனியாவின் குழுவினரின் பசியைத் தீர்க்க மாத்திரம் உகந்தது.
பெரிய புத்திஜீவி என மதிக்கப்பட்ட நாராயணன், போர்த்தந்திரத்தின் முக்கியத்துவம் பெறும் அம்பாந்தோட்டையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு பிடியைச் சீனாவுக்கு இலங்கை கொடுத்ததை அலட்சியம் செய்தார். இதன் மூலம், ‘டில்லி மூவர்’ எந்த நாட்டுக்காகப் பாடுபடுகிறார்கள் என்ற கேள்வி வாசகர்களிடையே எழலாம். இந்த விடயத்தில் நாராயணின் வெளிப்படையான குறுகிய தமிழ் விரோதப் போக்கு ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது.
இப்படியான நாராயணின் தவறுதலான கொள்கையினால், மும்பாய் மற்றும் தெலுங்கானா விடயத்தில் மாநில பிரிவினைவாதத்தைத் தூண்டி இந்தியாவின் ஒற்றுமைக்கு பாரிய அழிவை அடித்தளமிட்டது. அவரின் வர்க்க பாகுபாடும் இந்தியாவிற்கு ஏற்படுத்திய பயங்கர விளைவுகள் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டும். சீனப் பிரச்சனையின் வாயிலாக, சேது கால்வாய் திட்டத்தின் மூலம் தமிழ் நாட்டிற்கு கிடைக்கவிருந்த நண்மைகள் அனைத்தையும் அழித்தொழிக்கும் என்பதையும் நாராயணன் நன்கு அறிந்திருந்தார்.
பாக் ஜலசந்தி வழியாகப் போகும் கப்பல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அம்பாந்தோட்டையானது, இராணுவத்தளமான மன்னார் மற்றும் கச்சதீவில் உள்ள முக்கிய தளங்களிலிருந்தும் ஒரு சில மணி நேர பயண தூரத்திலேயே அமைந்துள்ளன. நன்கு இராணுவ மயப்படுத்தப்பட்ட வட இலங்கைக்கு மேலாக இவற்றையும் இராணுவ மயப்படுத்த வேண்டிய தேவையென்ன என்ற கேள்விக்குத் தகுந்த நியாயம் கூறப்பட வேண்டும். வெளிநாட்டுச் சக்திகளுக்கு எதிராக இலங்கை இராணுவமயப்படுத்தப்படுவது ஏற்கக்கூடியது.
ஆனால் இந்தியாவும் தமிழ் நாடும் இலங்கையைத் தயவில் வைத்திருக்க முயற்சிக்கையில், அவர்கள் எதிராளிகளாக முடியுமா? இலங்கை அரசை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு டில்லி, தமிழ்நாட்டு மீனவர்களாகிய தனது சொந்தக் குடி மக்களின் பாதுகாப்பையே புறந்தள்ளி வருகிறது. இராஜிவின் காலத்திற்கு பின் சோனியாவின் தமிழ் நாட்டு எதிர்ப்புக் கொள்கைளின் உட்காரணங்களைப்பற்றி ‘இலங்கையின் இரத்தக்களரியின் பின்’ எனும் தனது ஆங்கில நூலில் புது டில்லியின் யுத்த வியூக ஆராய்ச்சியாளரான பிரம்ம செல்லானி கூறுகிறார். இவற்றின் நோக்கின்படி டில்லி மூவர் அணியானது சீனாவோடு சேர்ந்துக் கொண்டு, தமிழ் நாட்டை இன்னுமொரு காஷ்மீராக மாற்றும் பணியினில் செயற்படுகிறது எனக்கொள்ளலாம்.
அம்பாந்தோட்டையில் சீனா தன்னுடைய வேலையாட்களையே பணியில் இருத்தும் என்பதை அறிந்திருந்தும் ‘டில்லி மூவர்’ பாராமுகமாக இருந்தனர்.. (இது இராணுவத்தினரை உட்புகுத்தப் பல ஆப்பிரிக்க நாடுகளில் சீனா கையாண்ட ஒரு தந்திரமாகும்). தமிழ்நாட்டை அச்சுறுத்தி தன்பிடியில் வைத்துக்கொள்ள, கொழும்பு-டில்லி-பீஜிங்-ன் யுத்த தந்திரமென இதை நோக்க முடியுமா? இவை எல்லாவற்றிலும் சீனாவே கூடிய இலாபமடைந்தது எனலாம்.
ஹிமாச்சல் பிரதேசத்தை மீட்க முயற்சிக்கும் அதே நேரத்தில், இந்தியாவின் ‘அடிவயிற்றில்’ இன்னுமொரு கணக்கிடப்பட்ட இராணுவ யுத்த முனையைத் திறப்பது என்பதானது விலை மதிப்பிடமுடியாத பலன் அளிக்கும் எனக்கொள்ளலாம். தமிழீழ அச்சுறுத்தல் இல்லாத நிலையில் இலங்கையானது, பாக் ஜலசந்தியில் ஆயுதமற்ற இந்திய மீனவரைத் தனது கடற்படையால், அடிக்கடி தாக்கி அவமானப்படுத்தி உயிருக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவையும் தமிழ் நாட்டையும் தன்பால் கவனம் ஈர்த்து வருகின்றது. மூன்று தசாப்தங்களாகத் தமிழீழ கடற்படையானது, தமிழ் நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையிலிருந்து காப்பாற்றி வந்தது.
வெளிநாட்டு அரசுகள் இலங்கையில் இராணுவ ரீதியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் காலூன்றுவதைத் தடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் சில சரத்துகள் வழிவகுக்கும். தெற்கு எல்லை இந்தியாவிற்கு ஒரு சிம்ம சொப்பனமாக மாறும் முன்பு, இலங்கையின் ஊடாக, இந்தியாவிற்குச் சீனாவால் ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர்க்க இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக பலப்படுத்தப்பட வேண்டும்.
பேராசிரியர் சூரியநாராயணின் ‘இந்தியாவின் இருதரப்பு ஒப்பந்தங்களும் – மத்திய அரசும் தொடர்பும் – தமிழ் நாட்டு பார்வை’ எனும் பிப்ரவரி 2010 சாக் (ளுயுயுபு) மாநாட்டில் வெளியிடப்பட்ட கட்டுரை இந்நேரத்தில் பரிசீலிக்கப்பட வேண்டியது ஒன்றாகும். இலங்கை அரசை இந்தியா சமாதானப்படுத்த முற்பட்ட ஒவ்வொரு தடவையும் அதனால் இந்தியாவிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் பாரதூரமானவை. 1966 சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தில் 5 இலட்சம் மலையகத் தமிழர்களை அவர்களின் தலைவனாகிய தொண்டமானுடன் கலந்தாலோசிக்காது உள்வாங்கியதும், அதன்பின் 11-ல் 4 தமழர்கள் மாத்திரமே இலங்கை குடியுரிமை பெற்றதும், மீதி 64 வீதம் வாக்குரிமை இழந்ததும் நாம் அறிந்ததே. இப்படியான ஒப்பந்தமானது, வருங்காலத்தில் தமிழர்கள் அதிகளவில் வாழும் மலேசியா போன்ற வேறு நாடுகளும் இந்தியரை நாடு கடத்த வாய்ப்பளிக்கிறது.
இராமநாதபுர இராஜாவின் சாமிந்தரப் பரப்பின் ஒரு பகுதியான கச்சதீவையும் அங்கு தமிழ்நாட்டு மீனவரின் மீன்பிடி உரிமையையும் 1974 சிரிமாவோ-இந்திரா ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்குக் கையளிக்கப்பட்டது. ஆனால் மேல் நீதி மன்ற வழக்கின் மூலம் இதனை தமிழ் நாட்டு அரசு மீளப் பெறலாம் (மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சர், டாக்டர் பி.சி. ராய், எவ்வாறு பெறு பாரி பகுதியை கிழக்கு பாக்கிஸ்தானிடமிருந்து மீட்டது போல) எனச் சட்ட வல்லுநர் கருதுகின்றனர்.
இலங்கையின் ஐயப்பாடு நிறைந்த நட்பிற்காக, தமிழ்நாட்டில் நிலவும் கசப்புணர்வையும் டில்லி அரசு அலட்சியம் செய்கிறது. இந்திய வெளிநாட்டுக் கொள்கையைத் தட்டிக் கேட்க இந்தியாவின் அரசின் யாப்பில் சரத்துகள் இல்லாதது துர்ப்பாக்கியம் ஆகும். அமெரிக்காவில் உள்ளது போல் ஓர் அரசியல் யாப்பு இருந்தால், ‘நாராயணன் மூவர் அணியினர்’ மத்திய அரசின் கொள்கையைத் தமிழ் நாட்டினதும் இந்தியாவினதும் பாதுகாப்புக்கு எதிராக வகுப்பதைத் தடுத்திருக்க முடியும்.

0 கருத்துகள்: